முறுமுறுப்பு என்ன சொல்கிறது?
- Kirupakaran
- 7 hours ago
- 8 min read

கடைசியாக நீங்கள் உண்மையிலேயே தீவிரமாக விரும்பிய ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள். ஒரு நல்ல வேலை, ஒரு வீடு, அல்லது ஒரு ஜெபத்திற்குப் பதில். அதற்காக உபவாசித்தீர்கள், ஜெபித்தீர்கள், தூக்கத்தை இழந்தீர்கள். பிறகு தேவன் அதைத் தந்தார். வேலை கிடைத்தது. சூழ்நிலை மாறியது. கதவு திறந்தது.
ஆனால் சில வாரங்களிலேயே, குறை கூறுவதற்குப் புதிய காரணம் ஒன்று உங்களுக்குக் கிடைத்துவிட்டது. சம்பளம் போதவில்லை,மேலதிகாரி கடினமாக இருக்கிறார், வீட்டில் பழுதுபார்க்க வேண்டிய வேலைகள் இருக்கின்றன. ஆசீர்வாதம் வந்துவிட்டது — ஆனால் புலம்புவது மட்டும் நிற்கவே இல்லை.
நம்மிடம் இல்லாததை நினைத்தும் முறுமுறுக்கிறோம். நம்மிடம் இருப்பதை நினைத்தும் முறுமுறுக்கிறோம். தேவன் ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார் என்றும் முறுமுறுக்கிறோம் — வேலை கிடைக்கவில்லை, ஜெபத்திற்குப் பதில் வரவில்லை, சூழ்நிலை மாறவில்லை என்று குறை கூறுகிறோம். மனித இருதயத்தில் முதலில் எழுவது குறைதான். நாம் முறுமுறுக்கிறோம். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு எதிராகவும், சில சமயங்களில் தேவனுக்கு எதிராகவும் முறுமுறுக்கிறோம்.
முறுமுறுப்பது இயல்பானது போலவும், நியாயமானது போலவும் தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை அப்படிப்பார்ப்பதில்லை. வேதம் அதைப் பாவம் என்று அழைக்கிறது.
[பிலிப்பியர் 2:16] எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்
[யோவான் 6:43] பின்பு இயேசு கூறுகிறார்: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்
முறுமுறுக்கவேண்டாம் என்ற அந்த வார்த்தை நமக்கு ஒன்றைச் சொல்கிறது. முறுமுறுப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதுதான் அது. இயேசு அதைப் பொறுத்துக் கொள்ளவில்லை; அதை நேரடியாகக் கடிந்துகொண்டார். அப்படியென்றால், இந்த குணம் எங்கே தொடங்கியது? கப்பர்நகூமில் இருந்த கூட்டத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது ஒரு வனாந்தரத்தில் தொடங்கியது.
முறுமுறுப்பு எங்கே தொடங்கியது
[யாத்திராகமம் 16:1-3] இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்
இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் சீன் வனாந்தரத்திற்கு வந்தபோது முறுமுறுப்பு தொடங்கியது — அது ஒரு வறண்ட, கடுமையான,அசௌகரியமான இடம். வசதியான சூழ்நிலைகளில் முறுமுறுப்பு என்பது அரிதாகவே தொடங்குகிறது. நாம் பசியோடு, வறட்சியோடு, களைப்போடு அல்லது நிச்சயமற்ற தன்மையோடு இருக்கும்போதுதான் அது தொடங்குகிறது. நம் வயிறு காலியாகி, நம் பொறுமை குறையும்போதுதான் புகார்கள் மேலெழும்புகின்றன.
அவர்கள் யாருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் என்பதைக் கவனியுங்கள் — தங்களுடைய தலைவர்களாகிய மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக. ஆனால் தேவன் இதை உடனடியாக சரி செய்கிறார்.
