அற்புதமான விசுவாசம்
- Kirupakaran
- 2d
- 9 min read

கிறிஸ்தவ வாழ்க்கையின் மையப்புள்ளியாக ஏதேனும் ஒன்று இருக்குமானால், அது விசுவாசம் மட்டுமே. நீங்கள் எவ்வளவு காலமாக விசுவாசியாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. விசுவாசம் தான் முக்கியம். கிறிஸ்துவோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவரையும், அவரைப் பற்றி வெறுமனே தெரிந்தவரையும் பிரித்துக் காட்டுவது இந்த விசுவாசம் தான். இதில் எந்தவொரு தெளிவற்ற நிலைக்கும் வேதம் இடம் கொடுக்கவில்லை.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:6
அது ஒரு வலுவான கூற்று. சாத்தியமற்றது. கடினமானது அல்ல — சாத்தியமற்றது. அப்படியென்றால் நாம் செய்கிற ஒவ்வொன்றும், நாம் ஏறெடுக்கிற ஒவ்வொரு ஜெபமும், நாம் செய்கிற ஒவ்வொரு ஊழியமும் விசுவாசத்தில் வேரூன்றியிருக்கவில்லை என்றால் நாம் நினைப்பது போல அது தேவனைச் சென்றடைவதில்லை.
ஆனால் நம்மில் பலர் தவறவிடுவது இதைத்தான்: வேதாகமம் விசுவாசத்தை ஒரு ஒற்றை, நிலையான விஷயமாகப் பேசவில்லை. அது விசுவாசத்தை பல்வேறு வடிவங்களில் பேசுகிறது — வெவ்வேறு நிலைகள், வெவ்வேறு சூழ்நிலைகள், வெவ்வேறு செயல்பாடுகள். உங்களை இரட்சிக்கும் விசுவாசமும், மலைகளைப் பெயர்க்கும் விசுவாசமும் ஒன்றல்ல.
ஒரு குழந்தையின் விசுவாசமும், நீண்ட இருண்ட காலத்தைத் தாங்கி நிற்கும் விசுவாசமும் ஒன்றல்ல.
விசுவாசம் என்றால் என்ன?
நாம் லூக்கா 7-ஆம் அதிகாரத்தின் கதைக்குள் நுழைவதற்கு முன்பாக, விசுவாசம் என்றால் உண்மையில் என்ன என்பதைப் புரிந்து கொள்வது நமக்கு உதவியாக இருக்கும்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரேயர் 11:1
விசுவாசம் என்பது கண்மூடித்தனமான நம்பிக்கை அல்ல. அது நீங்களாகவே உங்களுக்குள் வரவழைத்துக் கொள்ளும் ஒரு உணர்ச்சியும் அல்ல. அது இன்னும் காணாத, ஆனால் முழுமையாக நம்புகிற ஒரு காரியத்தைக் குறித்த உறுதியான நம்பிக்கை — ஒரு நிச்சயம். வேதம் முழுவதும், இந்த விசுவாசமானது நபர், சூழ்நிலை மற்றும் தேவையைப் பொறுத்து முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகிறது.
