top of page

கடைசி நாட்கள்: நாம் வஞ்சிக்கப்படுகிறோமா? – பகுதி 1

Kirupakaran
Apr 19
7 min read

நாம் அசாதாரணமான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் — நமது வாழ்நாளில் இதற்கு முன்பு பார்த்திராத பல காரியங்களை இப்போது கண்டு வருகிறோம். கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று, உக்ரைன் போர், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் போன்ற உலகளாவிய நிகழ்வுகளை பார்க்கிறோம். இவை வழக்கமான காலங்கள் அல்ல; உலகில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.


குறிப்பு: இந்த முக்கியமான தலைப்பைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வருகைக்கு நாம் ஆயத்தமாகி அவருடைய ராஜ்யத்தில் பங்குபெறவும் உதவும் வகையில், இந்த வலைப்பதிவு இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது.


நடந்து கொண்டிருப்பதைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது —பல்வேறு போதனைகளும் தீர்க்கதரிசனங்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது: இயேசு விரைவில் வருகிறார். இதை நீங்கள் மீண்டும் கேட்டிருக்கலாம், ஆனால் நாம் அவரிடம் வருவதற்கு கிருபை அளிக்கும் பொருட்டே அவரது வருகை தாமதப்படுகிறது. இப்பொழுதும் கூட, அவருடைய வார்த்தைகள் நிறைவேறி வருகின்றன, கடைசி நாட்களின் அடையாளங்கள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. வேதவசனங்களையும் இப்போதுஉலகில் நாம் காண்பவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.


இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:4-7


நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பது வேதவசனங்களின்படி மிகத் தெளிவாகத் தெரிகிறது. கடைசி நாட்களைப் பற்றி இயேசு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளார், ஆனால் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் என இருதரப்பினருக்கும் மிகவும் பொருத்தமான ஒரு கேள்வி இதுதான்: எது உண்மையானது, எது போலியானது என்று நாம் எப்படிக் கண்டறிவது?


போலிகள் பார்ப்பதற்கு உண்மையானவை போலவே தோன்றும் காலத்தில் நாம் வாழ்கிறோம். எனவேதான், கள்ளத் தீர்க்கதரிசிகளும் தவறான போதனைகளும் எழும்பி பலர் வஞ்சிக்கப்படுவார்கள் என்று இயேசு நமக்குத் தெளிவாக எச்சரித்துள்ளார்.

அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.  மத்தேயு 24:10-11

 

யார் கள்ளப் போதகர்?

கள்ளப் போதகர்கள் யார் என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு முன்பு, தேவனுடைய பார்வையில் ஒரு உண்மையான போதகர் எப்படி இருப்பார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யார் உண்மையானவர் என்பதை உணராமல், போலியானவர்களைக் கண்டறிவது கடினம்.

 

உண்மையான போதகர் யார்?

தேவனுடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றியவரே உண்மையான போதகர் என்று பவுலும் பேதுருவும் விவரிக்கிறார்கள். வேதாகமம் என்பது அவர் போதிக்கும் ஒரு விஷயம் மட்டுமல்ல — அது அவர் யார் என்பதற்கான அஸ்திவாரம்.

  • ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். தீத்து 1:9

  • உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள். 1 பேதுரு 5:2-3

 

உண்மையான போதகரின் பண்புகள்

  • அவர் எந்தச் சூழ்நிலையிலும் தேவனுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்கிறார் — வேதமே அவரது வழிகாட்டியாகவும் அளவுகோலாகவும் இருக்கிறது.

  • வேத சத்தியத்தின் அடிப்படையில் மற்றவர்களை ஊக்குவித்து திருத்துகிறார்.

  • பணிவிடைக்காரனுடைய இருதயத்தைக் கொண்டவராகவும், மனத்தாழ்மையுடன் நடப்பவராகவும் இருக்கிறார்.

  • சுய புகழ்ச்சியையோ, நேர்மையற்ற ஆதாயத்தையோ தேடுவதில்லை.

  • கிறிஸ்துவின் குணாதிசயங்களைத் தனது வாழ்க்கையில் பிரதிபலிப்பதோடு, ஊழியம் செய்ய ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறார்.

  • ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாக, பொறுப்புடன் வழிநடத்துகிறார் மற்றும் தனது பராமரிப்பின் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

  • தனது வாழ்க்கையில் கிறிஸ்துவின் சாட்சியாக இருக்கிறார்.

  • தனது அழைப்பைப் பற்றிய தேவ சித்தத்தை நிறைவேற்றுவது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

 

கள்ளப் போதகர் என்பவர் யார்?


