top of page

நோக்கங்கள் ஏன் முக்கியம்?

  • Kirupakaran
  • Jul 20
  • 6 min read
ree

நமக்கு பல மறைவான நோக்கங்கள் உள்ளன, ஆனால் நமது வெளிப்புற செயல்கள் நம் இருதயத்தின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், வேறொரு அர்த்தத்தில் பேசுகின்றன. உதாரணமாக, ஒருவர் தாராள மனப்பான்மை கொண்டவராகத் தோன்றுவதற்காகப் பொதுவில் நன்கொடை அளிக்கலாம். அவரது உள்ளத்தில், தேவனை கனம் பண்ணுவதற்குப் பதிலாக புகழைப் பெறுவதே நோக்கமாக இருக்கும்.

 

அப்போஸ்தலர் 5 ஆம் அதிகாரத்தில் ​​அனனியா மற்றும் சப்பீராளைப் பற்றிப் படிக்கிறோம். அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களைச் சுற்றிய நிகழ்வுகளிலும் இருந்து நாம் ஏராளமான பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.

 

 அனனியாவும் சப்பீராளும் யார்?

 

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். அப்போஸ்தலர் 5:1-2

 

  • அனனியாவும் சப்பீராளும் ஆரம்பகால திருச்சபை சமூகத்தில் பங்கு வகித்த ஒரு மணமான தம்பதியினர். திருச்சபை வளரத் தொடங்கியபோது, விசுவாசிகளுக்குள் ஒருமைப்பாடும், தாராள மனப்பான்மையும் நிரம்பியிருந்தது. விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. அப்போஸ்தலர் 4:32

  • இந்த ஆவியின் தூண்டுதலால், பல விசுவாசிகள் தங்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்று, அதின் கிரயத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டு வந்து, தேவையில் இருந்தவர்களை ஆதரித்தனர். அதே காரியத்தை அனனியாவும் சப்பீராளும் செய்ததாக அப்போஸ்தலர் 5:1-2 இல் வாசிக்கிறோம்.

  • மேலோட்டமாகப் பார்த்தால், அவர்கள் தாராளமாகக் கொடுத்தது போல் தோன்றும். ஆனால் அவர்களின் செயலில் தேவனுக்குப் பிரியமில்லாத இரு கடுமையான தவறுகள் இருந்தன, அவை அவர்கள் திடீரென மரணிக்கக் காரணமானது.

    • 1.   அவர்கள் தங்கள் உண்மையான நோக்கங்களை மறைத்துக் கொண்டு, நீதிமான்களாகத் தோன்ற விரும்பி மாய்மாலமாகநடந்துகொண்டார்கள்.

    • 2.   தாங்கள் முழுத் தொகையையும் கொடுத்துவிட்டதாகப் பாசாங்கு செய்து பரிசுத்த ஆவியிடம் பொய்யுரைத்தார்கள்.

 

மாய்மாலம் – திருச்சபையில் நியாயந்தீர்க்கப்பட்ட முதல் பாவம்

  • அப்போஸ்தலர்களின் காலத்தில் நியாயந்தீர்க்கப்பட்ட முதல் பாவம் மாய்மாலம் (அனனியா மற்றும் சப்பீராள்) - அப்போஸ்தலர் 5:1-11

  • அவர்கள் தாங்கள் அனைத்தையும் கொடுத்ததாகக் காண்பிக்க விரும்பினர், ஆனால் ஒரு பங்கை வைத்துக்கொண்டார்கள்.

  • மாய்மாலம் இருக்கும்போது ஆவிக்குரிய குருட்டுத்தன்மை இருக்கும். நாம் ஆவியில் வளர முடியாது.