விசுவாசத்தைக் குறித்து வேதம் விவரிக்கும் வெவ்வேறு வெளிப்பாடுகளைப் பற்றிய ஒரு எளிய விளக்கம் இதோ:
விசுவாசத்தின் வகை | அதன் வடிவம் | முக்கிய வசனம் |
இரட்சிக்கும் விசுவாசம் | இரட்சிப்புக்காக இயேசுவை விசுவாசிப்பது | அப்போஸ்தலர் 16:31 |
குழந்தையின் விசுவாசம் | எளிய, சிக்கலில்லாத நம்பிக்கை — எந்த நிபந்தனைகளும் அற்றது | மாற்கு 10:15 |
மாபெரும் / வியக்கத்தக்கவிசுவாசம் | இயேசுவையே வியப்பில் ஆழ்த்தும் விசுவாசம் | லூக்கா 7:9 |
அற்ப / பலவீனமான விசுவாசம் | விசுவாசம் இருந்தாலும், பயத்தால் மூழ்கடிக்கப்படுவது | மத்தேயு 8:26 |
வளரும் விசுவாசம் | அனுபவங்கள் மற்றும் சோதனைகள் மூலமாக ஆழமடையும் விசுவாசம் | 2 தெசலோனிக்கேயர் 1:3 |
செத்த விசுவாசம் | கிரியைகள் இல்லாத விசுவாசம் — எதையும் அசைக்காத விசுவாசம் | யாக்கோபு 2:26 |
ஜீவனுள்ள / கிரியையுள்ள விசுவாசம் | கீழ்ப்படிதல் மற்றும் கிரியைகள் மூலமாக வெளிப்படும் விசுவாசம் | எபிரேயர் 11 |
மலைகளை நகர்த்தும் விசுவாசம் | சாத்தியமற்ற சூழ்நிலைகளை நோக்கிப் பேசும் விசுவாசம். | மத்தேயு 17:20 |
நிலைத்திருக்கும் விசுவாசம் | நீண்ட, கடினமான காலங்களிலும் உறுதியாய் பற்றி நிற்கும் விசுவாசம் | மத்தேயு 24:13 |
கீழ்ப்படியும் விசுவாசம் | முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே, நம்பிக்கையோடு முன்செல்லும் விசுவாசம். | ரோமர் 1:5 |
நம்மில் பெரும்பாலோர் இரட்சிக்கும் விசுவாசத்திற்கும் வளரும் விசுவாசத்திற்கும் இடையில் எங்கோ தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் விசுவாசிக்கிறோம் — ஆனால் நம்முடைய விசுவாசம் பெரும்பாலும் சூழ்நிலைக்கு ஏற்பவே மாறுகிறது. நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது அது உயர்கிறது, வாழ்க்கை சீராக இருக்கும்போது அது அமைதியாகிவிடுகிறது. அதுதான் உண்மை, அந்த இடத்தில்தான் தேவன் நம்மைச் சந்திக்கிறார்.
ஆனால், இந்த அட்டவணையில் இயேசுவே வியந்து நின்று சாட்சிபகர்ந்த ஒரு விசுவாசம் இருக்கிறது. அது வளரும் விசுவாசமோ, இரட்சிக்கும் விசுவாசமோ அல்ல — அது ஆச்சரியப்படத்தக்க விசுவாசம். அது யாருமே எதிர்பாராத ஒரு நபரிடமிருந்து வந்தது – அவர்தான் ரோமானிய நூற்றுக்கு அதிபதி.
விசுவாசத்தை "அற்புதமாக" ஆக்குவது எது?
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 7:9
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு - இந்த வரியை நாம் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். இயேசு அதற்கு முன்பு எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். பெரும் கூட்டங்களுக்கு இடையே அவர் நடந்திருக்கிறார், கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார், ஜனங்கள் விரக்தியுடன் அவரிடம் ஓடி வருவதைக் கண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தருணம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. “…தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை..” என்று கூறினார்.
ஆசாரியர்களிடமிருந்தோ சீஷர்களிடமிருந்தோ அல்ல. அவரை நேரில் சந்திக்கவே செய்யாத ஒரு ரோமானிய அதிகாரிடமிருந்து அது வந்தது.
அதில் வியக்க வைத்தது விரக்தி அல்ல. நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விசுவாசம் நெருக்கடியிலிருந்து பிறந்ததே — ஒரு குருடன், ஒரு குஷ்டரோகி, துக்கத்தில் இருக்கும் ஒரு தாய், விரக்தியடைந்த ஒரு தந்தை. அவர்களுக்கு வேறு எங்கும் செல்ல வழி இல்லாததால்தான் இயேசுவிடம் வந்தார்கள். அந்த விசுவாசம் உண்மையானது, இயேசு அவர்கள் ஒவ்வொருவரையும் கனப்படுத்தினார்.
ஆனால், இந்த நூற்றுக்கு அதிபதிக்கு செல்வதற்கு வேறு இடங்கள் இருந்தன. அவரிடம் ராணுவப் பதவியும், செல்வமும், வளங்களும், சமூக மரியாதையும் இருந்தன. அவர் இயேசுவை நாட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், அவர் அதைத் தேர்ந்தெடுத்தார். அவர் வந்த வழி — அந்த வேண்டுதலுக்குப் பின்னால் இருந்த அவரது குணம் — அதுதான் இயேசுவை வியந்து நிற்க வைத்தது.