கள்ளப் போதகர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று பவுல் தீமோத்தேயுக்குக் கற்பிக்கிறார். கள்ளப் போதகர்கள் ஆதி திருச்சபையிலேயே இருந்தனர், நாம் கடைசி நாட்களில் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களை இன்னும் அதிகமாகக் காண்கிறோம். அவர்கள் இயேசுவின் நாமத்தினால் பேசுகிறார்கள், ஆனால் உலகத்தின் வழிகளைப் பின்பற்றி வாழ்ந்து அதன்படி போதிக்கிறார்கள். தேவனுடைய வழிகளும் உலகத்தின் வழிகளும் ஒன்றல்ல, அவை ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானவை.


1 தீமோத்தேயு 6:3-5 இல், இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான உபதேசத்திற்கு இணங்காதவன் எவனும் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்குகிறவனுமாய் இருக்கிறான் என்று பவுல் கூறுகிறார். அத்தகையவர்கள் தேவபக்தியை பணம் சம்பாதிக்கும் ஒரு வழியாகக் கருதுகிறார்கள்.

 

ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 1 தீமோத்தேயு 6:3-5

 

கள்ளப் போதகரின் அடையாளங்கள்

கள்ளப் போதகரை அடையாளம் காண மூன்று தெளிவான வழிகள் உள்ளன:

 

1. வேதவசனம் / வேதத்தில் வேரூன்றி இராதவர்கள் - "ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்" 1தீமோத்தேயு 6:3

  • கள்ளப் போதகர்கள் இயேசுவின் போதனைகளை உண்மையாகப் பின்பற்றுவதில்லை. அவர்களுடைய செய்தி வேதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்காது.

  • மாறாக, அவர்கள் உலகப் பிரகாரமான வெற்றியில் — குறிப்பாகச் செல்வம் மற்றும் ஆசீர்வாதங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் பாவத்தைக் கண்டுகொள்ளாமல், மக்களை உண்மையான மனந்திரும்புதலை நோக்கி வழிநடத்தத் தவறுகிறார்கள்.

  • உண்மையிலேயே தேவன் பேசியதைக் கூறாமல், மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதையே போதிக்கிறார்கள்.

  • அவர்கள் மனிதர்களைப் பிரியப்படுத்துபவர்கள். மக்களைக் கவர்ந்து, அவர்களைத் தங்களோடு வைத்திருப்பதே அவர்களின் குறிக்கோள். எனவே, இவர்களுடைய செய்திகள் திருத்தங்களைத் தவிர்த்து, ஆசீர்வாதங்களின் வாக்குறுதிகளால் நிறைந்திருக்கும்; ஆனால், பாவத்தைப் புறக்கணித்து வெறும் ஆசீர்வாதங்களை மட்டுமே பேசும் செய்தி உண்மையானதல்ல — அது ஒரு கள்ளப் போதனையாகும்.

  • தேவனுடைய ஆசீர்வாதங்கள் ஒருபோதும் கீழ்ப்படிதலில் இருந்து பிரிக்கப்பட்டவை அல்ல. நாம் பெரும்பாலும் ஆசீர்வாதத்தை விரும்புகிறோம், ஆனால் கீழ்ப்படிய வேண்டும் என்கிற அழைப்பை அலட்சியப்படுத்துகிறோம்.

  • தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது, அவருடைய வாக்குத்தத்தம் தெளிவாக இருந்தது (யாத்திராகமம் 19:3–5). ஆசீர்வாதம் கீழ்ப்படிதலுடன் பிணைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. யாத்திராகமம் 19:5

  • இதற்கான நிபந்தனை தெளிவாக உள்ளது: ஆசீர்வாதத்திற்கு முன்பாக முழுமையான கீழ்ப்படிதல் வர வேண்டும். ஆனால் இன்று, பலர் எந்தவொரு அர்ப்பணிப்பும் இல்லாமல் வாக்குத்தத்தத்தை மட்டும் தேடுகிறார்கள்.

 

2. ஆவிக்குரிய பெருமைஅவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும்,, தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, 1 தீமோத்தேயு 6:4

 

கள்ளப் போதகர்கள் பெரும்பாலும் தாழ்மையுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக தங்கள் மனப்பான்மையில் பெருமைமிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

  • அவர்கள் தேவையற்ற சிறிய விஷயங்களுக்காக வாதிடுகிறார்கள்.

  • மக்களிடையே பிரிவினை, பொறாமை மற்றும் மோதல்களை உருவாக்குகிறார்கள்.

  • சத்தியத்தைப் பகிர்ந்து கொள்வதை விட, விவாதங்களில் வெற்றி பெறுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பவுல் அவர்களை இறுமாப்புள்ளவர்களும் ஒன்றும் அறியாதவர்களுமாயிருக்கிறார்கள் என்று கூறுகிறார். அவர்களுடைய போதனை சமாதானத்தையோ வளர்ச்சியையோ கொண்டு வராது. அது குழப்பத்தையே கொண்டு வரும் (அவன் தர்க்கங்களையும் வாக்குத்தத்தங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகிறது).