[யாத்திராகமம் 16:8] பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்
தேவனால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கும், தேவன் தேர்ந்தெடுத்த பாதைக்கும் விரோதமாகச் செய்யப்படும் ஒவ்வொரு முறுமுறுப்பும்,இறுதியில் தேவனுக்கு எதிராகவே திரும்புகிறது. இதனாலேயே முறுமுறுப்பு ஆவிக்குரிய ரீதியில் மிகவும் கடுமையானதொன்றாகக் கருதப்படுகிறது — இது வெறும் மனநிலை சார்ந்த சிறிய பிரச்சனை அல்ல. இது ஆண்டவருக்கு விரோதமாகப் பேசப்படும் வார்த்தை.
முறுமுறுப்பின் மூன்று வெளிப்படையான அறிகுறிகள்
வேர் 1 — குற்றச்சாட்டிற்கு வழிவகுக்கும் சுயசார்பு
நாம் நம்முடைய சொந்த பலத்தைச் சார்ந்து தோல்வியடையும்போது, அந்தத் தோல்வியை தேவனுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக மாற்றுகிறோம். அவரிடம் உதவி கேட்டு கதறுவதற்குப் பதிலாக, அவர்மீது பழியைச் சுமத்துகிறோம். பழி சுமத்துதல், மனக்கசப்பு கொள்ளுதல், குற்றம் சாட்டுதல் ஆகிய இந்த மனப்பான்மை குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத்தானின் குணாதிசயமாகும். யோபு 36:13 இதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
[யோபு 36:13] மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்
[எபிரெயர் 12] பக்தி இல்லாத இருதயம் துன்பத்தின்போது தேவனை நோக்கி மன்றாடுவதில்லை — மாறாக அவர் மீது கசப்புக் கொள்கிறது. கசப்பும் முறுமுறுப்பும் ஒரே மண்ணிலிருந்தே முளைக்கின்றன: தேவன் அனைத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும், அவர் நல்லவர் என்பதையும் நம்ப மறுப்பதிலிருந்தே அவை பிறக்கின்றன. இந்த மண்ணில் வளர்வதை 'கசப்பான வேர்' என்று
[எபிரெயர் 12:15] ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
முறுமுறுப்பு, அதன் ஆரம்ப வேரிலேயே சரிசெய்யப்படாதபோது, அது ஒரு கசப்பான வேராக மாறி, பரவி, நம்மைச் சுற்றியுள்ள முழு சமூகத்தையும் தீட்டுப்படுத்துகிறது.
வேர் 2 — பழைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது
தேவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததையும், பார்வோனின் சேனையை அழித்ததையும், மாராவிலே தண்ணீரைக் கொடுத்ததையும் இஸ்ரவேலர்கள் கண்டிருந்தார்கள். இருப்பினும், வனாந்தரப் பயணம் கடினமானபோது, அவர்கள் எகிப்தைத் திரும்பிப் பார்த்தார்கள் — அங்கே அனுபவித்த அடிமைத்தனத்தையோ, வாங்கிய சாட்டையடிகளையோ அல்ல, மாறாக இறைச்சிப் பானைகளை நினைத்துப் பார்த்தார்கள்.
அவர்கள் அந்த வசதியை மட்டுமே நினைவுகூர்ந்தனர், ஆனால் அடிமைத்தனத்தை மறந்துவிட்டனர் — இதுவே முறுமுறுப்பிற்கான இரண்டாவது வேர்: பழைய பாவகரமான வாழ்க்கையை, ஒரு சிறந்த காலக்கட்டமாகச் சித்தரித்து ஏங்கும் மனநிலை.
தேவன் அவர்களை எகிப்தை விட மிகச் சிறந்த இடத்திற்கு நடத்திக்கொண்டிருந்தார் — அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டசெழிப்பான ஒரு தேசம்.
ஆனால், சேருமிடத்தை அவர்களால் பார்க்க முடியாததால், அவர்கள் பயணத்தையே வெறுத்தார்கள்.
தேவனுடைய உண்மைத்தன்மையை அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தைக் கொண்டு, அளவிடாமல் தாங்கள் இழந்ததைக் கொண்டே அளவிட்டார்கள்.
தேவன் அவர்களுக்கு முன்பாகச் செய்யவிருந்த மகிமையான காரியங்கள் அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தன. தேவன் நம்மை எங்கே நடத்துகிறார் என்பதை நம்மால் பார்க்க முடியாதபோது, நாம் கடந்து வந்த பாதையை — அது ஒரு அடிமைத்தனம் என்பதை மறந்து மிகைப்படுத்திக் கொண்டாடுகிறோம்.
