யாபேசின் ஜெபம்: வலியிலிருந்து வெற்றிக்கு
- Kirupakaran
- 19 hours ago
- 8 min read

சில நேரங்களில் நாம் நீண்ட காலமாக ஜெபித்துக் கொண்டிருப்போம், ஆனால் எதுவுமே மாறுவது போலத் தெரியாது. மெதுவாக, ஜெபம் ஒரு வழக்கமாக மாறி, நம் இருதயம் சோர்வடைகிறது. ஆனால், உண்மையான, ஊக்கமான ஒரு ஜெபம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதை வேதாகமம் நமக்குக் காட்டுகிறது.
ஜெபத்தின் வல்லமை நாம் எத்தனை முறை ஜெபிக்கிறோம் என்பதில் இல்லை; நாம் எப்படி ஜெபிக்கிறோம் என்பதிலும், தேவனுக்கு முன்பாக நம் இருதயத்தின் உண்மையிலுமே இருக்கிறது. ஒரு ஜெபம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அது ஊக்கமானதாகவும் முழு மனதோடும் இருக்க வேண்டும்.
யாபேஸைப் பற்றி
வேதாகமத்தில் 1 நாளாகமம் 1 முதல் 4 அதிகாரங்கள் வரை வாசிக்கும்போது, பெரும்பாலும் குடும்பப் பெயர்கள் மற்றும் வம்சாவளிகளின் நீண்ட பட்டியல்களைக் காண்கிறோம். இந்தப் பட்டியலின் நடுவே, திடீரென்று யாபேஸ் என்னும் ஒரு மனிதனை சந்திக்கிறோம். பல பெயர்களுக்கு மத்தியில், எதிர்பாராத விதமாக வெறும் இரண்டு வசனங்களில் மட்டுமே அவரது பெயர் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதாகமத்தின் வேறு எந்த இடத்திலும் யாபேஸைப் பற்றிய குறிப்புகள் இல்லை. அவரது வாழ்க்கை சிரமங்களுடனேத் தொடங்கியதாகத் தெரிகிறது. அவர் பிறந்தபோது அவரது தாயார் மிகுந்த வேதனையை அனுபவித்ததால் துக்கத்துடன் தொடர்புடைய ஒரு பெயரை அவருக்கு வைத்தார். வாழ்க்கையில் அவருக்குப் பெரிய வாய்ப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், மற்றவர்களிடமிருந்து யாபேஸை வேறுபடுத்திக் காட்டியது தேவனிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமே. தனது சூழ்நிலையோ அல்லது தனது பெயரோ தன்னை அடையாளப்படுத்துவதை அனுமதிக்காமல் தேவனிடம் ஊக்கமாக ஜெபித்தார். தேவனும் அவருடைய ஜெபத்திற்குப் பதில் அளித்தார்.
வேதத்தில் யாபேஸ்
யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். 1 நாளாகமம் 4:9
வேதனையில் வேரூன்றிய வாழ்வு
யாபேஸ் என்ற பெயருக்கு, துக்கம் அல்லது துக்கத்தை உண்டாக்குபவன் என்று அர்த்தம். அவருடைய தாய் தான் அனுபவித்த வேதனையின் காரணமாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினாள்; இதனால் அவரது வாழ்க்கை ஒரு சாபத்துடன் தொடங்கியது போலவே தோன்றியது. அவள் எத்தகைய வேதனையை அனுபவித்தாள் என்பதை வேதம் துல்லியமாக விளக்கவில்லை.
பல வழிகளில், நம்முடைய வாழ்க்கையிலும் 'யாபேஸ்' போன்ற தருணங்கள் ஏற்படுகின்றன. யாபேஸைப் போலவே நம்மில் பலரும் வேதனையான சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறோம். அந்த வலியின் தன்மையும், தீவிரமும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடலாம்; ஆனால், வலி எப்போதும் பாரமாகவும், சுமப்பதற்கு கடினமாகவும் இருக்கிறது. இது உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள், தொழில் அல்லது வேலை சவால்கள், அல்லது மற்றவர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகளால் ஏற்பட்ட காயங்கள் என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய இக்கட்டான காலங்களில், நாம் தீர்வுகளைத் தேடுகிறோம் - நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையோ அல்லது அந்த வேதனையைச் சமாளிக்க உதவும் மற்ற மனிதர்களையோ நாடுகிறோம். ஆனால் யாபேஸ் வித்தியாசமாக இருந்தார், ஒரு உண்மையான ஜெபத்தோடு தேவனிடம் திரும்பினார்.
