top of page

கனி தரும் சபை எவ்வாறு உருவானது?

  • Kirupakaran
  • 3 hours ago
  • 6 min read

 

கலங்கரை விளக்கத்தின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? அது ஒட்டுமொத்த நிலப்பரப்பையோ அல்லது கடற்கரையையோ முழுமையாக ஒளிரச் செய்யாமல் போகலாம். ஆனால் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு வழிநடத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. கடல் இருளாகவும் ஆபத்தாகவும் காணப்படும் புயல் நிறைந்த இரவில், அந்த கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒரு சிறிய ஒளிக்கதிர், மாலுமிகள் தங்கள் வழியைக் கண்டறிய உதவுகிறது.

அதேபோல், சபை சிறியதாகவோ, கவனிக்கப்படாததாகவோ தோன்றலாம்;, ஆனால் கிறிஸ்துவின் ஒளி அதன் வழியாகப் பிரகாசிக்கும்போது, அது பலரது வாழ்க்கையை நம்பிக்கை மற்றும் சத்தியத்தை நோக்கி வழிநடத்தும்.

 

தேவன் பெரும்பாலும் சாதாரண மனிதர்கள் மற்றும் இடங்களின் மூலமாகவே செயல்படுகிறார்

உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். கொலோசெயர் 2:1

 

பவுலின் நிருபங்களை நாம் வாசிக்கும்போது, கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தையும் காண்கிறோம். ஒருவேளை கொலோசெ பட்டணத்தில் ஒரு சபை நிறுவப்படாமல் இருந்திருந்தால், புதிய ஏற்பாட்டில் அந்த ஊரின் பெயரே இடம் பெற்றிருக்காது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பவுல் அந்தத் திருச்சபையைத் தொடங்கவில்லை, அவர் அங்கே ஒருபோதும் சென்றதுமில்லை. அங்கிருந்த விசுவாசிகளை அவர் நேரில் சந்திக்காதபோதும் (கொலோசெயர் 2:1), அவர்களுடைய விசுவாசத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார் (கொலோசெயர் 1:4,9). ஒரு சிறிய ஊரில் இருந்த சாதாரண மக்களைக் கொண்ட ஒரு சபையாக இருந்தபோதிலும், அவர்கள் மகா அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து இறை ஏவுதலினால் ஒரு கடிதத்தைப் பெற்றார்கள்.

 

கொலோசெ திருச்சபை எப்படி உருவானது? இது அநேகமாக எபேசுவில் பவுல் ஆற்றிய மூன்று ஆண்டு கால ஊழியத்தின் விளைவாக வளர்ந்திருக்கலாம் (அப்போஸ்தலர் 19; 20:17–38). அந்த காலகட்டத்தில், நற்செய்தி அந்த பிராந்தியம் முழுவதும் பரவியது. கொலோசெ சபை விசுவாசிகளில் பெரும்பாலானோர் புறஜாதியினராகவும், புறமதப்பின்னணியில் இருந்து வந்தவர்களாகவும் இருந்தனர். இருப்பினும், கலாத்திய விசுவாசிகளைப் போலவே, இவர்களும் யூத சட்டங்களைப் பின்பற்ற வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர், மேலும், புறம்பான சட்டங்களாலும் பொய்ப் போதனைகளாலும் பாதிக்கப்பட்டனர்.

 

கொலோசெ திருச்சபை எப்படி உருவானது?

எபேசுவில் பவுல் ஊழியம் செய்தபோது, கொலோசெயைச் சேர்ந்த குறைந்தது இரண்டு மனிதர்கள் இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் வைத்தார்கள் —அவர்கள்தான் எப்பாப்பிரா மற்றும் பிலேமோன் (பிலேமோன் 19).


  • எப்பாப்பிரா - இவர் கொலோசெயில் திருச்சபையைத் தொடங்க உதவிய முக்கிய நபர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். நற்செய்தியைக் கேட்ட பிறகு, அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று, கிறிஸ்துவின் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார் (கொலோசெயர் 1:7). அவருடைய ஊழியம் கொலோசெயோடு நின்றுவிடவில்லை; அவர் அருகிலுள்ள எராப்போலி மற்றும் லவோதிக்கேயா நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கும் ஊழியம் செய்தார் (கொலோசெயர் 4:12-13).


