top of page

யேகோவா மக்கே : உருவாக்கும் தேவன்

  • Kirupakaran
  • Mar 3, 2024
  • 4 min read

ree

பல சமயங்களில் நல்லவர்களுக்கு ஏதாவது கெட்டது நடப்பதைக் காண்கிறோம். நல்ல மனிதர்கள் நன்மையானதை செய்வதாக நம் பார்வையில் உணர்கிறோம், ஆனால் தேவனின் நோக்கம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்களைச் சிறந்தவர்களாக மாற்றுவதும், புதிய உயரங்களுக்குச் செம்மைப்படுத்துவதும் ஆகும். தேவனின் இந்த செயல் யேகோவா மக்கே என்று அழைக்கப்படுகிறது - அடிப்பதன் மூலம் உருவாக்கும் தேவன்.

 

நம்முடைய தேவன் வைராக்கியமுள்ள தேவன். அவரை தொழுது கொள்வதற்கு  பல நாமங்களைப் பயன்படுத்துகிறோம். அதில் ஒன்று யேகோவா : அதற்கு அவர் மாறாத, நெருக்கமான தேவன் என்று அர்த்தம்.

 

நாம் தொழுதுகொள்ள பல நாமங்கள் யேகோவாவில் உள்ளன.

  • யேகோவா - நித்தியமானவர், நெருக்கமான தேவன்

  • யேகோவாயீரே - தேவைகளை சந்திக்கும் கர்த்தர்

  • யேகோவா நிசி - ஜெயம் தரும் கர்த்தர்

  • யேகோவா ரப்பா - பரிகாரியாகிய கர்த்தர், குணமாக்குகிற கர்த்தர்

  • யேகோவா ரோஹி - கர்த்தர் என் மேய்ப்பர்

  • யேகோவா சிட்கேனு - நீதியானவர்

  • யேகோவா ஷாலோம் - சமாதானம் தருகிறவர்

  • யேகோவா ஷம்மா – கூட இருக்கிறவர்

  • யேகோவா மக்கே - அடிப்பதன் மூலம் வடிவமைப்பவர்

 

கிறிஸ்தவ வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் பரிபூரணமாக மாற நாம் ஒரு பந்தயத்தில் ஓடுகிறோம். ஆனால் நாம் வாழும் இவ்வுலகில் சாத்தானின் பாவங்களால் தள்ளப்பட்டுள்ளோம். இவைகள் நம்மைக் கயிற்றால் கட்டிப்போட்டு ஓட முடியாமல் ஆக்குகின்றன. தேவையற்ற விஷயங்கள் நம் ஓட்டத்தை ஆக்கிரமிக்கும் போது, தேவன் கோபமடைந்து, அவர் நம்மை அடிக்கிறார் - யேகோவா-மக்கே. ஒரு பிதா தன் பிள்ளையை வளைப்பது போல, அவர் நம்மைத் திருத்துவதற்கு நம்மை வளைத்து, சிறந்த ஆசீர்வாதத்தைத் தருகிறார்.  


யேகோவா மக்கே

இஸ்ரவேலர்களை யேகோவா-மக்கே என்னும் நாமத்தின்படி தேவன் எப்படிக் கையாண்டார் என்பதை எசேக்கியேல் புத்தகத்தில் அறிந்துகொள்ளலாம். இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன். என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புக்களுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். எசேக்கியேல் 7:8-9

  • ஜனங்கள் பாவத்தில் தொடர்ந்தால் நிச்சயமாக மடிந்து போவார்கள் என்று தேவன் சொன்ன நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நேரம் வந்துவிட்டது; நேபுகாத்நேச்சார் தன் வழியில் நடந்து கொண்டிருந்தார்.  அவர்கள் மீது நியாயத்தீர்ப்பு நாள் இருந்தது. “அடிக்கிறவராகிய நான் கர்த்தர்" என்று தேவன் கூறியதாக எசேக்கியேல் வெளிப்படுத்துகிறார். இஸ்ரவேலர்கள் அவரை யேகோவாயீரே, யேகோவாநிசி என்பது போன்று அறிந்திருந்தாலும், யேகோவா-மக்கேயும் இருக்கிறார் என்பதை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