இதை எளிதாகப் புரிந்து கொள்ள இப்படி நினைத்துப் பாருங்கள்: ஒரு IAS அதிகாரி அல்லது ஒரு நிறுவனத்தின் MD அல்லது ஒரு முதலாளி தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரனின் நோயைக் குணப்படுத்த இயேசுவிடம் உதவி கேட்கிறார். அவரிடம் அதிகாரம், பணம், செல்வாக்கு, பணியாளர்கள் மற்றும் தன் ஊழியரைக் குணப்படுத்த சிறந்த மருத்துவர்கள் என எல்லாமே இருந்தும், அவர் இயேசுவிடம் வந்து உதவி கேட்கிறார். அதுதான் அந்த ரோமானிய நூற்றுக்கு அதிபதி செய்த செயல்.
அந்த நூற்றுக்கு அதிபதியிடம் இப்படிப்பட்ட ஒரு விசுவாசத்தைக் கண்டபோதுதான், இயேசு உலகத்திற்கு சாட்சியாக, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை” என்றார்.
விசுவாசத்திற்குப் பின்னால் இருந்த மனிதன்
ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதி நூறு வீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். முதலாம் நூற்றாண்டு இஸ்ரவேல் தேசத்தில், ரோமப் பேரரசு ஆதிக்கச் சக்தியாக இருந்தபோது, நூற்றுக்கு அதிபதி என்பவர் வெறும் போர்வீரர் மட்டுமல்ல, அவர் அந்தப் பகுதியின் அதிகாரமாக இருந்தார். அவரை ஒரு மாவட்டத்தின் மூத்த அரசாங்க அதிகாரியாக நினைத்துப் பாருங்கள் — அனைவரும் அவருக்குப் பணிந்து நடந்தனர், அவருடைய சொல்லுக்கு மறுபேச்சின்றி காரியங்கள் நடந்தன. அவரால் உத்தரவிட முடியும், தண்டிக்க முடியும், எதையும் கேட்டுப் பெற முடியும். மற்றவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக ஒருபோதும் குரலை உயர்த்த வேண்டியிராத மனிதராக இருந்தார்.
இந்தக் குறிப்பிட்ட நூற்றுக்கு அதிபதி, யூதர்களின் ஜெப ஆலயத்தைத் தன் சொந்தப் பணத்தைக் கொண்டு கட்டியிருந்தார். அவர் யூத மூப்பர்களால் நேசிக்கப்பட்டார் — அன்றைய அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழலில் இது மிகவும் அரிதான ஒன்று. தான் ஆட்சி செய்ய அனுப்பப்பட்ட மக்களிடமே மதிப்பையும் அன்பையும் பெற்ற ஒரு ரோமானியர். மனித அளவுகோல்களின்படி பார்த்தால், அவர் எல்லா அதிகாரமும், வசதிகளும் நிறைந்த ஒரு மனிதர்.
அற்புதமான விசுவாசத்தை உருவாக்கிய குணங்கள்
தேவ குமாரனை வியப்பில் ஆழ்த்திய விசுவாசத்தை ஒன்றிணைந்து உருவாக்கிய 10 காரியங்களை நாம் உற்று நோக்குவோம்.
அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். லூக்கா 7:2-5
1. அவர் தன் வேலைக்காரனை ஆழமாக நேசித்தார்
இந்தக் கதை ஜெபத்தோடு தொடங்கவில்லை. அது ஒரு நோயுற்ற வேலைக்காரனோடும் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாத ஒரு எஜமானோடும் தொடங்குகிறது. அந்தக் காலகட்டத்தில், வேலைக்காரர்கள் ஒரு சொத்தாகவே கருதப்பட்டார்கள். நோயுற்ற ஒரு வேலைக்காரன் சுமையாகவே பார்க்கப்பட்டான், அவனுக்குப் பதிலாக வேறொருவரை மாற்றிவிடுவார்கள். ஆனால் இந்த நூற்றுக்கு அதிபதியோ, தன் வேலைக்காரனை விட்டு விலகிச் செல்லாமல், அவனை நோக்கிச் சென்றார். பிரியமான வேலைக்காரன் என்று வசனம் சொல்கிறது — அவன் பயனுள்ளவனாகவோ அல்லது உழைப்பைக் கொடுப்பவனாகவோ இல்லை ஆனாலும் அவன் பிரியமானவனாக இருந்தான்.
அங்கே ஒரு அற்புதம் தேவைப்படுவதற்கு முன்பே, இந்த நூற்றுக்கு அதிபதி எப்படிப்பட்ட மனிதர் என்பதை அந்த ஒரு வார்த்தை வெளிப்படுத்துகிறது. மனிதர்கள் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்லது வேலைக்காரர்களோ யாராக இருந்தாலும், அவர் அவர்களை மதித்தார்.