யாபேஸின் ஊக்கமான ஜெபம்
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 1 நாளாகமம் 4:10
யாபேஸ் வேதனையில் பெயரிடப்பட்டார் என்று வாசிக்கிறோம். இத்தகைய வேதனையான சூழ்நிலையில் அவர் என்ன செய்தார்?
1. அவர் தேவனை நோக்கிக் கூப்பிட்டார்
தேவனுடைய வசனம் யாபேஸைப் பற்றி இவ்வாறு கூறுகிறது – “யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து...என்று வேண்டிக்கொண்டான்…”. 1 நாளாகமம் 4:10
நாம் வேதனையின் வழியாகக் கடந்து செல்லும்போது, நம் கண்கள் கண்ணீரால் நிறைந்து நாம் அழுகிறோம். பல நேரங்களில், நம்முடைய அழுகை நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இருக்கிறது. ஆனால் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால்: நம் கண்ணீரை நாம் எங்கே கொண்டு செல்கிறோம்? அவற்றை தேவனுக்கு முன்பாகக் கொண்டு வருவதே சரியான இடமாகும்.
வேதத்தில், இரண்டு சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன: அழுதல் மற்றும் கண்ணீர் விடுதல்.
அழுதல்: கண்ணீரோடும் ஆழ்ந்த உணர்ச்சிகளோடும் வெளிப்படுத்தப்படும் ஒரு பொதுவான உணர்வு.
கண்ணீர் விடுதல்: துக்கத்தையும் உருக்கத்தையும் வெளிப்படுத்தும் ஆழமான அமைதியான ஒரு உணர்வு.
இங்கே, யாபேஸ் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, தனது வேதனையை கர்த்தருடைய பக்கம் திருப்பினார் என்று காண்கிறோம்.
தேவனுடைய மற்ற பெரிய மனிதர்களும் பெண்களும் கர்த்தருக்கு முன்பாக அழுது புலம்பிய தருணங்களையும் வேதம் பதிவு செய்துள்ளது:
அன்னாள்: தனக்குக் குழந்தை இல்லாத மனவேதனையில், அவள் மனங்கசந்து அழுதாள். "அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி...". 1 சாமுவேல் 1:10
யோசேப்பு: அவர் தனது சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியபோது, சத்தமிட்டு அழுதார். அவருடைய அழுகை எகிப்தியர்களும் பார்வோனின் வீட்டாரும் கேட்கும் அளவுக்குப் பலமாக இருந்தது. அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். ஆதியாகமம் 45:1-2
புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்து கண்ணீர் விட்டதைப் பற்றி வாசிக்கிறோம். இயேசு லாசருவின் கல்லறையருகே அழுதார். இயேசு கண்ணீர் விட்டார். யோவான் 11:35
நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது என்ன நடக்கிறது?
A) நம்முடைய உணர்ச்சிகளை தேவனுக்கு முன்பாகக் கொட்டுகிறோம்
தேவனுடைய சுபாவம் அன்பு என்பது போல அவருக்கு உருக்கம் என்ற மற்றொரு சுபாவமும் உண்டு.
அழுவது அல்லது கண்ணீர் விடுவது நம் இருதயத்தை தேவனிடம் ஊற்றுவதற்கு உதவுகிறது. நாம் அவரிடம் அழும்போது, நம்முடைய வேதனைக்குள் தேவனையும் அழைக்கிறோம். இயேசு கிறிஸ்து தாமே ஆழமான அன்பையும் உருக்கத்தையும் வெளிப்படுத்தினார். லாசருவின் கல்லறையருகே, மார்த்தாள் மற்றும் மரியாளினுடைய துக்கத்தைக் கண்டபோது அவர் கண்ணீர் விட்டார். நாம் அனுபவிக்கிற வேதனையை தேவன் புரிந்துகொள்கிறார் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. சங்கீதம் கூறுவது போல், கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். சங்கீதம் 116:5
B) தேவன் நம் கண்ணீரை நினைவில் கொள்கிறார்
துக்கத்தினால் நாம் சிந்தும் கண்ணீரை தேவன் புறக்கணிப்பதில்லை என்று வேதம் கற்பிக்கிறது. அவர் ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் காண்கிறார், அதை நினைவில் கொள்கிறார். சங்கீதம் 56:8 இல் கூறியுள்ளபடி, தேவன் நமது அலைச்சல்களை எண்ணி, நம்முடைய கண்ணீரைத் தமது துருத்தியில் சேர்த்து வைக்கிறார். இது நம்முடைய வேதனை அவருக்கு முக்கியமானது என்பதையும், அவர் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதையும் காட்டுகிறது. என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? சங்கீதம் 56:8
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
நீங்கள் வேதனையைக் கடந்து செல்லும்போது, அதை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? உலகத்தையோ, உலக இன்பங்களையோ அல்லது இந்த வேதனையிலிருந்து உங்களை விடுவிக்க உதவக்கூடிய சில மனிதர்களையோ நாடுகிறீர்களா?
இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்கிறார், நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து செல்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார். எபிரெயர் 4:15 இல் வேதம் கூறுகிறபடி, அவர் நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கிறவராக இருக்கிறார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரெயர் 4:15
2. யாபேஸின் ஐந்து பகுதிகள் கொண்ட ஜெபம்
யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 1 நாளாகமம் 4:10
யாபேஸின் ஜெபத்தில் ஐந்து எளிமையான, ஆனால் மிகவும் வலிமையான பகுதிகள் உள்ளன; அவை தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு எதை விரும்புகிறார் என்பதைப் பிரதிபலிக்கின்றன.
a. தேவரீர் என்னை ஆசீர்வதித்து
யாபேஸின் ஜெபத்தின் முதல் பகுதி ஆசீர்வாதத்தைக் கோருவதாகும்: "தேவரீர் என்னை ஆசீர்வதித்து...".
நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. ஆதியாகமத்தில் உள்ள படைப்பின் வரலாற்றை வாசிக்கும்போது, மனிதகுலத்தை ஆசீர்வதிப்பதே தேவனுடைய நோக்கமாக இருந்ததைக் காண்கிறோம். அவர் மனிதர்களைத் தமது சாயலில் படைத்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு ஜீவனையும் அவரோடு உறவாடும் திறனையும் அளித்தார்.
"ஜீவசுவாசம்" என்பது முதலாவது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பது அவரோடு ஐக்கியம் கொள்வதும், அவருடைய அன்பை அனுபவிப்பதும், அவர் நம் வாழ்வில் செய்ய விரும்பும் நற்கிரியைகளில் வளர்வதுமாகும். ஒரு மீன் உயிர் வாழ தண்ணீரை எப்படி நாடுகிறதோ, அதுபோலவே மனிதனுடைய சுவாசமும் தேவனோடு ஐக்கியத்தில் இருப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமைக்கு முன்பு அவ்வாறே இருந்தார்கள்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் ….. தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:27-28
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7
தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது, அந்த ஆசீர்வாதத்தை ஒருவராலும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. இருப்பினும், நாம் கீழ்ப்படியாமையில் நடக்கும்போது, அவருடைய ஆசீர்வாதத்தின் முழுமையை நாம் இழக்கக்கூடும். தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதே பாவம் ஆகும். சவுல் ராஜா தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்தார் என்பதை வேதாகமம் ஒரு உதாரணமாக நமக்குக் காட்டுகிறது.
b. நான் இன்னும் வளரும்படி என் எல்லைகளை விரிவாக்கும் - என் எல்லையைப் பெரிதாக்கி
யாபேஸின் ஜெபத்தின் இரண்டாம் பகுதி வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைப் பற்றியது: "என் எல்லையைப் பெரிதாக்கி...".
ஆரம்பத்திலிருந்தே (ஆதியாகமத்தில் உள்ள அவருடைய திட்டத்தின்படி), தேவன் மனிதர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி,அதைக் கீழ்ப்படுத்தி, .... ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28. தேவன் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்கள் வளர்ந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆதியாகமம் 1:28 இல் கொடுக்கப்பட்ட அதே ஆசீர்வாதம், நோவாவுக்கும் அவருடைய குமாரர்களுக்கும் கொடுக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம்.
ஈசாக்கின் வாழ்க்கையில் இதைக் காண்கிறோம்; கர்த்தர் அவரை ஆசீர்வதித்ததினால் அவர் விருத்தியடைந்தார். ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். ஆதியாகமம் 26:12-13
தேவன் இவ்வுலகின் செல்வத்திற்கோ, வெற்றிக்கோ எதிரானவர் அல்ல. இருப்பினும், செல்வமோ அல்லது பணமோ நம் இருதயத்தில் அவருக்குரிய இடத்தைப் பிடித்துக்கொள்வதை அவர் விரும்புவதில்லை. பணத்தின் மீதான ஆசை மிக வலுவாக மாறும்போது, அது பேராசையாக மாறி, தேவனை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடக்கூடும். தேவன் நம் வாழ்வில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்; அப்படி இருக்கும்போது, நமக்கு உண்மையாகவே தேவையான ஆசீர்வாதங்களை அவர் வழங்குவார்.
c. உமது கரம் என்னோடிருக்கட்டும் - உமது கரம் என்னோடிருந்து
யாபேஸின் ஜெபத்தின் மூன்றாம் பகுதி, அவர் செய்யும் காரியங்களில் தேவனுடைய கரம் அவரோடு இருக்க வேண்டும் என்பதாகும்: "உமது கரம் என்னோடிருந்து".