வேர் 3 — முறுமுறுப்பு தொற்றிப் பரவக்கூடியது
[யாத்திராகமம் 16:2] அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே முறுமுறுத்தார்கள் என்று தேவனுடைய வார்த்தை சொல்லவில்லை. முழு சபையும் முறுமுறுத்ததாகச் சொல்கிறது. உலர்ந்த விறகில் தீப்பிடிப்பது போல, முறுமுறுப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகப் பரவுகிறது. ஒரு நபர் எழுப்பும் புகார் குரல் மற்றவரையும் தூண்டி, இறுதியில் முழு கூட்டமும் தேவனின் மீதான நம்பிக்கையை இழக்கும் வரை அது தொடர்கிறது.
[பிலிப்பியர் 2:16] இதனால்தான் புதிய ஏற்பாடு முறுமுறுப்பை ஒரு தனிப்பட்ட விஷயமாகக் கருதவில்லை. எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்
இந்த கட்டளை எந்தவித நிபந்தனையும் அற்றது. அனைத்தையும் உள்ளடக்கியது. ஏனெனில் முறுமுறுப்பு ஒருபோதும் தனிப்பட்ட எல்லைக்குள் அடங்கி நிற்பதில்லை. அது எப்போதும் வெளியே கசிகிறது. மற்றவர்களையும் தொற்றிக்கொள்கிறது.
முறுமுறுப்பு - அறிகுறிக்குப் பின்னால் இருக்கும் நோய்
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வேர்களும் வெறும் அறிகுறிகளே. அவற்றுக்கெல்லாம் பின்னால் இருக்கும் உண்மையான நோய் அவிசுவாசம்ஆகும். சங்கீதம் 78 இதே வனாந்தர நிகழ்வை நினைவு கூர்ந்து, தேவனுடைய தீர்ப்பை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது. சங்கீதம் 78:22
அவர்கள் விசுவாசிக்காத காரணத்தினால் முறுமுறுத்தார்கள். அவிசுவாசமே அதன் இயந்திரமாக இருந்தது. அந்தப் புகார் வார்த்தைகள் அந்த இயந்திரம் உருவாக்கியவை மட்டுமே. எபிரெயர் 3 ஆம் அதிகாரம் இந்த வனாந்தர வரலாற்றை நேரடியாக சுட்டிக்காட்டி சபைக்கு ஒரு எச்சரிக்கையாக முன்வைக்கிறது.
[எபிரெயர் 3:12-19] சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்
வனாந்தர சந்ததியினர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கத் தடை செய்யப்பட்டதன் காரணம், அவர்கள் வெறுமனே குறை கூறியது மட்டுமல்ல, அவர்களின் அவிசுவாசமே முதன்மை காரணம். ஒவ்வொரு முறுமுறுப்பான வார்த்தையும் தேவனுடைய நற்குணத்தையும், அவரது நன்மையையும், அவரது வாக்குத்தத்தத்தையும் விசுவாசிக்காத இருதயத்தின் வெளிப்பாடாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல் இதே எச்சரிக்கையை எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி நேரடியாகத் திருச்சபைக்கு முன்வைக்கிறார். [1 கொரிந்தியர் 10:10] அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.
பவுல் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: வனாந்தரத்தின் முறுமுறுப்பு புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்காக எழுதப்பட்ட ஒரு பாடம். முறுமுறுப்பு என்பது ஒரு தனிப்பட்ட குணநலன் அல்ல. அது ஒரு கலாச்சாரப் பழக்கமும் அல்ல. அது ஒரு ஆவிக்குரிய ஆபத்து.
புலம்பலுக்கும் முறுமுறுப்புக்கும் உள்ள வேறுபாடு
இந்த நேரத்தில் ஒருவர் கேட்கலாம் — யோபு முறையிடவில்லையா? சங்கீதத்தில் புகார்கள் இல்லையா? வேதனைப்படும்போது அதை நேர்மையாக வெளிப்படுத்த தேவன் அனுமதிப்பதில்லையா? ஆம், புலம்புவதற்கு வேதாகமம் முழு இடமளிக்கிறது. 'புலம்பல்' என்ற பெயரிலேயே வேதாகமத்தில் ஒரு புத்தகமே நமக்கு இருக்கிறது.