நமக்கான பாடம் : இயேசுவை வியக்க வைத்த அந்த விசுவாசம், இந்த நூற்றுக்கு அதிபதி தனக்குக் கீழ் இருந்த மனிதர்களை எப்படி நடத்தினார் என்பதோடு நேரடியாகத் தொடர்புடையதாக இருந்தது. பொதுவாக நமக்கு மேலே இருப்பவர்களை (நம்முடைய மேலதிகாரி, பெரியவர்கள் அல்லது பதவியிலும் உயர் அந்தஸ்திலும் இருப்பவர்கள்) நன்றாகவே மதிப்போம் — அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆனால், நமக்குத் திரும்ப எதையுமே கொடுக்க முடியாத ஒருவரை மதிக்க முடியுமா? அதைத்தான் இயேசு உற்று நோக்குகிறார். அந்த நூற்றுக்கு அதிபதிக்கு வேலைக்காரன் பிரியமானவனாக இருந்தான். அவருடைய இருதயத்தின் அந்த நிலைதான், அடுத்து நடந்த எல்லாவற்றிற்கும் அடித்தளமாக அமைந்தது. |
2. அவர் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தினார்
அவருடைய அன்பு வெறும் செயலற்ற அனுதாபம் அன்று — அது அவரைச் செயல்படத் தூண்டியது. வேலைக்காரன் நோய்வாய்ப்பட்டவுடன், அவர் உடனடியாக உதவியை நாடினார். அவர் காலம் தாழ்த்தவில்லை, அதற்கான செலவைக் கணக்கிடவில்லை, எளிய வழியைத் தேடவில்லை. இது நம் மீது இயேசு கொண்டிருக்கும் இரக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நாம் வாழ்க்கையின் அதலபாதாளத்திற்குச் செல்லும் வரை இயேசு காத்திருப்பதில்லை. “வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்” என்று கேட்டதும் அவர் செயல்படுகிறார். இயேசு நேசிப்பதைப் போலவே இந்த நூற்றுக்கு அதிபதியும் முனைப்புடன், உடனடியாக, எந்தக் கணக்குகளும் பார்க்காமல் நேசித்தார்.
நமக்கான பாடம் : இரக்கம் என்பது தனக்காகச் செயல்பட முடியாத ஒருவருக்காகச் செயல்பட எடுக்கும் ஒரு முடிவாகும். இயேசு நம் மீது இரக்கமுள்ளவராக இருப்பதால், நமக்குள் இருக்கும் இந்த இரக்கத்தை அவர் கவனித்துப் பார்க்கிறார்.இரக்கம் என்பது வெறும் உணர்வு அல்ல — அது செயல்படுவதற்கான ஒரு இயக்கம்; வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட செயல். |
3. அவர் தனது செல்வாக்கை மென்மையாகப் பயன்படுத்தினார், பலவந்தமாக அல்ல.
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். லூக்கா 7:3
அவரிடம் நூறு போர்வீரர்கள் இருந்தனர். அவரே நேரடியாக இயேசுவிடம் சென்று ஒரு கட்டளையை இட்டிருக்க முடியும் — அவரை யாரும் தடுத்திருக்க மாட்டார்கள். மாறாக, யூத மூப்பர்களை தன் சார்பாகச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். அது ஒரு கட்டளை அல்ல, ஒரு வேண்டுகோள். அவர்களும் மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.
எந்தவொரு இந்திய அலுவலகத்திலும், மின்னஞ்சல் அனுப்பி வேலை வாங்கும் மேலதிகாரிக்கும், மக்களிடம் உண்மையான நம்பிக்கையை வளர்த்து, அவர்கள் தானாகவே முன்வந்து உழைக்கத் தூண்டும் ஒரு தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். அந்த நூற்றுக்கு அதிபதி அத்தகைய நம்பிக்கையை பல ஆண்டுகளாக அமைதியாகக் கட்டியெழுப்பியிருந்தார்.
