top of page
  • Kirupakaran

மறுபடியும் பிறத்தல்



"மறுபடியும் பிறந்தவர்கள்” அல்லது “மறுபிறப்பு" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிலர், திருமணத்திற்கு வரன் தேடும் பொழுது அந்த குறிச்சொல்லைப் போடுகிறார்கள், சிலர் சக விசுவாசிகளுடன் பொதுவாகப் பேசும்போது பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, “மறுபடியும் பிறந்த" என்பது, ஒருவர் தனது விசுவாசப் பாதையில் ஆவிக்குரிய மாற்றத்திற்கு உட்பட்டதைக்குறிக்கிறது.


ஆனால், உண்மையில் இது மீண்டும் பிறந்ததற்கான அடையாளமா? இதைப் பற்றி வேதம் என்ன கூறுகிறது?


ஒரு ஐசுவரியவான் இயேசுவிடம் வந்து, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்கும் சம்பவத்தை நாம் படிக்கிறோம். இயேசு அவனிடம் பேசிய பிறகு, இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். சீடர்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு இயேசுவிடம், அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இந்த சம்பவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள லூக்கா 18:18-30 படியுங்கள். இந்தப் பதிவின் சூழலுக்குத் தேவையான வசனங்களின் சில பகுதிகள் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். லூக்கா 18:18,22-23,26,28


இயேசு தம் சீடர்களுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 18:29-30


நாம் மீண்டும் பிறக்கும்போது - உலக இன்பங்களால் நிரம்பிய நமது பழைய வாழ்க்கையை விட்டு இயேசுவைப் பின்பற்றி வாழ்வோம். மீண்டும் பிறந்தவர்களுக்கான வாக்குத்தத்தத்தை இயேசு லூக்கா 18:29-30 இல் கூறுகிறார்.


உங்கள் வாழ்க்கையின் ஒரு சூழ்நிலையில் இயேசு உங்களைத் தொட்டது அல்லது நோயைக் குணப்படுத்தியது அல்லது ஒரு அற்புதம் செய்தது அல்லது தேவனின் தொடுதலால் நீங்கள் பலனடைந்தது போன்றவற்றால், ஒரு புதிய விசுவாசியாக, கிறிஸ்துவில் மீண்டும் பிறந்தவராக, அவரைப் பின்பற்றுவதில் உற்சாகம் உண்டாகிறது.


இதன் விளைவு ஆவிக்குரிய ஆசீர்வாதமாகவோ அல்லது பொருள் ரீதியான ஆசீர்வாதமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ இருக்கலாம். ஆனால் அந்த ஆவி சில மாதங்கள்/வருடங்களுக்குப் பிறகு உற்சாகம் குறைந்து, மெல்ல மெல்ல நம் பழைய நிலைக்குப் பின்வாங்கத் தொடங்குகிறது. தேவனுக்கான வைராக்கியம் இல்லை என்று ஆன பிறகும் கூட சிலர் இன்னும் தங்களை கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தவர்கள் என்ற குறிச்சொல்லுடன் அழைக்கிறார்கள்.

 

தேவ அன்பில் மீண்டும் பிறப்பது

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:7-8

 

  • மறுபடியும் பிறத்தலின் முதல் அடையாளம் அன்பு செலுத்துவது - அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

  • மீண்டும் பிறந்த பிறகு நாம் கொண்டிருக்கும் அன்பு தேவனிடமிருந்து  வருகிறது “ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது". நம் சுயம் நம்மை மட்டுமே நேசிக்கிறது, அது சுயத்தை மையமாகக் கொண்டது. மற்றவர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை.