ஆனால் புலம்பலுக்கும் முறுமுறுப்புக்கும் இடையே ஒரு தெளிவான வித்தியாசம் உள்ளது.
புலம்பல் தேவனிடம் முறையிடுகிறது — நம்மால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் அவர் செவிகொடுக்கிறார், அவர் நல்லவர் என்ற நம்பிக்கையோடு நம் வேதனைகளை உண்மையோடு அவரிடம் கொண்டுவருவதாகும். [சங்கீதம் 62:8] ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா)
முறுமுறுப்பு தேவன் மீது குற்றம் சுமத்துகிறது— அது தேவனை விட்டு விலகி, அவருடைய பராமரிப்பை நிராகரித்து, குறைகளை அவரது நற்குணங்களுக்கு எதிரான தீர்ப்பாக மாற்றுகிறது. [யோபு 36:13] மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்
யோபு தேவனை நோக்கிக் கூப்பிட்டார்; தேவனும் அவருக்குப் பதிலளித்து, இழந்துபோன அனைத்தையும் மீட்டளித்து, அவரைக் கனப்படுத்தினார். வனாந்தர சந்ததியினரோ தேவனை விட்டு விலகி, வனாந்தரத்திலேயே அழிந்துபோனார்கள். நம் கூப்பிடுதலின் திசைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
தேவ கிருபை முறுமுறுப்பைக் கட்டுப்படுத்துகிறது
இஸ்ரவேலரின் முறுமுறுப்பிற்கு முன்பாக தேவன் என்ன செய்தார்? அவர் அவர்களைத் தண்டிக்கவுமில்லை; அவர்களை விட்டு விலகவுமில்லை. மாறாக, வானத்தைத் திறந்து அவர்களுக்கு அப்பத்தை அளித்தார்.
[யாத்திராகமம் 16:4] அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்
[சங்கீதம் 78:23-25] அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்
தேவன் அவர்களைப் பாதுகாப்பதற்கு வானத்திலிருந்த மேகத்தைப் பயன்படுத்தினார். வானத்திலிருந்து மன்னாவை வழங்கி அவர்களைப் போஷித்தார்.
தேவன் இஸ்ரவேலர்கள் மனந்திரும்பும் வரை காத்திருந்து நன்மைகளைச் செய்யவில்லை. அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கும்போதே தேவையானவற்றைத் தந்து உதவினார். இது முறுமுறுப்பதற்கான உரிமம் அல்ல — மாறாக, தேவன் எத்தகையவர் என்பதை வெளிப்படுத்துகிறது. கிருபை எப்போதும் முறுமுறுப்பவர்களை நோக்கியே நகர்கிறது.
மன்னாவும் தேவன் கற்றுக்கொடுத்த பாடமும்
[யாத்திராகமம் 16:13-15] சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்
'மன்னா' என்ற சொல்லின் அர்த்தமே "இது என்ன?" என்பதாகும். அது அவர்கள் அறிந்திராததும், அதுவரை சம்பவித்திராததுமான ஒன்றாகும் — அவர்களின் உலகிற்கு முற்றிலும் அப்பாற்பட்ட ஒரு தெய்வீகப் பராமரிப்பாக அது இருந்தது. அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, யாத்திராகமம் 16:31.
அது விடியற்காலைப் பனியோடு சேர்ந்து வந்தது, தேவனுடைய வல்லமையால் உருவானது.