நமக்கான பாடம் : யார் வேண்டுமானாலும் கட்டளையிடலாம். அது அவர்களுக்குரிய பதவியால் வருவது. ஆனால், மக்கள் உங்களுக்காகத் தாங்களாகவே முன்வந்து பேசுகிறார்கள் என்றால், அது அதிகாரத்தால் நடந்தது அல்ல. இத்தனை வருடங்களாக நீங்கள் அவர்களை நடத்திய விதமே அதற்கு முக்கியக் காரணம். யூத மூப்பர்கள் இயேசுவிடம் சென்று, அந்த நூற்றுக்கு அதிபதியின் சார்பாக மன்றாடினார்கள். அப்படிப்பட்ட விசுவாசம் ஒரே நாளில் உருவாவதில்லை. அது, தொடர்ந்து நேர்மையோடும் நீதியோடும் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்த அமைதியான பலன். |
4. அவர் சமுதாய மூப்பர்களால் மதிக்கப்பட்டார்
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். லூக்கா 7:4-5
அந்த அரசியல் மற்றும் கலாச்சாரச் சூழலில், யூத மத மூப்பர்கள் ஒரு ரோமானிய இராணுவ அதிகாரிக்கு ஆதரவாகப் பரிந்துரைப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. ஆனாலும், அவர்கள் இயேசுவிடம் சென்று, “நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்” என்று கூறினார்கள். அது ஒரு சாதாரண பாராட்டு அல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிறருக்கு முன்னுரிமை அளித்து வாழ்ந்ததன் மூலம் சம்பாதித்த சாட்சியம் அது. கலாச்சாரம், அரசியல் மற்றும் மத எல்லைகளைக் கடந்து ஒருவருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது உருவாக்கப்படக்கூடிய ஒன்றல்ல — அது தாராள குணமுள்ள வாழ்க்கையின் மூலம் மெதுவாகச் சேரும் மதிப்பாகும்.
நமக்கான பாடம் : அந்த நூற்றுக்கு அதிபதிக்கு உதவி தேவைப்பட்டபோது, மூப்பர்கள் அவருக்காக இயேசுவிடம் சென்றார்கள். அந்த நூற்றுக்கு அதிபதி என்ன செய்திருந்தார்? அவரும் தன் வேலைக்காரனுக்கு அதையேதான் செய்திருந்தார். அவர் தனக்குக் கீழ் இருந்த ஒருவருக்காகப் பரிந்து பேசினார்; இவர்களோ தங்களுக்கு மேல் இருந்த ஒருவருக்காகப் பரிந்து பேசினார்கள். அந்தப் பராமரிப்பு வளையம் — உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட ஒரு வாழ்க்கை உருவாக்குவது அதைத்தான். |
5. அவர் தேவனுடைய பணியை ஆதரித்தார், ஜெபஆலயத்தைக் கட்டினார்
அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். லூக்கா 7:5
அவர் ஒரு ரோமானியர். யூத மக்களின் வழிபாட்டுத் தலத்திற்குப் பங்களிக்க வேண்டிய எந்தக் கடமையும் அவருக்கு இருக்கவில்லை — எந்த அரசியல் ஆதாயமும், தனிப்பட்ட லாபமும், பிரதிபலனை எதிர்பார்க்கும் எண்ணமும் இருக்கவில்லை. அந்த ஆலயம் எதற்காக நிற்கிறது என்பதில் அவர் நம்பிக்கை வைத்திருந்ததால் அதைக் கட்டினார். ஒருவர் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்கு இடம்பெயர்ந்து, அங்கிருக்கும் ஒரு உள்ளூர் தேவாலயம் கட்டப்படுவதற்கு அமைதியாக நிதியளிப்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் — அது அங்கீகாரத்திற்காக அல்ல — தேவன் எதன் மீது அக்கறை கொள்கிறாரோ, அதன் மீது தாங்களும் அக்கறை கொண்டிருப்பதால் மட்டுமே. அவர் தனது சொந்த சுகபோகத்தில்அல்ல, தேவனுடைய ராஜ்யத்தில் முதலீடு செய்தார்.
நமக்கான பாடம் : தேவனுக்காக நீங்கள் கட்டுவது ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. அந்த நூற்றுக்கு அதிபதி ஒரு ஜெபஆலயத்தைக் கட்டினார் — மக்கள் ஒன்று கூடி, ஆராதித்து, தங்கள் விசுவாசத்தில் வளரக்கூடிய ஒரு இடம் அது. இயேசு அதைப் பார்த்தார். அவருடைய பதவியையோ, அவருடைய செல்வத்தையோ அவர் பார்க்கவில்லை; தேவனுடைய மக்களுக்காக அவர் கட்டியதையேப் பார்த்தார். |
6. அவர் தாழ்மையுடன் நடந்துகொண்டார்
இதுவே எல்லாவற்றிற்கும் மையப்புள்ளியாகும்.
அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். லூக்கா 7:6-7
இதைச் சற்று நிதானமாக வாசித்துப் பாருங்கள். இவர்தான் அந்த ஜெபஆலயத்தைக் கட்டியவர். அந்த மூப்பர்களால் தகுதியுள்ளவர் என்று அழைக்கப்பட்டவர், தன் அதிகாரத்தின் கீழ் நூறு போர்வீரர்களைக் கொண்டிருந்தவர். ஆனால் அவரோ — “நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை” என்று கூறினார்.
அவர் நின்றிருக்க முடியும். ஒரு மனிதனாக அவருக்கிருந்த அத்தனை தகுதிகளும், அவர் அப்படி நிமிர்ந்து நிற்பதற்கான உரிமையை அவருக்குக் கொடுத்திருந்தன. ஆனால், அவர் முழங்கால்படியிடத் தேர்ந்தெடுத்தார் — சரீரப்பிரகாரமாக அல்ல, தன் இருதயத்தில். அவர் பின்வாங்கி, மற்றவர்களைத் தனக்கு முன்னால் அனுப்பி, தான் பின்னால் இருந்து கொண்டு “ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்” என்றார்.
தாழ்மை என்பது உங்களைப் பற்றி தாழ்வாக நினைத்துக் கொள்வதல்ல. மனதிற்குள் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டு, வெளியே மட்டும் தங்களைச் சிறியவர்களாகக் காட்டிக் கொள்ளும் நடிப்பும் அல்ல. அது, "ஆண்டவரே, நான் யார் என்பது எனக்குத் தெரியும், என்னிடம் என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் இதில் எதுவுமே என்னை உம்முடைய சமூகத்தில் நிற்கத் தகுதியுள்ளவனாக்காது" என்று கூறும் ஒரு உறுதியான நம்பிக்கை. அந்த நூற்றுக்கு அதிபதி அந்த நிலையை அடைந்திருந்தார். அந்த இடத்திலிருந்துதான் உண்மையான விசுவாசம் பேசுகிறது.
நமக்கான பாடம் : தேவன் எப்போதும் சபையில் ஒலிக்கும் உரத்த குரலுக்குப் பதிலளிப்பதில்லை. அவர் தாழ்மையுள்ளவர்களுக்கே பதிலளிக்கிறார். அந்த நூற்றுக்கு அதிபதியிடம் பதவியும், செல்வாக்கும், வசதிகளும் இருந்தன — இருந்தாலும் அவர், “நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; … ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்” என்றார். அதிகார பலம் உள்ள ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட தாழ்மை வெளிப்படுவது மிகவும் அரிதான ஒன்று. இயேசு அதற்கு உடனடியாகப் பதிலளித்தார். |
7. அவர் அதிகாரத்தை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிந்தார்
நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். லூக்கா 7:8
அவர் தனது முழுப் பணிக்காலத்தையும் ஒரு அதிகார வரிசை அமைப்பிலேயே கழித்தவர். அதிகாரம் செயல்படுவதற்கு, அது நேரில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் புரிந்திருந்தார். அதே புரிதலை அவர் இயேசுவிடமும் பயன்படுத்தினார் — இயேசுவின் ஆவிக்குரியஅதிகாரம் இடம், தூரம் மற்றும் வழிமுறைகளைக் கடந்து செயல்படக்கூடியது என்பதை அவர் உணர்ந்துகொண்டார். அவர் தயக்கமின்றி, முழுமையான தெளிவோடும் நம்பிக்கையோடும் அதற்கு ஒப்புக்கொடுத்தார்.
நமக்கான பாடம் : தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது பலவீனம் அல்ல. அவர் யார் என்பதை நீங்கள் உண்மையாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதற்கான மிகத் தெளிவான அடையாளம் அது. |
8. அவர் அசாதாரணமான விசுவாசத்தைச் செயல்படுத்தினார்
நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். லூக்கா 7:7
இந்த மனிதரைப் பற்றிய எல்லாமே —அவர் வழிநடத்திய விதம், அவர் நேசித்த விதம், அவர் கொடுத்த விதம், தன்னைத் தாழ்த்திக் கொண்ட விதம் என அனைத்தும் இந்த ஒரே கணத்தில் வந்து நின்றன. அந்தத் கணம் இதுதான்: “ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்”. எந்த நிபந்தனைகளும் இல்லை. நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கை இல்லை. எந்த ஒரு அடையாளத்தையோ அல்லது சடங்கையோ அவர் கேட்கவில்லை. "ஆண்டவரே, நீர் பேசும், அது நிறைவேறிவிட்டது என்று நான் நம்புவேன்" என்பது மட்டும்தான் அது.