  • தேவன் மீதான இந்த அன்பு, மத்தேயு 22 இல் அவர் கூறிய முதல் கட்டளையை முழுமையாக நிறைவேற்றுகிறது. இயேசு அன்பைப் பற்றிய தமது பிரசங்கத்தில் 2 கட்டளைகளை சுருக்கமாகக் கூறுகிறார். போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். மத்தேயு 22:36-40

  • இந்த வைராக்கியம் நீண்ட காலத்திற்கு இயங்குவதற்கு தேவன் மீதான அன்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் தேவனுக்கு  பயப்படுவதற்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

  • ஆனால், தேவனை நேசிப்பது எப்படி என்று சொல்ல இயேசு இன்னும் ஒரு படி செல்கிறார். தமது முதல் கட்டளையில், நம் இருதயம், ஆத்துமா மற்றும் மனதுடன் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; மத்தேயு 22:37

  • தேவனை நம் முழு இருதயத்தோடு நேசிக்கும்போது, அவர் மீதுள்ள அன்பின் காரணமாக அவரிடமிருந்து கேட்க விரும்புகிறோம். இதைப் பெற்றவுடன், அடுத்ததாக தேவனுடைய வார்த்தையின் மூலம் அவருடைய அன்பைக் கேட்கிறோம்.

  • தேவனின் வார்த்தை நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பை பலப்படுத்துகிறது.

  • நாம் தேவனிடம் பேசும்போது (ஜெபங்கள்) அன்பு முதிர்ச்சியடைகிறது. மேலும் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். ஜெபங்களில் இருந்து தேவனின் சமாதானத்தைப் பெறுகிறோம். மேலும் நம் பாவத்தைக் குறித்த குற்றப்படுத்துதல்கள் இல்லாதபடியால் அது நம் ஆத்துமாவைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. இது நம்மை தேவனை நேசிக்க வைக்கிறது.

  • பரிசுத்த ஆவியானவர் கணவன் மனைவிக்கு இடையிலான முதல் அன்பின் உணர்வை நமக்கு அளிக்க உதவுகிறார். அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். 1 யோவான் 4:13-14

  • நாம் அன்பு செலுத்தும் போது, நம் ஆத்துமா நமது பாவங்களை நமக்கு உணர்த்தி, தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ வைக்கிறது. தேவனின் அன்பு குற்றப்படுத்துவதில்லை. அது ஒருவரின் பாவங்களை அவருக்கு உணர்த்தி, அவற்றை அவரது வாழ்க்கையிலிருந்து நீக்குகிறது.

 

அன்பு தேவனின் பரிபூரணத்திற்கு மாறுகிறது

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 4:10-11

  • தேவன் மீதான அன்பு அவரிடமிருந்து வருகிறது. அவர் குற்றமில்லாத பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்த போதும், நம் பாவங்களுக்காக இரத்தம் சிந்த ஒரு ஆட்டுக்குட்டியைப் போல சிலுவைக்கு சென்றார்.

  • அவருடைய அன்பின் மூலம் நாம் தேவனின் பரிபூரணத்தைப் பெறுகிறோம். விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3:17-19

  • தேவனின் பரிபூரணம் என்றால் என்ன? தேவனிடம் உள்ள அன்பின் பண்புகளை நாம் பெறுகிறோம். அன்பில்லாதவர்களை நேசிக்கிறோம். பூமிக்குரிய ஆசீர்வாதங்களை விட ஆவிக்குரிய வரங்களை விரும்புகிறோம். பூமிக்குரிய உணவை விட பிதாவின் மன்னாவை நேசிக்கிறோம். அவர் பரிசுத்தராக இருப்பதால், அவரில் நாமும் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறோம். தேவனின் பரிபூரணம் என்பது நம் வாழ்வில் இறுதி மூச்சு வரை ஒவ்வொரு நாளும் அவரால் செய்யப்படும் ஒரு செயலாகும்.

  • நாம் பரலோகத்திற்குச் செல்லும் நாளில் அவர் நம்மைத் தூய்மையாக்குவதற்காக நம்மில் உள்ள மற்ற அசுத்தங்களை நீக்கி “பனியைப் போல் வெண்மையாக்குவார்”. வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஏசாயா 1:18

 

தேவன் மீது நமக்கு அன்பு இருப்பதை எப்படி அறிவது ?

தொடங்கும் போது நன்றாக இருக்கிறோம். ஆண்டுகள் செல்ல செல்ல  வைராக்கியத்தை இழக்கிறோம். தேவனுடைய வார்த்தை தெளிவான விளக்கத்தை அளிக்கிறது.