  • பிலேமோன் – கொலோசெ பட்டணத்தில் இருந்த மற்றொரு முக்கியமான விசுவாசி பிலேமோன். அவருடைய வீட்டிலே சபை கூடி வந்தது (பிலேமோன் 2). அந்த வசனத்தில் அப்பியாளும் அர்க்கிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளனர்; இவர்கள் அநேகமாக பிலேமோனின் மனைவியும் மகனுமாக இருக்கலாம். அர்க்கிப்பு அந்தத் திருச்சபையில் ஒரு தலைவராகவோ அல்லது போதகராகவோ பணியாற்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது (கொலோசெயர் 4:17).

    • எப்பாப்பிரா மற்றும் பிலேமோன் போன்ற மனிதர்களின் உண்மைத்தன்மையின் மூலமாக, தேவன் பல பட்டணங்களில் சபைகளை நிறுவினார். எபேசு போன்ற பெரிய பட்டணங்களில் உள்ள விசுவாசிகள், சிறிய ஊர்களுக்கும் சமூகங்களுக்கும் நற்செய்தியைக் கொண்டு செல்வதில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதை இது நமக்குக் காட்டுகிறது.


நமக்கான பாடம்

இங்கே ஒரு முக்கியமான பாடம் உள்ளது. ஒரு சபையைத் தொடங்குவதற்கு தேவனுக்கு எப்போதும் அப்போஸ்தலர்களோ அல்லது முழுநேர ஊழியர்களோ தேவைப்படுவதில்லை. நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ள சாதாரண விசுவாசிகளை - முழுநேரப் போதகர்களாக இல்லாதவர்களைக் கூட - அவர் பயன்படுத்துகிறார்.

 

 கொலோசெ திருச்சபையின் ஆவிக்குரிய அடித்தளங்கள்

இந்தச் சாதாரண விசுவாசிகளை இந்த சபையை வளர்க்கத் தூண்டியது எது? இதற்கான பதிலை பவுல் அந்த நிருபத்தின் முன்னுரையில் (கொலோசெயர் 1:1–14) குறிப்பிடுவதிலிருந்து நாம் காணலாம்.

தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கொலோசெயர் 1:1-2

 

தனது ஆரம்ப வார்த்தைகளில், பவுல் சுருக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தக் கடிதத்திற்குப் பின்னால் உள்ள அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார். அவர் தன்னை, "தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும்" (வசனம் 1) என்று விவரிக்கிறார். அவருடைய அடையாளமும் அழைப்பும் மனிதர்களிடமிருந்து வரவில்லை, மாறாக தேவனுடைய நோக்கத்திலிருந்து வந்தவை. இதைப் போலவே, ஒவ்வொரு விசுவாசியும் இறுதியில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கே உரியவர்கள்.

 

சிறையில் இருந்துகொண்டே, பவுல் தான் நேரில் பார்த்திராத ஒரு சபைக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறார். எப்பாப்பிரா மற்றும் பிலேமோன் போன்ற சாதாரண விசுவாசிகளின் உழைப்பே இதற்குக் காரணமாக இருந்தது. கிறிஸ்துவின் மாற்றியமைக்கும் வல்லமை அவர்களின் ஜீவியத்தின் மூலம் வெளிப்பட்டது.

 

கனி தரும் சபையின் நான்கு முக்கிய அடித்தளங்கள்

சாதாரண விசுவாசிகள் ஆவிக்குரிய ரீதியில் வளர்வதற்குக் காரணமாய் இருந்த நான்கு முக்கிய அடையாளங்கள்: கிருபை, சமாதானம், ஸ்தோத்திரஞ்செலுத்துதல் மற்றும் பரிசுத்தம்.

 

பரிசுத்தம்

  • பரிசுத்தம் என்பது ஆண்டவருக்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இது தேவனின் இருதயத்தோடு உடன்பட்டு வாழ்வதாகும் — அவர் நேசிப்பதை நேசிப்பதும், அவர் வெறுப்பதை வெறுப்பதும், அவருடைய வார்த்தையின்படி நம் வாழ்க்கையை அளவிடுவதும் ஆகும்.

  • பவுல் இரண்டாம் வசனத்தில் கொலோசெயிலுள்ள விசுவாசிகளை "கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு" என்று வாழ்த்துகிறார்.

 

கிருபை

  • கிருபை என்பது தகுதியற்ற நமக்குக் கிடைக்கும் தேவனுடைய தயவு.

  • கிருபை என்பது தகுதியற்றவர்களுக்கு தேவன் அளிக்கும் இலவசப் பரிசு. இது நாம் சம்பாதிப்பதல்ல, அவருடைய அன்பினால் நாம் பெற்றுக்கொள்வது.

  • கிருபை நமக்கு இரட்சிப்பைத் தருவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான பெலனையும் நமக்கு அளிக்கிறது.