[யோபு 38:28] மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
[யோபு 36:26-28] இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது
ஆனால், மன்னா என்பது வெறும் ஒருவேளை உணவு மட்டுமல்ல. அதன் மூலம் தேவன் இன்னும் ஆழமான ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தார். யாத்திராகமம் 16:4 அவர் ஆதியிலிருந்தே கூறிய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது — அது ஒரு சோதனையாய் இருந்தது. [யாத்திராகமம் 16:4] அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்
அவர்களால் அதை அடுத்த நாளைக்காகச் சேமித்து வைக்க முடியாமல் இருந்தது. அப்படிச் செய்ய முயன்றபோது, அது அழுகிப்போயிற்று. தேவன் அவர்களிடம் நாள்தோறும் அவரைச் சார்ந்திருக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார் — ஒரு நாள், ஒரு நம்பிக்கை, ஒரு நேர சேகரிப்பு. உபாகமம் 8 ஆம் அதிகாரம் இதைத் திரும்பிப் பார்த்து, இதன் முழு நோக்கத்தையும் விளக்குகிறது. [உபாகமம் 8:3] அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்
பசி தேவனுடைய கருவியாக இருந்தது. மன்னா தேவனுடைய பதிலாக இருந்தது.
இதன் பாடம் இதுதான்: வாழ்க்கை நம் சொந்த ஆதாரங்களிலிருந்தோ அல்லது நம் சொந்த முயற்சியிலிருந்தோ வருவதில்லை, அது தேவனுடைய வார்த்தையிலிருந்தே வருகிறது. இதனால்தான் இயேசு தம் சீஷர்களுக்கு "எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" (மத்தேயு 6:11) என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார் — இது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாக்கப்படும் மன்னாவின் ஜெபமாகும்.
இயேசு கிறிஸ்துவே நம் மெய்யான மன்னா
வனாந்தரத்தில் வழங்கப்பட்ட மன்னா, அதைவிடப் பெரிய ஒருவரை முன்னறிவிப்பதாக இருந்தது. ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த மறுநாள் காலையில், இயேசு தாமே யோவான் 6 ஆம் அதிகாரத்தில் இந்தத் தொடர்பை வெளிப்படுத்துகிறார்.
[யோவான் 6:30-35] அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே ; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்
[யோவான் 6:48-51] ஜீவ அப்பம் நானே, உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்
மன்னா வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை உயிர்ப்போடு வைத்திருந்தது, ஆனால் அதினால் நித்திய ஜீவனைக் கொடுக்க முடியவில்லை — அவர்கள் மரித்துப் போனார்கள். இயேசுவோ பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, நித்திய ஜீவனைக் கொடுக்கும் மெய்யான அப்பமாய் இருக்கிறார். இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் முறுமுறுத்து, தேவனை நம்ப மறுத்த இடத்தில், இயேசுவோ நாற்பது நாட்கள் உணவின்றித் தமது சொந்த வனாந்தரச் சோதனையைக் கடந்து சென்றார், அவர் ஒருமுறை கூட முறுமுறுக்கவில்லை. சாத்தான் கற்களை அப்பமாக மாற்றும்படி அவரைச் சோதித்தபோது, மோசே மன்னாவைக் குறித்துப் பிரசங்கித்த அதே வசனத்தைக் கொண்டு இயேசு பதிலளித்தார். [மத்தேயு 4:4] அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்
இஸ்ரவேலர்கள் தோற்ற இடத்தில் இயேசு வெற்றி பெற்றார். வனாந்தரத்தில் ஒரு காலைப்பொழுதிற்காக மாத்திரமல்ல, என்றென்றைக்கும் நம்மை உண்மையிலேயே திருப்திப்படுத்தும் மெய்யான அப்பமாக அவர் நமக்கு மாறியிருக்கிறார்.
முறுமுறுப்பிற்குத் தடுப்பு மருந்து — மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ளுதல்
முறுமுறுப்பு என்பது அவிசுவாசத்திலிருந்து பிறக்கிறது என்றால், அதற்கான மாற்றுமருந்து மன உறுதி அல்ல — மாறாக, அது நம்பிக்கையைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கமாகும். தேவன் மீது நம்பிக்கை வைப்பதும், நம் விசுவாசத்தைப் பெருகப்பண்ணும்படி அவரிடம் வேண்டுவதுமே ஆகும். அப்போஸ்தலனாகிய பவுல் மனரம்மியமாக இருப்பதை 'கற்றுக்கொண்ட இரகசியம்' என்று அழைக்கிறார்.