  • நாம் யேகோவா-மக்கேயைப் பற்றி பேசும்போது, தேவனுக்கு விரோதமான, அவிசுவாசமான உலகத்தின் மீதான அவரது கோபத்தைப் பற்றியோ அல்லது இஸ்ரவேலில் தாக்கத்தை உண்டாக்கிய நாடுகளின் மீதான தேவனின் தீர்ப்பைப் பற்றியோ விவாதிக்கவில்லை. பாவத்தில் தொலைந்து போன தம்முடைய தெரிந்து கொண்ட ஜனங்களின் மீதான தேவனின் தீர்மானமான தண்டனையைக் குறித்தே இங்கே பேசுகிறோம். (எசேக்கியேல் 9; 1 பேதுரு 4:17; வெளிப்படுத்தின விசேஷம் 2:16).

    • நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 1 பேதுரு 4:17

    • நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:16

  • தேவன் நியாயாதிபதிகளையும் தீர்க்கதரிசிகளையும் அவர்களின் தீமையான  வழிகளின் நிமித்தம் பல சந்தர்ப்பங்களில் எச்சரித்தார். நியாயத்தீர்ப்பு வந்துவிட்டது என்று எச்சரிக்க இங்கே தேவன் எசேக்கியேலைப் பயன்படுத்துகிறார். தேவன் கோபத்திற்குத் தாமதிப்பவராகவும், இரக்கத்தில் பெருகியவராகவும் இருந்து, மனந்திரும்புவதற்கு அவர்களுக்கு பலமுறை வாய்ப்புகளைக் கொடுக்கிறார். மனந்திரும்புவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய அருவருப்பான செயல்களில் தொடர்ந்தனர் - உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புக்களுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்.

  • இஸ்ரவேலர்கள் ஈடுபட்டிருந்த அருவருப்பான பழக்கங்கள் என்ன? -   முதன்மையானவை பெருமை மற்றும் விக்கிரகாராதனை.

  • இதுவரை எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிக சிறந்த புத்தகமான வேதத்தை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, மனந்திரும்பாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் எச்சரிக்கைகள் இதில்நிறைந்திருக்கிறது. கிறிஸ்து நியாயத்தீர்ப்பில் திரும்புவார் என்றும், நாம் விதைப்பதையே அறுவடை செய்வோம் என்றும் வாக்களிக்கப்பட்டுள்ளோம்.

  • அதற்கு வேறு எந்த வழியும் இல்லை! மனந்திரும்புதலின் மூலம் தேவனுடன் ஒரு உறவை விதைத்தால், நாம் அவருடன் நித்தியத்தை அறுவடை செய்யலாம்.

 

தேவன் யேகோவா மக்கே வாக மாறும்படி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்ன ?

1.   நம் பெருமை : தேவனுக்கு முன்பாக மிகவும் அருவருப்பான விஷயங்களில் ஒன்று பெருமை. நம் வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பெருமிதம் கொள்ளும்போது, ​​நாம் அதைப் பற்றி பெருமை பேசிக் கொண்டு தேவனுக்குரிய மகிமையைத் தராமல் போகிறோம். பெருமை சாத்தானிடம் இருந்து வருகிறது. தேவன் பெருமைக்கு எதிர்த்து நிற்கிறார். அவர் எப்படி தாழ்மையாக இருக்கிறாரோ, அதுபோல நாமும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 1 கொரிந்தியர் 1:28-29

2.   அவருடனான நம் உறவு : நம் தேவன் வைராக்கியமுள்ள தேவன். நாம் அவருடன் நடக்காதபோதும், அவருடனான உறவைப் புறக்கணிக்கும்போதும் அவர் அதிருப்தி அடைகிறார். (ஜெபத்திற்கும் வேதத்தை தியானிப்பதற்கும் நாம் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும்போது இது நிகழலாம்).

  • ஜெப நேரம் என்பது நாம் அவருடன் பேசுவதும், அவர் நாம் பேசுவதைக் கேட்பதும் ஆகும். நம் ஜெப நேரத்தை எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் அவர் அதிருப்தி அடைகிறார்.

