top of page
  • Kirupakaran

சவுலின் வீழ்ச்சி: பகுதி கீழ்ப்படிதலின் விலை



பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பின்பற்றுகிறார்கள். சில சமயங்களில் நாம் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லும் போது அவர்கள் வேறொன்றைச் செய்கிறார்கள். பல சமயங்களில் அவர்கள் அந்த வேலையைச் செய்கிறார்கள், ஆனால் கவனித்துப் பார்த்தால், பாதி வேலை தான் முடிந்திருக்கும். அவர்கள் கீழ்ப்படிந்தாலும் அது முழுமையான கீழ்ப்படிதலாக இல்லை. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், நான் சொல்வதை புரிந்துகொள்வீர்கள். இதேபோல், சவுலின் பகுதி கீழ்ப்படிதலைப் பற்றி வாசிக்கிறோம். அமலேக்கியர்களை கையாள்வதைக் குறித்த காரியங்களை தேவன் சவுலுக்கு அறிவுறுத்தினார். அந்த கட்டளைகளுக்கு சவுல் ஓரளவு மட்டுமே கீழ்ப்படிந்தார், அது சவுலின் அரச பதவியைப் பறித்தது.

 

பல சமயங்களில் நாம் தேவனுடன், நம் பிள்ளைகளைப் போல நடந்து கொள்கிறோம். அவர் நம்மிடம் ஏதாவது செய்யச் சொன்னால், அவர் சொல்வது போல் அதைச் செய்ய மாட்டோம். அதற்குப் பதிலாக சிலவற்றை அவர் சொல்வதுபடியும், சிலவற்றை நம் விருப்பப்படியும் செய்கிறோம். பின்பு, அவருக்குக் கீழ்ப்படிந்ததாகச் சொல்லிக் கொள்கிறோம். நம் ஜெபங்களைக் கேட்காததற்காகவும் நம் விண்ணப்பங்களை ஆசீர்வதிக்காததற்காகவும் அவரிடம் புகார் செய்கிறோம்.

 

தேவன் சவுலுக்கு என்ன செய்தார் என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு முன்பாக அதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம்.

 

மோசேயும் அமலேக்கியர்களும்


மோசே இஸ்ரவேலர்களை பார்வோனிடமிருந்து வழிநடத்தி வந்து செங்கடலைக் கடந்தபோது, அமலேக்கியர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள். அப்பொழுது, மோசே தனது கையை வானத்திற்கு நேராக உயர்த்தி தேவனிடம் ஜெபித்தார். தேவன் யோசுவா மூலம் அமலேக்கியர்களை முறியடித்து இஸ்ரவேலர்களுக்கு வெற்றியை வழங்கினார். இதன் முழுக் கதையையும் யாத்திராகமம் 17 இல் வாசிக்கிறோம்.

 

அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். யாத்திராகமம் 17:8-11,13

  • இஸ்ரவேலர்கள் அமலேக்கியர்களை முறியடித்த பிறகு, அமலேக்கியரின் பெயரை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்று தேவன் மோசேயிடம் வாக்குறுதி அளித்தார். (பூமியில் இராதபடிக்கு அவர்களை அழிப்பது என்று நாம் இதைப் படிக்கலாம்).

  • பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். யாத்திராகமம் 17:14

  • இப்போது மோசே மற்றும் யோசுவாவின் தலைமுறை மறைந்துவிட்டது, இஸ்ரவேலர்களுக்கு சில காலத்திற்கு ராஜா யாரும் இருக்கவில்லை. அவர்கள் சாமுவேலிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்ட பிறகு, மோசேக்குக் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்ற சவுலை இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக தேவன் அடையாளம் காட்டினார்.

  • நம் தேவன் நமக்கு அளிக்கும் எந்த வாக்குத்தத்தத்தையும் தலைமுறை தலைமுறையாக பூர்த்தி செய்கிறார்.

 

சவுலின் பகுதியளவு கீழ்ப்படிதல்

மோசேக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி தேவன் சவுலை அறிவுறுத்துகிறார். அவருடைய கட்டளைகள் தெளிவாக இருந்தன.இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 1 சாமுவேல் 15:3

  • கட்டளைகள்

o   முதல் படி : இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து,

o   இரண்டாம் படி : அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து

o   மூன்றாம் படி : அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், 4:52 AM ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய்.