[பிலிப்பியர் 4:11-13] என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் , வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு
மனரம்மியம் கண்டெடுக்கப்படுவதில்லை — அது கற்றுக்கொள்ளப்படுகிறது. பவுல் அதை வறுமையிலும் செழிப்பிலும், சிறைவாசத்திலும் விடுதலையிலும், கப்பல் சேதத்திலும் பாதுகாப்பிலும் கற்றுக்கொண்டார். எந்தச் சூழ்நிலையிலும் தேவனே நமக்குத் தேவையானதை அளிக்கிறவர் என்பதை நம்புவதன் மூலமே மனரம்மியம் எனும் கனி உண்டாகிறது. மேலும், மனரம்மியமாக இருப்பதற்கான வலிமை நம் சூழ்நிலைகளைச் சரிசெய்வதிலிருந்து வருவதில்லை — அது கிறிஸ்துவிடமிருந்தே வருகிறது.
[தீமோத்தேயு 6:6-8] போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். 1
[யோபு 36:11] அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்
சுருக்கம்
முறுமுறுப்பிற்குத் தீர்வு மிகவும் வசதியான சூழ்நிலைகள் அல்ல. வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியச் செய்து, தம்மையே நமக்கு உணவாகத் தந்து, தம்மிடம் வருகிறவன் ஒருபோதும் பசியடைவதில்லை என்று வாக்குறுதி அளித்தவர் மீது வைக்கும் ஆழமான விசுவாசமே ஆகும்.
நாம் ஒரு எளிய படத்துடன் தொடங்கினோம் — ஒரு காரியத்திற்காகப் போராடுகிறோம், அதைப் பெறுகிறோம், ஆனாலும் முறுமுறுப்பதற்கு ஏதோவொரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறோம். இந்த முறைமை வெறுமனே மனித சுபாவம் மட்டுமல்ல; இது வனாந்தரத்தின் மாதிரி. தேவனைக் குற்றம் சாட்டும் சுயசார்பு, அடிமைத்தனத்தை அழகாக சித்தரிக்கும் கடந்த கால ஏக்கம், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடையே அவிசுவாசத்தைப் பரப்பும் தொற்று. இவையனைத்திற்கும் அடியில் இருப்பது — அவிசுவாசமே.
சற்று யோசித்துப் பாருங்கள். அறிகுறிகளைச் சரிபாருங்கள். வேரை ஆராயுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய உண்மையுள்ள வழிநடத்துதல் இருந்தபோதிலும், அவரைத் துக்கப்படுத்தியிருக்கக்கூடிய சிறியதும் பெரியதுமான முறுமுறுப்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவருடைய மன்னிப்பைக் கேளுங்கள். அவர் நிச்சயமாகத் தமது கிருபையைப் பொழிவார் — அவர் எப்போதும் அதைச் செய்கிறவர். தம்முடைய நாமத்தைத் தூஷித்த மக்கள் மீதே வானத்திலிருந்து அப்பத்தைப் பொழிந்தவர் அவர்.
மாம்சம் எப்போதும் முறுமுறுக்கவே விரும்புகிறது. யூதா தன் நிருபத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றித் தெளிவாக விவரிக்கிறார்.
[யூதா 1:16] இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்
ஆனால், நாம் வழிகாட்டுதலுக்காக தேவனுடைய வார்த்தையை எந்தளவுக்கு நாடுகிறோமோ, அந்தளவுக்கு முறுமுறுக்கும் மனப்பான்மை புலம்பலாக மாறும் — உண்மையிலேயே ஒரு பிரச்சனை இருக்கும் என்றால், அதை தேவனிடத்தில் நேர்மையாகக் கொண்டு செல்லுங்கள். தேவன் மேலிருக்கும் விசுவாசம் ஆழமாகும்போது, அந்தப் புலம்பல்கூட மனரம்மியமான ஆவிக்கு வழிவகுக்கும்.
முறுமுறுப்பு என்பது தேவனைப் பற்றி உங்கள் இருதயம் உண்மையில் என்ன நம்புகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் மனரம்மியமோ, நீங்கள் மெய்யான அப்பத்தை ருசிபார்த்து, அதுவே போதுமானது என்று கண்டுகொண்டதை வெளிப்படுத்துகிறது.



Comments