  • கிருபை நம்முடைய பாவங்களைக் கையாளுகிறது, அதே சமயம் இரக்கம் நம்முடைய துன்பத்திலும் தேவையிலும் நம்மைச் சந்திக்கிறது.

  • கிருபை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானது, அதை யாராலும் சம்பாதிக்க முடியாது, தேவன் மட்டுமே இலவசமாக வழங்க முடியும். இதுவே கிறிஸ்துவுக்குள் நாம் பெறும் புதிய வாழ்வின் "வேர்".

  • "உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக" - இந்த வாக்கியம் புதிய ஏற்பாட்டில் 11 முறை இடம் பெற்றுள்ளது.

 

சமாதானம்

கிருபையிலிருந்து சமாதானம் ஊற்றெடுக்கிறது. தேவனுடைய கிருபையினால், விசுவாசிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.

  • தேவனோடு சமாதானம்: அவருக்கு முன்பாக இனி எவ்வித ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை.

  • மனசாட்சியில் சமாதானம்: தேவனுடன் இனி எந்த முரண்பாடும் இல்லை.

  • மனதில் சமாதானம்: கவலைகளிலிருந்து விடுதலை.

  • செயல்களில் சமாதானம்: வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மையையும் சரியான திசையையும் தருகிறது.

எல்லாக் கிருபையும் பொருந்திய தேவனே சமாதானத்தின் தேவனாகவும் இருக்கிறார்.

 

ஸ்தோத்திரஞ்செலுத்துதல்

கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். கொலோசெயர் 1:3-5

  • கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் ஒரே சரீரத்தின் அவயவங்களாய் இருக்கிறோம் (1 கொரிந்தியர் 12:12–13). ஒரு விசுவாசியோ அல்லது ஒரு சபையோ பலப்படும்போது, அது கிறிஸ்துவின் முழு சரீரத்தையும் பலப்படுத்துகிறது.

  • கொலோசெ திருச்சபையிடம் காணப்பட்ட விசுவாசம், அன்பு, நம்பிக்கை என்ற இந்த மூன்று முக்கியமான ஆசீர்வாதங்களுக்காக பவுல் விசேஷமாக தேவனுக்கு நன்றி செலுத்தினார். கிறிஸ்துவின் மேல் அவர்கள் கொண்ட விசுவாசமும், மற்றவர்கள் மேல் அவர்கள் காட்டிய அன்பும், பரலோகத்தில் அவர்களுக்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையிலிருந்து உருவானவை. இந்த நம்பிக்கையை அவர்கள் சத்திய வசனமாகிய நற்செய்தியின் மூலம் கேட்டறிந்தார்கள்.

  • தமது நன்மையினாலும் கிருபையினாலும் பாவத்தின் பிரச்சினைக்குத் தீர்வுகண்ட நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள இரட்சிப்பிற்காகவே நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

  • கொலோசெ விசுவாசிகளைப் போலவே, நாமும் தினமும், "ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகரியும்" என்று ஜெபிக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் வளரும்போது, அது மற்றவர்கள் மீதான அன்பாகப் பொங்கி வழிய வேண்டும். மேலும், தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ள நித்திய சுதந்தரத்தின் நம்பிக்கையினால் அது பலப்படுத்தப்பட வேண்டும்.

 

சிந்தனைக்கு:

நம்மை உருவாக்கும் நான்கு முக்கிய அடித்தளங்கள்: கிருபை, சமாதானம், ஸ்தோத்திரஞ்செலுத்துதல் மற்றும் தேவனுடைய பரிசுத்தம்.

  • இன்று நீங்கள் எந்தச் சிறையில் இருக்கிறீர்கள்? - பவுல் இந்தக் கடிதத்தைச் சிறையிலிருந்தே எழுதினார், ஆனாலும் அந்தக் கடினமான இடமே தேவனுடைய கிரியைக்கான ஒரு தளமாக மாறியது. கடினமான சூழ்நிலைகள் ஒருபோதும் தேவனுடைய நோக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்கும்போது, நமது போராட்டங்கள் கூட கிறிஸ்துவின் நற்செய்தி பிரகாசிப்பதற்கான வாய்ப்புகளாக மாறும். தேவன் நம்முடைய சிறைகளை கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் மேடைகளாக மாற்றுவாராக.