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார். அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம் மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 1 யோவான் 4:15-16

  • தேவனில் மீண்டும் பிறந்தவன், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று  ஒப்புக்கொள்கிறான். அவர் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்தார் என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை.

  • பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவு போல தேவனுக்கும் புதிதாகப் பிறந்தவர்களுக்கும் இடையே ஒரு உறவு இருக்கிறது. தேவன் அவர்களிலும், அவர்கள் தேவனிலும் நிலைத்திருக்கிறார்கள்.

  • நீங்கள் தேவனை நேசிக்கும்போது, அவருக்குக் கீழ்ப்படிகிறீர்கள். அவருக்குக் கீழ்ப்படியும்படி வார்த்தை நம்மைத் தூண்டுகிறது,ஒவ்வொரு நாளும் நம் ஆத்துமாவையும் இருதயத்தையும் மேம்படுத்துகிறது, ஒரு கீழ்ப்படிதலுள்ள பிள்ளை தன் பிதாவின் பேச்சைக் கேட்பது போல.

  • உலகத்தின் மீதான அன்பு போய்விடுகிறது, தேவனின் அன்போடு ஒப்பிடும்போது ஒவ்வொரு விஷயமும் இரண்டாம் பட்சமாகிறது. மற்ற எதையும் விட நீங்கள் அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள். இரண்டு எஜமானர்களுக்காக வேலை செய்ய மாட்டீர்கள். இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு 6:24

  • பாவத்தை மேற்கொள்ளும் கிருபையை அவர் தருகிறார். இது அவர் நம்மீது கொண்ட அன்பினால் நமக்குக் கொடுக்கப்படுகிறது. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ரோமர் 5:18-21

  • உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையானது சிலுவையில் அவர் செய்த விலைமதிப்பற்ற தியாகத்திலிருந்து வெளிப்பட்டது என்ற உறுதியோடு கிருபாசனத்தை அணுகுகிறீர்கள். நீங்கள் தேவனை இந்த மனப்பான்மையுடன் அணுகுகிறீர்கள். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4:16

  • நம்மைச் சிறந்தவர்களாக மாற்றும்படிக்கு அவருடைய கிருபையில் நாம் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறோம். நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் இயேசுவைப் போல இருப்போம். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். 1 யோவான் 4:17

 

சுய பரிசோதனை

ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5

  • இயேசுவுடன் நீங்கள் கொண்டிருந்த ஆதி அன்பை மறந்துவிடாதீர்கள், பல வருடங்கள் நடந்த பிறகும் அது அப்படியே இருக்க வேண்டும்.

  • நாம் தேவன் மீதுள்ள அன்பிலிருந்து விலகினால், தேவனை நேசித்து பின்பு பின்வாங்கிப் போன எபேசு சபையைப் போல இருப்போம்.

  • அவரிடம் மனந்திரும்பினால் மட்டுமே நம்மை மீட்டெடுக்க முடியும்.  என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். அப்போஸ்தலர் 2:38

  • கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தபோது அவர் மீது உங்களுக்கு இருந்த ஆதி அன்பு உங்களிடம் இன்னும் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள தினமும் தேவனிடம் உங்களைப் பரிசோதிக்கச் சொல்லுங்கள். பல சமயங்களில் உலகத்தின் மீதான அன்பு நம்மைப் பின் வாங்க செய்யும். அவருடைய இரத்தத்தில் தினமும் கழுவப்படுவது இந்த அன்பை என்றென்றும் தக்கவைக்கச் செய்கிறது.

  • தேவனின் அன்பு ஒரு போதும் மாறாது என்பதை நினைவில் வையுங்கள், அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு தான் மாறக்கூடும். அவர் நம்மீது கொண்ட அன்பை எதுவும் பிரிக்க முடியாது. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன், ரோமர் 8:38-39

  • நீங்கள் கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறந்தவர்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்ளாதீர்கள். தாவீது தேவனிடம் கேட்டது போல்,நீங்கள் உண்மையிலேயே மீண்டும் பிறந்தவரா என்று உங்களை பரிசோதித்து உறுதிப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள். கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து,, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். சங்கீதம் 26:2

 

bottom of page