  • தியானம் என்பது அவர் தமது வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசி நம்மை வழிநடத்துவது ஆகும். நாம் தியானிக்கும் நேரத்தை விட்டு  வெளியே நேரத்தை செலவிடும் போது அவர் அதிருப்தி அடைகிறார்.

3.   உலகத்தின் விக்கிரகங்கள்

  • நம் வாழ்க்கையில் விக்கிரகங்களை வைத்திருக்கத் தொடங்கும் போது அவர் அதிருப்தி அடைகிறார் ( இது நிஜமான விக்கிரகங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இதில் வேலை / உடை / நாம் முதன்மையாக நினைக்கும் வாழ்க்கை விஷயங்களும் அடங்கும்).

4.   நமது ஆவிக்குரிய முதிர்ச்சியில் பூமிக்குரிய ஆசீர்வாதங்களின் தாக்கம் 

  • ஒவ்வொரு பூமிக்குரிய ஆசீர்வாதமும் நம் ஆவிக்குரிய முதிர்ச்சியை மங்கலாக்குகிறது. உலகில் அவர் நம்மை ஆசீர்வதிக்கும்போது நாம் அவரை தொடர்ந்து கனம் பண்ணுகிறோமா அல்லது அசட்டை பண்ணுகிறோமா என்பதை தேவன் பார்க்கிறார். இந்த பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் நாம் பின்வாங்கும்போது நம்மைத் திருத்துவதற்கு ஒரு புயலை அனுப்புவார். அவர் வைராக்கியமுள்ள தேவன்.

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபிரேயர் 12:28-29

 

யேகோவா மக்கே - அவர் எவ்வாறு திருத்தத்தை செயல்படுத்துகிறார்?

  • யேகோவா மக்கே நமது அன்பான பரலோகத் தகப்பன் என்பதை நினைவில் கொள்வோம். எது சிறந்தது என்று அவருக்குத் தெரியும்.

  • தேவன் நம்மை மிகவும் நேசிக்கும்போது, ​​நம்மைத் திருத்துவதற்காக எதிரி நம்மீது கை வைக்க அவர் அனுமதிக்கிறார். இது நோய், சரீர பலவீனங்கள், நஷ்டம், ஏமாற்றம், இழப்பு, பாடுகள் அல்லது மனவேதனைகள் என வெவ்வேறு வடிவங்களில் வரலாம்.

  • தேவன் யாரையும் மனப்பூர்வமாக சஞ்சலப்படுத்துகிறதில்லை. அவர் நம்மை ஒழுங்குபடுத்தும்போது ஏதாவது நன்மை கொடுக்கப்படுகிறது. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. புலம்பல் 3:32-33

 

நாம் செய்யக்கூடிய செயல்கள்

  • மனந்திரும்பி, தேவனாகிய கர்த்தரைத் தேடுங்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவரிடம் திரும்புங்கள்.

  • நாம் முழு இருதயத்தோடு மனந்திரும்பி அவரை நெருங்கியவுடன் தேவன் தம்முடைய தண்டனையின் பிரம்பை கைவிடுவார்.

  • இறுதிக்காலங்களில் தேவனுடைய உக்கிரம் பயங்கரமாக இருக்கும். பயங்கரமான நியாயத்தீர்ப்பு நாட்களை நம்மால் தாங்க முடியாது. கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? யோவேல் 2:11

  • நீங்கள் தேவபிள்ளையாக இருந்தால், உங்களை வழி விலக வைத்த பாவங்களுக்காக மனந்திரும்புங்கள். யேகோவா மக்கே நமது அன்பான பரலோகத் தகப்பன் என்பதை நினைவில் கொள்வோம். எது சிறந்தது என்று அவருக்கு இன்னும் தெரியும். நீங்கள் கடந்து செல்லும் போராட்டங்கள் உங்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்காகத் தான். அப்பொழுது தான், இயேசுவின் பரிபூரணத்திற்கு நம் வாழ்க்கையை முடிக்க அவர் மீது கண்களை வைப்போம். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். எபிரேயர் 12:2

 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page