  • இது அமலேக்கியர்களை முழுமையாக அழித்துவிடும், அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்று மோசேக்கு தேவன் கொடுத்த வாக்குறுதியை இது முழுமையாக நிறைவேற்றுகிறது. யாத்திராகமம் 17:14

  • சவுல் அவர்களோடு யுத்தம் பண்ணிய காலத்தில் அமலேக்கியர்களை ஆகாக் ராஜா ஆண்டு வந்தார்.

  • ஆனால் சவுல் ஓரளவு மட்டுமே தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. சிலவற்றை அழித்துப்போட்டு, சிலவற்றை தப்ப வைத்தார். மேலும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும் எடுத்துக்கொண்டு ராஜாவுடன் திரும்பினார். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். 1 சாமுவேல் 15:9

 

தேவனின் கட்டளைகளுக்கு சவுல் முழுமையாகக் கீழ்ப்படியாததற்குக் காரணம் என்ன? அவர் சாத்தானின் கண்களின் வஞ்சகத்துக்கு இடம் கொடுத்து விட்டார்.

  • சவுல் வஞ்சிக்கப்பட்டது எதிலெனில், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளுக்கும், இரண்டாந்தரமானவைகளுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் அவர் விழுந்துவிட்டார். சவுலைப் போலவே நாமும் நம் கண்களின் இச்சையில் சிக்கிக் கொண்டு, தேவன் நமக்காகத் திட்டமிட்டிருப்பதை விட நம் கண்களுக்கு முன்னால் பார்ப்பது தான் சிறந்தது என்று சொல்லுகிறோம்.

  • சவுலின் விஷயத்தில், சவுலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அமலேக்கியரைத் தண்டிக்க தேவன் விரும்பினார். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 1 சாமுவேல் 15:2

  • சவுல் கிழக்கு எல்லையைத் தாக்கியதில் கீழ்ப்படிந்ததால், தான் கண்ட நலமானவற்றில் சிலவற்றை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று தீர்மானித்துக் கொண்டார். “அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய்” என்பது தான் தேவன் கொடுத்திருந்த கட்டளை.

  • வஞ்சனை இரண்டு படியானது

    • பேராசையினால் சுயத்திற்கு இணங்குவது - (இங்கே சவுலின் ஆசை ஆடுமாடுகள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள விரும்பியது)

    • பொய்யான வஞ்சனைகள் - தான் தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்ததாக உறுதியாக நம்பினார்.

 

நாம் பகுதியளவு கீழ்ப்படிந்தால் என்ன நடக்கும்?

  • நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம் என்று நியாயப்படுத்த நம் கண்கள் சவுலைப் போல இருக்கின்றன. சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். 1 சாமுவேல் 15:20-21

  • நாம் பகுதி மட்டும் கீழ்ப்படிந்து விட்டு, தேவனுக்குக் கீழ்ப்படிந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். மேலும் நாம் செய்ததை நியாயப்படுத்தி விட்டு தேவன் செயல்படுவதற்காக காத்திருக்கிறோம்.

  • பகுதியானக் கீழ்ப்படிதல் முழுமையான கீழ்ப்படியாமைக்கு சமம். தேவனிடம் பாதி உண்மை என்பது இல்லை. அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 1 சாமுவேல் 15:22-23

  • தேவன் பகுதியானக் கீழ்ப்படிதலை எதற்கு சமமாக கருதுகிறார் என்றால்,

    • பில்லி சூனிய பாவம் - தேவனோடு நடந்து கொண்டே சாத்தானிடம்  பில்லிசூனியத்தின் மூலம் குணப்படுத்துவதற்கு உதவி கேட்பது போன்றது.

    • விக்கிரகாராதனை பாவம் : செயல் தீயதாகக் கருதப்படுகிறது, இந்த தீமை ஒரு விக்கிரகத்தை வணங்குவதற்கு சமமாகும்.

  • நம் பார்வையில் கீழ்ப்படிதல் இலேசாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எப்படியெனில், நாம் கீழ்ப்படியத் தான் செய்தோம் ஆனால்,அவரது  தரநிலைகள் மிக உயர்ந்தவை என்று கூறிக் கொள்கிறோம். இதை பில்லி சூனிய, விக்கிரகாராதனை பாவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டோம்.

  • நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாதபோது, அவரது 10 கட்டளைகளில்  முதலாவது கட்டளையை மீறுகிறோம். என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். யாத்திராகமம் 20:3

  • பகுதி கீழ்ப்படியும் போது, நாம் அவரிடம் நேர்மையாக இல்லை என்பதை நம் செயலிலிருந்து காட்டுகிறோம். நேர்மையற்ற ஒருவர் கொஞ்சம் போலியான நடத்தை கொண்டவராக இருக்கிறார் ~ இது தேவனுடனான  பாசாங்குத்தனமான நடத்தைக்கு சமம். சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? மத்தேயு 23:33

 

பகுதியளவு கீழ்ப்படிதலின் விளைவுகள் : கீழ்ப்படியாமையின் விலை

1. தேவ கோபம் வெளிப்பட்டது

  • வார்த்தைக்கு கீழ்ப்படியாதவகள் மீது தேவ கோபம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சவுலின் விஷயத்தில், அவர் சாமுவேலிடம் இதைப் பற்றி பேசுகிறார். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.1 சாமுவேல் 15:10-11

  • சவுல் இஸ்ரவேலின் ராஜா என்ற ஸ்தானத்தில் இருந்து தள்ளப்பட்டார்.

  • தேவன் ஒரு நிலைப்பாட்டை தீர்மானிக்கும்போது, மனிதர்களைப் போல் மாற்றிக்கொள்ளாமல் அதில் உறுதியாக இருக்கிறார்.இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். 1 சாமுவேல் 15:29

2. தேவன் தாம் திட்டமிட்டதை மற்ற ஆதாரங்களின் மூலம் நிறைவேற்றுவார் (சாமுவேல்).

  • தேவன் சவுலுக்குக் கொடுத்த கட்டளை அமலேக்கியர்களைப் பழிவாங்குவதாகும். சவுல் அதை நிறைவேற்றத் தவறியதால், தேவன் சாமுவேலைப் பயன்படுத்தி ஆகாக் ராஜாவைக் கொன்று போட்டார். பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான். 1 சாமுவேல் 15:32-33

  • பல சமயங்களில் நம் வாழ்வில் அதுதான் நடக்ககிறது. அதை நாம் உடனடியாக அறியாமல் இருக்கலாம், பிற்காலத்தில் அதை தேவன் வெளிப்படுத்தும் போது உணர்ந்து கொள்வோம்.

  • தேவன் தமது திட்டங்களை சிலர் மூலமாக நிறைவேற்றுவார். அவர் தமது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அடுத்த திட்டத்தைத் (PLAN B) தேர்வு செய்கிறார். நாம் ஆசீர்வாதங்களை இழந்து, நாம் பெற்றுக் கொள்ள வேண்டியதை மற்றவர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்கிறோம். இது தேவனின் தவறு இல்லை, நம்முடைய செயல்களால் இதை இழக்கிறோம்.

3. தேவன் நம் காரணங்களை ஏற்றுக்கொள்வதில்லை

  • தனது பாவத்தை மன்னிக்கும்படி சவுல் தேவனிடம் கெஞ்சினார். தேவன் சவுலின் பாவத்தை மன்னித்தாரா இல்லையா என்று வேதத்தில் கூறப்படவில்லை. அவரது குணாதிசயத்தின்படி அவர் சவுலின் பாவத்தை மன்னித்திருப்பார். ஆனால் சவுலை ராஜ்யபாரத்தில் இருந்து நீக்கும் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தனது பகுதி கீழ்ப்படிதலுக்கான  விலையை சவுல் செலுத்த வேண்டியிருந்தது.அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். 1 சாமுவேல் 15:24-25

  • நமது கீழ்ப்படியாமையை நாம் கூறும் காரணங்கள் நியாயப்படுத்த முடியாது. அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 1 சாமுவேல் 15:22

  • சவுலின் கீழ்ப்படியாமைக்கான காரணம், தான் தேவனுக்கு ஒரு சிறந்த பலியைச் செலுத்த விரும்பியது ஆகும். ஆனால் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது என்று தேவன் கூறுகிறார்.