  • மாய்மாலம் நம்மை ஆவியில் வளரவிடாமல் தடுக்கிறது, அது நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு களையாக இருக்கிறது - இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1 பேதுரு 2:1-3

  • தேவன் நம் ஒவ்வொரு சிந்தனையையும் செயல்களையும் அறிந்திருக்கிறார். அவருடைய நியாயத்தீர்ப்பின் முன் நம்மால் அதிலிருந்து தப்ப முடியாது. ஆகவே, பாசாங்கிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். பேதுரு இவ்வாறு கூறுகிறார், "சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு". 1 பேதுரு 2:2

 

பொய்யின் ஆவி - சாத்தானின் வேலை

  • யோவான் 8:44 இன் படி, பொய் சொல்லும் ஆவி சாத்தானிடமிருந்து உருவாகிறது, அவன் பொய்க்குப் பிதாவாயிருக்கிறான். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44

  • இயேசுவில் எந்தப் பொய்யும் இல்லை. அவர் முற்றிலும் தூய்மையானவர், சத்தியமானவர். பேதுரு அனனியாவை நேர்கொண்டபோது, ​​வஞ்சகத்தின் உண்மையான மூலத்தை அவர் வெளிப்படுத்தினார்: பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அப்போஸ்தலர் 5:3

முழு உண்மை vs பகுதி உண்மை: நுணுக்கமான வஞ்சனை

  • ஆதி திருச்சபையில், விசுவாசிகள் தங்களிடம் இருந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஒற்றுமை மற்றும் அன்பின் செயலாக, அவர்கள் தங்கள் உடைமைகளை விற்று, தேவையுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக முழுத் தொகையையும் அப்போஸ்தலர்களிடம் கொண்டு வந்தனர்.

  • நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடை`ய பாதத்திலே வைத்தான். அப்போஸ்தலர் 4:34-37

  • அனனியாவும் சப்பீராளும் சொத்துக்களை விற்றனர் - ஆனால் மற்றவர்களைப் போலல்லாமல், அவர்கள் ஒரு பகுதியை (y) வைத்துக் கொண்டு முழுத் தொகையையும் (x) கொடுத்ததாகக் கூறினார்கள்.  அவர்கள் z (z = x – y) பங்கை, முழுத் தொகையையும் (x) கொடுப்பது போலவே வழங்கினர். இது சாதாரணமான தவறல்ல - இது பரிசுத்த ஆவிக்கு நேராக கூறப்பட்ட திட்டமிட்ட பொய்.

  • பரிசுத்த ஆவியிடம் பொய் சொல்வது மிகக் கடுமையான பாவம். சாத்தான் பகுதி நேர்மையைச் சிறியது போலக் காட்டி, விசுவாசிகளை வஞ்சிக்கிறான். அவன், "இது முற்றிலும் பொய் அல்ல — நீங்களும் எதையோ கொடுத்துள்ளீர்கள்.” என்று கிசுகிசுக்கிறான். ஆனால் தேவனின் ராஜ்யத்தில், சத்தியம் சதவீதங்களில் அளவிடப்படுவதில்லை. பரிசுத்த ஆவியிடம் 80% உண்மை என்று எதுவும் இல்லை. அரை சத்தியம் என்பது முழுப் பொய்.

  • சாத்தான் தேவனுடைய கட்டளையை நுட்பமாகத் திரித்துக் கூறி ஏவாளை ஏமாற்றினான். இது இன்றும் அவன் பயன்படுத்தும் ஒரு பொதுவான தந்திரமாகும்.

பைபிள் ஒப்புமை: சவுல் ராஜாவின் பகுதி கீழ்ப்படிதல் (இதே போன்ற அனுபவம்)

  • முழு கீழ்ப்படிதல் போன்று தோன்றிய பகுதி கீழ்ப்படிதலின் அதே மாதிரியை சவுல் ராஜாவின் வாழ்க்கையிலும் நாம் காண்கிறோம்.

  • சவுலுக்கு தேவன் கொடுத்த உத்தரவு தெளிவாக இருந்தது: இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 1 சாமுவேல் 15:3

  • ஆனாலும் சவுல், ராஜாவாகிய ஆகாகைத் தப்பவிட்டு, தரமான மிருகங்களை அழித்துப்போடாமல் வைத்திருந்தார்: சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். 1 சாமுவேல் 15:9

  • சவுலிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, ​​சவுல் தன்னைத் தற்காத்துக் கொண்டார்: சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். 1 சாமுவேல் 15:20