  • மற்றவர்களைப் பற்றி நாம் என்ன தீர்ப்புச் சொல்லுகிறோம்? - அநேக நேரங்களில், சக விசுவாசிகளை நாம் பார்க்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் செய்து வரும் கிரியைகளை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய குறைகளையே நாம் விரைவாகக் கவனிக்கிறோம். மற்றவர்களைக் குற்றப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் அவர்களுக்குள் செய்து வரும் நற்கிரியைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

இதுவே நம்முடைய தினசரி ஜெபமாக இருக்கட்டும்: "ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகரியும். அது கிறிஸ்துவின் அன்பினாலும், பரலோகத்தில் எங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையினாலும் பொங்கி வழியட்டும்". இது, "அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்" (யோவான் 3:30) என்ற யோவான்ஸ்நானகனின் ஜெபத்தைப் போன்றது.

 

கனி தரும் ஊழியர்கள்: எப்பாப்பிராவின் உதாரணம்

அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும்பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள். ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். கொலோசெயர் 1:6-8

  • கிறிஸ்துவின் நற்செய்தி மனிதர்களுடைய வாழ்க்கையில் உண்மையான கனிகளைத் தருகிறது.

  • நற்செய்தியின் தனித்துவமே அது கிறிஸ்துவின் வழியாக அன்பை உருவாக்குவதுதான்; அந்த அன்பு ஒருவரது வாழ்வில் உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

  • ஒருவர் கிறிஸ்துவிடமிருந்து விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கையை உண்மையாகப் பெற்றுக்கொள்ளும்போது, நற்செய்தி அவரில் கனி தருகிறது. இவை அனைத்தும் தேவனுடைய கிருபையினாலேயே உண்டாகின்றன.

  • விசுவாசம், அன்பு மற்றும் நம்பிக்கை ஆகிய இவை நமக்குள் வளரும்போது, அவை கிறிஸ்துவுக்குள் ஒரு பெரிய மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன. அந்த மகிழ்ச்சி, நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மைத் தூண்டுகிறது. இப்படித்தான் சுவிசேஷம் தொடர்ந்து பலனைத் தருகிறது.

  • கிறிஸ்துவின் சத்தியம் வேறெந்த செய்தியாலும் செய்ய முடியாத விதத்தில் மனித வாழ்க்கையை மாற்றியமைக்கிறது.

 

இதை நாம் கொலோசெ சபை வளரக் காரணமாய் இருந்த எப்பாப்பிராவின் வாழ்க்கையிலும் காண்கிறோம்:

  • அவருக்கு ஒரு பணிவிடைக்காரனின் இருதயம் இருந்தது. ஒரு ஊழியக்காரனுக்கு இருக்க வேண்டிய உண்மையான தேவ சுபாவம் பணிவிடைக்காரனாக இருப்பதே. அவர் உண்மையில் ஒரு அறியப்படாத ஊழியக்காரராக இருந்தார்.

  • அவர் ஒரு உண்மையுள்ள ஊழியக்காரர். தனது பெயரை முன்னிலைப்படுத்துவதை விட, தேவனுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்திய ஒரு உண்மையுள்ள ஊழியக்காரராக அவர் இருந்தார்.

  • அவரது ஊழியம் கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றியிருந்தது: எந்தவொரு ஊழியமோ அல்லது சபையோ வளர்வதற்கான உண்மையான அடையாளம் இதுவே.

 

இதன் காரணமாக, எப்பாப்பிராவுக்குள் வளர்ந்த நற்செய்தி என்னும் விதை அதிக கனிகளைத் தந்தது; இது அநேக புறஜாதிகளை கிறிஸ்துவிடம் கொண்டு வந்தது. ஒரு உண்மையுள்ள ஊழியக்காரர் மூலம் தேவன் செயல்படுகிறார் என்பதற்கு இது எவ்வளவு அழகான ஒரு சாட்சி!

 

சிந்தனைக்கு:

இயற்கையான ஒரு கனியில் உள்ள விதைகள் மீண்டும் முளைத்து உயிர் கொடுக்கும் வல்லமை கொண்டவை. ஆனால், மரபணு மாற்றப்பட்ட சில கனிகளில் உள்ள விதைகள் மீண்டும் முளைப்பதில்லை.

 

அதேபோல, உண்மையான நற்செய்தி உண்மையான ஆவிக்குரிய கனிகளை உருவாக்குகிறது; ஆனால் தவறான போதனைகளால் உண்மையான வளர்ச்சியைத் தர முடியாது. கிறிஸ்துவின் உண்மையான கனிகளைத் தராத செய்திகளைக் குறித்து விழிப்புடன் இருங்கள்.