இந்த வகையான செயலால் இயேசு நெகிழ்ந்துபோய், கூட்டத்தின் பக்கம் திரும்பி, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை” என்று கூறினார். வேதவசனங்களை மனப்பாடமாகத் தெரிந்திருந்த ஆசாரியர்களிடமும் அவர் இதைக் காணவில்லை;நாள்தோறும் அவரோடு கூடவே நடந்த சீஷர்களிடமும் இதைக் காணவில்லை. மாறாக, இயேசுவின் சமுகத்தில் ஒரு மணி நேரம்கூடச் செலவிட்டிராத ஒரு ரோமானிய போர்வீரனிடம் இந்த விசுவாசத்தைக் கண்டார்.
9. அவர் இயேசுவின் வார்த்தையின் மூலம் மட்டுமே அற்புதத்தைப் பெற்றார்
அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். லூக்கா 7:10
அங்கே எந்தச் சடங்குகளும் இல்லை, ஆரவாரங்களும் இல்லை. கைகளை வைப்பதோ, கூட்டத்தைக் கூட்டுவதோ, பொதுமக்களுக்கு முன்பான ஒரு தருணமோ அங்கு நிகழவில்லை. அந்த மனிதர்கள் திரும்பிச் சென்றார்கள். அந்த வேலைக்காரன் குணமாகியிருந்தான். ஒரு அமைதியான அற்புதம் — சுவிசேஷங்களிலேயே இயேசு அந்த நபரிடம் செல்லாமல், அவரைத் தொடாமல், ஏன், அவரைப் பார்க்கக்கூட செய்யாமல் நிகழ்த்திய ஒரே அற்புதம் இதுமட்டும்தான். அவர் பேசினார். அது நடந்து முடிந்தது. பெரும்பாலும் அமைதியாக நடப்பவைதான் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன.
எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல், பார்வையாளர்களும் இல்லாமல், நீங்கள் இன்னும் வீட்டில் காத்துக்கொண்டிருக்கும்போதே வந்து சேரும் அந்தச் சுகம் — அதுதான் ஆழமான விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் அற்புதம்.
நமக்கான பாடம் : இயேசுவின் ஒரே ஒரு வார்த்தை போதும் என்று அந்த நூற்றுக்கு அதிபதி நம்பினார் — அதுவே போதுமானதாகவும் இருந்தது. அதே வார்த்தை இன்று வேதத்தில் நமக்குக் கிடைக்கிறது. நீங்கள் எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும் — முடங்கிப்போய், நம்பிக்கையற்று, சோர்ந்துபோயிருந்தாலும் — அவருடைய வார்த்தை இப்போதும் அதற்குள் கிரியை செய்கிறது. அது தன் வல்லமையை இழக்கவில்லை. அதை முழுமையாக நம்பி, திறந்து வாசியுங்கள். |
10. அவர் அதிகாரத்தையும் இரக்கத்தையும் இணைத்தார்
அவர் ஒரு ரோமானிய போர்வீரர் — கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் கட்டளையிடுவதற்காகவே பயிற்சி பெற்றவர். அது மென்மையான உலகம் அல்ல. அப்படியிருந்தும், இதே மனிதன் ஒரு வேலைக்காரனின் நோயைக் கண்டு கலங்கி, தாழ்மையுடன் தனது சிநேகிதரை அனுப்பினார், மேலும் மிகுந்த மரியாதையோடும் கவனத்தோடும் தேவகுமாரனை அணுகினார்.
வலிமையான தலைமைத்துவமும், மென்மையான ஒரு இருதயமும் ஒருசேர ஒரே நபரிடம் இருப்பது மிகவும் அரிதான ஒன்று. பெரும்பாலான தலைவர்களில் இதில் ஏதாவது ஒன்று தான் காணப்படும். ஆனால், இந்த நூற்றுக்கு அதிபதி இரண்டையுமே கொண்டிருந்தார் — கண்டிப்பு தேவைப்படும் இடத்தில் கண்டிப்போடும், கனிவு தேவைப்படும் இடத்தில் கனிவோடும் இருந்தார். இப்படிப்பட்ட ஒரு தலைவரைத்தான் தேவன் பயன்படுத்த முடியும்.