  • சவுலும் அனனியா சப்பீராளைப் போலவே பகுதி கீழ்ப்படிதலை முழுமையான கீழ்ப்படிதலாக சித்தரித்தார். ஆனால் தேவன் அதைப் பார்த்தார். விளைவு? இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 1 சாமுவேல் 15:23

 

தேவனின் தீர்ப்பு

  • பரிசுத்த ஆவியிடம் பொய் சொல்வது பில்லிசூனிய பாவத்திற்கும் விக்கிரகாராதனைக்கும் சமமாயிருக்கிறது - இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது;  1 சாமுவேல் 15:23

  • இது தேவனின் ஆவிக்குக் கீழ்ப்படியாமல் உங்கள் விருப்பத்தைச் செய்வது போன்றது, சாத்தானும் அதையே செய்தான்; அதனால் அவன் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

  • இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனிய பாவம் போன்றது

    • இரண்டகம் (Hebrew: meri) -  தேவனின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுப்பது.

    • பில்லிசூனியம் (Hebrew: qesem) - மந்திரவாதம், சூனியம் அல்லது தேவனின் சித்தத்திற்கு வெளியே எதிர்காலத்தை கணிக்க முயற்சிப்பது போன்ற அமானுஷ்ய நடைமுறைகளைக் குறிக்கிறது.

    • முரட்டாட்டம் பண்ணுதல் விக்கிரகாராதனை போன்றது.

      • முரட்டாட்டம் (பிடிவாதம் அல்லது தன்னிச்சையான எண்ணம் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்பது தேவனின் வழியை விட தங்கள் வழி மேலானது என்று நினைப்பதைக் குறிக்கிறது.

      • விக்கிரகாராதனை என்பது தேவனைத் தவிர வேறு எதையாவது அல்லது யாரையாவது வணங்குவதாகும் - அவரை விட அதற்கு மேலான இடம் கொடுப்பது.

  • மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், லேவியராகமம் 19:26 & லேவியராகமம் 20:27 ஆகிய வசனங்களில், மரணம் தண்டனையாகக் கூறப்பட்டுள்ளது.

    • யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக. லேவியராகமம் 19:26

    • அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார். லேவியராகமம் 20:27

  • அனனியாவும் சப்பீராளும் இந்தப் பாவத்துக்காகவே மரணத்துக்கு உட்படுத்தப்பட்டனர். தீர்ப்பு உடனடியாக வந்தது.

 

 

அனனியா சப்பீராளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

 

1. இருதயத்தின் நேர்மை

  • தேவன் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் விரும்புகிறார். நாம் அவரிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

  • அவர் நம்முடைய பிதா; நம் பலவீனங்களைப் புரிந்து கொண்டு, நம்மிடம் அனுதாபத்துடன் இருக்கக்கூடியவர்.

  • நம்முடைய பலவீனங்களை ஒப்புக்கொண்டு தேவனிடத்தில் உதவி கேட்பதுநீதிமான்களாக நடிப்பதைவிட சிறந்தது. கர்த்தாவே, எனக்கு ஒருவரை நேசிக்க முடியவில்லை அல்லது என்னால் இதைச் செய்ய முடியவில்லை' என்று நாம் சொல்வது சிறந்தது. போலியாக இருப்பதை விட உண்மையோடு நடப்பதை அதிகம் மதிக்கிறார். கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். எரேமியா 17:10

  • நேர்மையின்மை சாத்தானுக்கு நம் இருதயங்களில் இடம் கொடுத்து, தேவன் நம் வாழ்க்கையில் செய்யத் திட்டமிட்ட அனைத்து நல்ல காரியங்களையும் அழிக்கிறது.

 

2. நம் இருதயத்தின் நோக்கங்கள் முக்கியம்

  • பரிசுத்த ஆவியானவர் செயல்களை மட்டும் பார்ப்பதில்லை, மாறாக அவற்றுக்குப் பின்னால் உள்ள இருதயத்தையும் பார்க்கிறார். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல் 16:7

 

3. ஆவிக்குரிய உணர்திறன் - குற்ற உணர்வைத் தூண்டும் மனசாட்சி

  • தேவனோடு நடக்கும் மனது, பாவம் நுழையும் போது உடனே மனசாட்சியில் கலங்குகிறது.