உண்மையான வெற்றி தன் சுய பலத்தினால் வருவதல்ல, அது தேவனிடமிருந்தே வருகிறது என்பதை யாபேஸ் புரிந்து வைத்திருந்தார்.
தேவனுடைய கரம் நம்மோடு இருக்கும்போது, அவர் நம்மை வழிநடத்தி, நாம் செய்யும் காரியங்களில் வெற்றியடையச் செய்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மற்றவர்களும் காண முடியும். இதே போன்றதொரு உதாரணத்தை யோசேப்பின் வாழ்க்கையில் காண்கிறோம். அவர் எகிப்தில் ஒரு அடிமையாக இருந்தபோதும், கர்த்தர் அவரோடு இருந்ததால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். கர்த்தர் அவருக்கு வெற்றியைக் கொடுக்கிறார் என்பதை அவருடைய எஜமானும் கண்டுகொண்டார். கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; ஆதியாகமம் 39:2-3
தேவனுடைய கரம் நம்மோடு இருக்கும்போது, நாம் அவருடைய ஆலோசனையையும் வழிநடத்துதலையும் தேடத் தொடங்குகிறோம்; நம்முடைய சுய விருப்பங்களை மட்டும் செய்யாமல், அவருக்குப் பிரியமானதைச் செய்கிறோம். நம்முடைய கவனம் நம் சுய ஆசைகளிலிருந்து மாறி, அவருடைய சித்தத்தைச் செய்வதில் நிலைபெறுகிறது.
d. என் பாதுகாப்பாளராக இரும் - தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு
யாபேஸின் ஜெபத்தின் நான்காம் பகுதி, தன்னைத் தீங்கிலிருந்து பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்பதாகும்: தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு
தேவன் நம்மை ஆசீர்வதிக்கும்போது, எதிரியானவன் (சாத்தான்) அந்த ஆசீர்வாதங்களைத் திருட விரும்புகிறான்.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10
ஆதாம் ஏவாளின் காலம் தொடங்கி இன்றுவரை, தேவனுடைய மனிதர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைத் திருடும் எதிரியின் வேலையை வேதம் முழுவதும் நாம் காண்கிறோம். முதலாவதாக, அவன் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் (சமாதானம், சந்தோஷம், அன்பு, விசுவாசம் மற்றும் தேவனோடுள்ள ஐக்கியம்) திருட விரும்புகிறான்; இரண்டாவதாக, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் (இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து வேலைகளையும்) திருடப் பார்க்கிறான். இந்தத் திருட்டு என்பது தேவனுடைய சித்தத்திற்கு எதிராகச் செயல்படுவதாகும்.
அதனால்தான் நமக்குத் தேவனுடைய பாதுகாப்பு தேவைப்படுகிறது. நம்முடைய சுய பலத்தினால் இதுபோன்ற தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியாது. உதாரணமாக, சாராளைப் பார்வோன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது தேவன் அவளைப் பாதுகாத்தார்; அவளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொருட்டு கர்த்தர் பார்வோனின் மேல் வாதைகளை வரப்பண்ணினார். ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். ஆதியாகமம் 12:17
நம்முடைய தேவன் "மிஸ்பா" என்றும் அழைக்கப்படுகிறார், மிஸ்பா என்பதற்கு "நம்மைக் கண்காணிப்பவர்" என்று பொருள். தேவன் நமக்குத் தந்துள்ள ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைத் திருட முயல்கிறவர்களிடமிருந்து அவர் நம்மைக் காத்து வழிநடத்துகிறார். அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; ஆதியாகமம் 31:49
e. நான் சாபத்திலிருந்து விடுதலையாவேன் - அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்
யாபேஸின் ஜெபத்தின் ஐந்தாவது பகுதி, அவரது பெயரோடு இணைக்கப்பட்ட வேதனையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு விண்ணப்பமாகும். யாபேஸ் என்ற பெயருக்கு, “துக்கம் அல்லது துக்கத்தை உண்டாக்குபவன்” என்று பொருள். இனிமேல் அந்தப் பாரத்தின் கீழ் தான் வாழ வேண்டியதில்லாதபடி அதை நீக்கிப்போடும்படி அவர் தேவனிடம் கேட்டார்.