நமக்கான பாடம் : நீங்கள் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்தால் அல்லது அதை நோக்கி உழைத்துக் கொண்டிருந்தால் இதைக் கவனிப்பது மிகவும் அவசியமானது. உலகம் பெரும்பாலும் அதிகாரத்தையும் இரக்கத்தையும் பிரிக்க முனைகிறது. அதிக இரக்கம் காட்டினால் மக்கள் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள், அதிக அக்கறை காட்டினால் அது பலவீனமாகத் தெரியும். ஆனால், அந்த நூற்றுக்கு அதிபதியிடம் இவை இரண்டுமே இருந்தன. இயேசு அவரிடமிருந்த இரக்கத்தைப் பலவீனமாகக் கருதவில்லை. மாறாக, அவருடைய விசுவாசத்தை அசாதாரணமானதாக மாற்றி, அவரை 'அற்புதமான விசுவாசத்திற்கு' ஒரு சிறந்த சாட்சியாக நிறுத்தியதில், அந்த இரக்கத்திற்கும் ஒரு முக்கியப் பங்குண்டு என்பதையே இயேசு கண்டார். |
இயேசுவை வியக்கவைத்த விசுவாசம்
விரக்தியில் தான் விசுவாசம் பிறக்கிறது என்று நாம் நினைக்கிறோம். சேமிப்பு முழுவதும் கரைந்துபோகும்போது, நோயின் பாதிப்பு தெரியவரும்போது, வேறு எங்குமே செல்ல வழியில்லாதபோதுதான் அது உண்டாகிறது என எண்ணுகிறோம். அந்த விசுவாசமும் உண்மையானதுதான் — தேவன் ஒவ்வொரு முறையும் அங்கே நம்மைச் சந்திக்கிறார்.
ஆனால், இந்த நூற்றுக்கு அதிபதி அதைவிடக் கடினமான, அரிதான ஒன்றை நமக்குக் காட்டுகிறார். அது, வலிமையான நிலையில் தேர்ந்தெடுக்கும் விசுவாசம். அவரிடம் அதிகாரம் இருந்தது, வசதிகள் இருந்தன, சமூகத்தின் ஆதரவு இருந்தது, செல்வாக்கு இருந்தது. அவர் நிமிர்ந்து நின்றிருக்க முடியும் — அதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. ஆனாலும், அவர் முழங்கால்படியிடத் தேர்ந்தெடுத்தார்.
யாரும் பார்ப்பதற்கு முன்பே அவர் மனிதர்களுக்கு மதிப்பளித்தார். பிரதிபலன் எதிர்பாராமல் தேவனுடைய பணிக்குக் கொடுத்தார். பதவியைக் காட்டாமல் அன்போடு வழிநடத்தினார். முன்னோக்கி செல்ல முடிந்தும் ஒவ்வொரு முறையும் பின்வாங்கினார். அவர் வலிமையைக் கனிவோடும், அதிகாரத்தை இரக்கத்தோடும், உயர்ந்த பதவியைத் தாழ்மையோடும் இணைத்துக்கொண்டார். அதன் பிறகுதான் அவர், “ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்” என்றார்.
அந்த விசுவாசம் தான் இயேசுவை வியப்பில் ஆழ்த்தியது. தாழ்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வதல்ல, கடைசி முயற்சி அல்ல. ஒரு உண்மையான, உறுதியான சரணடைதல் — எல்லாம் இருந்தும், எல்லாவற்றையும் சாதித்திருந்தும், எல்லாவற்றையும் அறிந்திருந்தும் — இன்னும் இயேசுவின் முன்னால் முழங்கால்படியிட்டு, "ஆண்டவரே, நீர் ஒருவரே உண்மையான அதிகாரம் உள்ளவர்" என்று கூறி, முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்த உன்னதமான விசுவாசம் அது.
நம்மிடம் எதுவும் இல்லாதபோது விசுவாசமாக இருக்கிறோமா என்பது கேள்வியல்ல; நம்மிடம் எல்லாமே இருக்கும்போதும் — நமக்கு இன்னும் அவர் தேவைப்படுகிறாரா? என்பதுதான் கேள்வி.



Comments