  • சவுலின் சால்வைத் தொங்கலை வெட்டியதற்காக தாவீது குற்ற உணர்ச்சியடைந்ததாக நாம் வாசிக்கிறோம். தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. 1 சாமுவேல் 24:5

  • அப்போஸ்தலர்கள் பிரசங்கித்தபோது, செய்தியைக் கேட்ட ஜனங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகினர். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். அப்போஸ்தலர் 2:37

  • அனனியாவும் சப்பீராளும் எந்தவிதமான குற்ற உணர்வையும் காண்பிக்காமல் மந்தமான நிலையில் இருந்தார்கள் - இது அவர்களை இன்னும் பெரிய பாவத்துக்குள் இட்டுச் சென்றது.

 

4. தேவன் மீதான பரிசுத்தமான பயபக்தி

  • அவர்களின் உடனடி மரணங்கள் ஆதிதிருச்சபையினரிடையே பரிசுத்த பயத்தைத் தூண்டின. "....சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று". அப்போஸ்தலர் 5:5,10–11

  • இன்று பல திருச்சபைகளில் பக்தி குறைவாக உள்ளது, அங்கு பரிசுத்தத்தை விட எண்ணிக்கையோ அல்லது புகழோ பெரும்பாலும் முன்னுரிமை பெறுகின்றன.

  • பயபக்தி இல்லாமல், நாம் பரிசுத்த ஆவியின் நெருப்பை அணைக்கிறோம்:

    • இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? அநேகரைப் போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம். 2 கொரிந்தியர் 2:15-17

    • புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 2 கொரிந்தியர் 3:6

  • தேவனையும் அவருடைய நியாயத்தீர்ப்பையும் கண்டு, அவருடைய நியாயத்தீர்ப்புக்கு அஞ்சும்போது, ​​தேவ பயம் வருகிறது. அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 2 கொரிந்தியர் 5:9-10

 

5. தினசரி ஆவிக்குரிய சுத்திகரிப்பு

  • ஆதி திருச்சபை தினசரி ஜெபத்தையும் அப்பம் பிட்குதலையும் கொண்டிருந்தது - ஆனாலும், ஜெபம் மற்றும் ஆவியினால் நடத்தப்படும் வாழ்க்கையிலும், மாம்சபாவம் உள்ளே நுழைந்தது.

  • நாம் ஆவிக்குரிய ரீதியில் இருண்ட காலங்களில் (சோதோம் கொமோராவைப் போல) வாழ்கிறோம், முடிவு காலம் நெருங்கிவிட்டது. இந்த வகையான பாவங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க வசனத்திலும் பரிசுத்த ஆவியிலும் தினசரி கழுவப்படுதல் மிகவும் அவசியம்.

  • நம்மை நாமே எப்படி சுத்திகரிப்பது?

    • ரோமர் 12:1-2 இல் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி நம் சரீரங்களை சுத்திகரிக்க வேண்டும். அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:1-2

    • தீய காரியங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க மனதைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் - அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். பிலிப்பியர் 4:7-9

 

6. ஆவிக்குரிய பகுத்தறிவுக்காக ஜெபித்தல்

  • சாத்தான் பெரும்பாலும் உறவுகள் மூலம் செயல்படுகிறான், தனது குற்றங்களில் பங்கெடுப்பதற்கான ஒரு கூட்டாளியைத் தேடுகிறான். அனனியாவும் சப்பீராளும் ஏமாற்றுவதில் ஒன்றிணைந்ததை நாம் காண்கிறோம். அதேபோல ஆதாமும் ஏவாளும் ஒன்றாகப் பாவத்தில் விழுந்தார்கள்.

  • நாம் இந்தப் பாவத்தில் நமது துணையுடன் சேர்ந்து விழாமல் இருக்க  பகுத்தறியும் ஆவிக்காக ஜெபிப்போம். மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1:9-11

 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Philip
Jul 28
Rated 5 out of 5 stars.

Amen

Like

Guest
Jul 28
Rated 5 out of 5 stars.

Glory to God

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page