யாபேஸைப் போலவே, நாமும் பாவத்தின் சாபத்தோடு பிறக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம், அந்தச் சாபம் உடைக்கப்பட முடியும். நாம் மீட்கப்படும் பொருட்டு கிறிஸ்து நமக்காகச் சாபமானார் என்று வேதம் கூறுகிறது. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். கலாத்தியர் 3:13
இந்தச் சாபத்தை முறியடிப்பது என்பது கெட்ட குமாரனின் கதையில் இயேசு சொன்னது போல, இருதயத்தின் ஆழத்திலிருந்து செய்யப்படும் உண்மையான பாவ அறிக்கையோடு தொடங்குகிறது. அந்த குமாரன் தன் பாவத்தை அறிக்கை செய்து, தந்தையிடம் திரும்பி வந்தபோது, அவன் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்பட்டான்.
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். லூக்கா 15:21-24
உண்மையாக மனம் வருந்தும்போது தேவன் என்ன செய்கிறார் என்பதை அந்தத் தகப்பனின் எதிர்வினை காட்டுகிறது:
கொழுத்த கன்றுக்குட்டியுடன் விருந்து – இயேசு சிலுவையில் ஒரு பலியாடாகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். நாம் தேவனிடம் திரும்பும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் அடையாளமே இந்த விருந்து.
உயர்ந்த வஸ்திரம் – தேவன் நம்முடைய சுயநீதிக்குப் பதிலாக, தம்முடைய நீதியின் வஸ்திரத்தை நமக்கு உடுத்தி நம்மை மீட்டெடுக்கிறார்.
கைக்கு மோதிரம் (முத்திரை மோதிரம்) – தேவன் நம்மைத் தம்முடைய ராஜ்யத்திற்குரியவர்களாக முத்திரையிடுகிறார். குமாரன் மற்றும் குமாரத்திகள் என்கிற அதிகாரத்தையும், தேவனுடைய ராஜ்யத்தைச் சார்ந்தவர்கள் என்கிற உரிமையையும் அவர் நமக்கு மீண்டும் வழங்குகிறார்.
கால்களில் பாதரட்சைகள் – இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது தேவன் அவர்களைப் பாதுகாத்தது போல, நமக்கும் ஒரு பாதுகாப்பாளராக இருந்து நம்மை வழிநடத்துகிறார்.
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. உபாகமம் 29:5
இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை. நெகேமியா 9:21
இந்த ஐந்து பகுதிகளான ஜெபத்திற்குப் பிறகு, அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். 1 நாளாகமம் 4:10 என்று வாசிக்கிறோம்.
தேவன் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும்போது, யாபேஸிற்கு என்ன நடந்தது? அவன் தன் சகோதரர்களைப் பார்க்கிலும் கனம்பெற்றவனாய் இருந்தான் என்று காண்கிறோம். யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். 1 நாளாகமம் 4:9
அதேபோல, சத்துரு நம்மிடமிருந்து திருடிக்கொண்ட நமக்குரிய கனத்தை தேவன் மீண்டும் நமக்குத் தந்தருளுவார்.
சுருக்கம்
யாபேஸின் ஜெபத்திற்குப் பதிலளித்த அதே தேவனைத்தான் நாம் சேவிக்கிறோம் — அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியிலும், உலகப்பிரகாரமான ரீதியிலும் ஆசீர்வதிக்கவும், நமது பாதுகாப்பாளராக இருந்து நம்மைக் கண்காணிக்கவும் (மிஸ்பா) விரும்புகிறார். இயேசு கிறிஸ்து தமது அன்பினால் நமக்காகச் சாபமானார். அதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்படி செய்தார். தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது உண்மையான ஜெபத்தை மட்டுமே - நம்முடைய வேதனைகளையும் உணர்வுகளையும் அவருக்கு முன்பாகக் கொண்டு வரும் உண்மையான இருதயத்தையே அவர் தேடுகிறார்.
நாம் யாபேஸைப் போல ஜெபிக்கும்போது, தேவன் நமக்குச் செவிசாய்க்கிறார். சங்கீதம் 103:14-15 நமக்கு நினைவூட்டுகிறபடி, நாம் உருவான விதத்தை தேவன் அறிவார்; நாம் மண்ணென்று அவர் நினைவு கூருகிறார். இருப்பினும், நாம் அவரைக் கூப்பிடும்படி அவர் அன்போடு நமக்காகக் காத்திருக்கிறார்.
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது;வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். சங்கீதம் 103:14-15



This is excellent brother! The message about the prayer of Jabez is very inspiring. Thank you for sharing such a powerful spiritual insight. God bless you.”