 

 

கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் கனிகளைத் தரும் பரிந்து பேசும் ஜெபத்தின் ஆறு அம்சங்கள்


இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. கொலோசெயர் 1:9-14

 

பவுல் கொலோசெ விசுவாசிகளுக்காக இடைவிடாமல் ஜெபித்தார், "உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்" (வசனம் 9).

 

ஒரு சாதாரண விசுவாசி எப்படி கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் கனி தரும் வாழ்க்கைக்குள் வளர முடியும் என்பதற்கான ஆறு முக்கிய வழிகளை அவரது ஜெபம் வெளிப்படுத்துகிறது.

  1. தேவனுடைய சித்தத்தை அறிய ஜெபியுங்கள்: உலகப்பிரகாரமான சிந்தனையினால் அல்லாமல், பரிசுத்த ஆவியானவர் அருளும் ஞானத்தினாலும் விவேகத்தினாலும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினால் நம்மை நிரப்பும்படி வேண்டுவோம்.

  2. தேவனுக்குப் பிரியமான வாழ்க்கைக்காக ஜெபியுங்கள்: நாம் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட பிறகு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; அதன் மூலம் நமது வாழ்க்கை அவரைப் பிரதிபலிப்பதாகவும், நாம் செய்யும் அனைத்திலும் அவருக்குப் பிரியமானதாகவும் அமைய வேண்டிக்கொள்வோம்.

  3. கனி தரும் வாழ்க்கைக்காக ஜெபியுங்கள்: நாம் கீழ்ப்படிதலோடு நடக்கும்போது, கிறிஸ்து நமக்குள் கிரியை செய்கிறார்; அதன் மூலம் நம்முடைய வாழ்க்கை நற்கிரியைகள் மூலம் கனிகளைத் தரத் தொடங்குகிறது.

  4. ஆவிக்குரிய பலத்திற்காக ஜெபியுங்கள்: நாம் அவருடைய அறிவில் வளரவும், சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சியோடு வாழவும் தேவன் தம்முடைய வல்லமையினால் நம்மைப் பலப்படுத்துகிறார்.

  5. நன்றி நிறைந்த இருதயத்தோடு ஜெபியுங்கள்: நமக்குள்ள அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றன என்பதை உணர்ந்து, பிதாவிற்கு மகிழ்ச்சியோடு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

  6. மற்றவர்களுடன் ஒளியைப் பகிர்ந்து கொள்ள ஜெபியுங்கள்: இரட்சிப்பின் மகிழ்ச்சியுடன், கிறிஸ்து நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுவித்து, தம்முடைய ஒளியின் ராஜ்யத்திற்குள் கொண்டுவந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம்.

 

இந்த ஜெபங்களின் மூலம், சாதாரண விசுவாசிகள் கிறிஸ்துவுக்காகக் கனி தரும் வாழ்க்கை வாழ்பவர்களாக மாற்றப்படுகிறார்கள்; மேலும் நற்செய்தி உலகம் முழுவதும் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது.

 

முடிவுரை: சாதாரண மனிதர்களைக் கொண்டு தேவன் அசாதாரணமான கனிகளைக் கொடுக்கிறார்.

 

ஒரு எழுப்புதலைக் கொண்டுவர தேவன் எப்போதும் பெரிய தலைவர்களையோ அல்லது புகழ்பெற்ற போதகர்களையோ தேடுவதில்லை என்பதையே கொலோசெ சபையின் வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. பெரும்பாலும், அவருக்கு ஊழியம் செய்ய முன்வரும் சாதாரண மனிதர்கள் மூலமாகவே அவர் கிரியை செய்கிறார். இயேசு தாமே சாதாரண மீனவர்களைத் தான் தம்முடைய சீஷர்களாகும்படி அழைத்தார்.

 

ஒரு சபையின் பலம் மனித திறமையால் வருவதல்ல, அது தேவனுக்குக் கீழ்ப்படியும் தாழ்மையான இருதயங்களிலிருந்தே வருகிறது. "அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்." (யோவான் 3:30) என்று யோவான்ஸ்நானகன் வெளிப்படுத்திய அந்த பணிவிடைக்காரனின் மனப்பக்குவத்தோடு நாம் வாழும்போது நம்முடைய அழைப்பின் மூலம் தேவன் வல்லமையாகக் கிரியை செய்ய முடியும்.

 

நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்து பெருகவும் நாம் சிறுகவும் செய்யும்போது, சாதாரண மனிதர்களும், நிலைத்திருக்கும் கனிகளைக் கொண்டுவருவதற்கு தேவன் பயன்படுத்தும் கருவிகளாக மாற முடியும்.

 

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page