  • தேவனைப் பொறுத்தவரை, கீழ்ப்படிதல் அதிக கனத்தைப் பெறுகிறது, பூமிக்குரிய பார்வையில் நமக்கு பலியிடுதலே சிறந்ததாகத் தெரிகிறது.

 

எப்படிக் கீழ்ப்படிவது ~ இயேசுவின் வாழ்க்கைப் பாடங்கள்: உள்ளார்ந்த கீழ்ப்படிதல்


ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:5-10

  • கிறிஸ்து உலகத்திற்கு வந்தபோது, அவருடைய ஒரே நோக்கம் பிதாவுக்குக் கீழ்ப்படிவதாகவே இருந்தது. பிறகு அவர், தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்” என்று சொன்னார்.

  • அவரது கீழ்ப்படிதல் மரணத்தின் மீது ஜெயத்தைப் பெற்றுத் தந்தது. மேலும், அவர் தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரேயர் 10:12-14

  • நாம் தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படியும்போது, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க அவர் ஒரு நொடியும் தாமதிப்பதில்லை. அது உடனடியாக நடக்கிறது. இதை நாம் தவறவிட்டு, நம் தவறுகளுக்கு எப்போதும் தேவனைக் குறை கூறுகிறோம்.

சுய பரிசோதனை

  • நீங்கள் இன்னும் ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும் பகுதிகள், பதிலுக்காகக் காத்தருக்கும் ஜெபங்கள் இவற்றில் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். வாழ்க்கையில் முழுக் கீழ்ப்படிதல் இருக்கிறதா அல்லது பகுதியளவு கீழ்ப்படிதல் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து அதை சரிசெய்யவும்.

  • நீங்கள் தினமும் அவரோடு நடக்கிறீர்களா? நாம் இயேசுவின் மீதிலிருந்து கண்களை எடுக்கும்போது, வஞ்சனைகள் நம்மைத் தாக்குகின்றன. எனவே தேவனுடன் நெருக்கமாக நடப்பதைக் காத்து, ஆராய்ந்து பாருங்கள். உதவி தேவைப்படும்போது மட்டும் அவருடன் நடக்கத் தேர்வு செய்யாதீர்கள். அவர் நம் மீட்பராயிருக்கிறார். அவரோடு நடப்பதற்கு நம் துணைக்காக ஏங்குகிறார். அப்பொழுது தான் அவர் நமக்காக யுத்தம் செய்ய முடியும்.

  • உலகில் நடக்கும்போது, வஞ்சகங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம். வஞ்சகங்களை அகற்ற தேவனிடம் உதவி கேளுங்கள். நம் கண்களால், மனதால் கண்டுபிடிக்க முடியாத உள்ளான வஞ்சனைகளையும், தவறான நோக்கங்களையும் அவரால் அடையாளம் காண முடியும். நீங்கள் அவருடன் நெருக்கமாக நடந்தால், அவரால் உதவ முடியும்.

  • நம் கீழ்ப்படியாமையால் தேவனது பரிபூரண சித்தத்தை இழக்கிறோம். பல சமயங்களில் முதல் தர ஆசீர்வாதத்தை தவறவிட்டு, மூன்றாவது தரமான  ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம்.

  • தேவனின் எந்த கட்டளையையும் செய்ய தாமதிக்க வேண்டாம். தேவபயமும் தேவன் மீது அன்பும் இருந்தால்தான் உள்ளார்ந்த கீழ்ப்படிதல் வரும்.

  • தேவ பயம்

    • நான் கீழ்ப்படியவில்லை என்றால், என் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவேன்.

    • நான் கீழ்ப்படியவில்லை என்றால் தேவனின் கிருபையிலிருந்து விழுந்துவிடுவேன்.

  • தேவ அன்பு : தேவன் மீதான நம் அன்பு அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியச் செய்கிறது. அன்பினால் ஒரு பிள்ளை தன் தாய்க்கோ தகப்பனுக்கோ எப்படி கீழ்ப்படிகிறதோ அது போல.

  • கீழ்ப்படியாததற்கு நாம் சொல்லும் காரணங்கள் தேவனுக்கு முட்டாள்கள் கொடுக்கும் விளக்கம் போல் இருக்கும். பல நேரங்களில் தேவன் நம்மிடம் கேட்கும் காரியங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதில்லை. வேதம்  தெளிவாகக் கூறுகிறது, அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:22

bottom of page