  • அவர்கள் வசனத்தில் வேரூன்றாமல், சபைக்கு ஒரு "எஜமானனைப்" போல இருந்து காரியங்களைத் தீர்க்க முற்படுகிறார்கள். இதுவே பொறாமை, சண்டை, தூஷணங்கள் மற்றும் பொல்லாத சந்தேகங்களை உருவாக்குகிறது.

  • இது அவர்களைப் பாவச் செயல்களுக்கு இட்டுச் செல்வதோடு, பாவத்திலிருந்து மக்களை மீட்கவும் இயலாமல் செய்கிறது.

  • இத்தகையச் சூழலில், இன்னும் இரட்சிக்கப்படாத மக்கள் அங்கே வரும்போது அவர்கள் வெறுப்பில் மூழ்கி, சபை, போதகர் அல்லது மூப்பர் என்றாலே விலகிப் போகிறார்கள். ஏனெனில் அந்த சபையும் அதன் ஊழியர்களும் கெட்டவர்கள் என்ற முத்திரை அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது.

  • சபை தேவனுக்குச் சொந்தமானது, போதகர்களும் மூப்பர்களும் அவருடைய ஊழியர்கள் மட்டுமே. கிறிஸ்து ஒருவரே சபைக்குத் தலைவராயிருக்கிறார். தலைவர்கள் (போதகர்கள் / மூப்பர்கள்) இதை மறந்துவிட்டு, சபை தங்களுக்குச் சொந்தமானது போலச் செயல்படும்போது, அவர்கள் ஊழியஞ்செய்வதற்குப் பதிலாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார்கள் — மக்களைத் தவறாக வழிநடத்தி, தேவனுக்கு மட்டுமே உரிய இடத்தைத் தாங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உலகத்தின் மற்ற காரியங்களில் கவனம் செலுத்தும்போது, சபைக்குள் தவறான விஷயங்கள் ஊடுருவுவதற்கு இடமளித்து, கிறிஸ்துவின் சாரத்தை நாம் இழக்கிறோம்.

 

உண்மையான விசுவாசி தாழ்மையிலும், தேவ அன்பிலும், தேவ வார்த்தையின் மீதான பற்றிலும் வளர்கிறார்; ஆனால் ஒரு கள்ளப்போதகனோ பெருமையிலும் சுய முக்கியத்துவத்திலும் வளர்கிறான்.

 

3. பொருளாதார ஆதாயத்திற்கான ஆசை - கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்" 1 தீமோத்தேயு 6:5

  • கள்ளப் போதகர்கள் விசுவாசத்தை செல்வத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

  • தேவனைப் பின்பற்றினால் தானாகவே பணம், வெற்றி அல்லது உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று அவர்கள் போதிக்கிறார்கள்.

  • பணம் கொடுப்பது அதிக செல்வம் அல்லது அற்புதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையான தேவபக்தி அல்ல. (“தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால்”).

  • தேவனுக்கு நம்முடைய பணம் தேவையில்லை - அவர் நம்முடைய இருதயத்தையே விரும்புகிறார். உண்மையான தேவபக்தி என்பது கிறிஸ்துவை அறிந்துகொள்வதும், அவருடைய வார்த்தையின்படி வாழ்வதும், நித்திய ஜீவனுக்கு ஆயத்தமாவதும் ஆகும்.

  • 1 தீமோத்தேயு 4:8 நினைவூட்டுவது போல, தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் பிரயோஜனமுள்ளது.

 

 

கள்ளப் போதகர்களிடம் கவனிக்க வேண்டிய செல்வம் சார்ந்த நான்கு ஆபத்துகள்

செல்வத்தை விசுவாசத்தின் மையமாக ஆக்குவதன் ஆபத்தைப் பற்றி 1 தீமோத்தேயு 6 இல் பவுல் கடுமையான எச்சரிக்கையை கொடுக்கிறார். கள்ளப் போதகர்கள் பெரும்பாலும் உலக இலாபங்களைச் சுற்றியே தங்கள் செய்திகளை உருவாக்குகிறார்கள், ஆனால் அது ஏன் ஆபத்தானது என்பதை வேதாகமம் தெளிவாகக் காட்டுகிறது.

 

1. செல்வம் மனநிறைவைக் கொண்டுவருவதில்லை - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோத்தேயு 6:6

  • வெளிச்சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், மனதிற்குள்ளேயே ஒரு நிறைவைக் கண்டு அமைதியாக இருப்பதே 'மனநிறைவு' ஆகும்.

  • மனநிறைவு என்பது நமக்குச் சொந்தமானவற்றிலிருந்து வருவதல்ல, அது தேவனிடமிருந்து வரும் ஓர் உள்மன அமைதி. மகிழ்ச்சிக்காக செல்வத்தைச் சார்ந்திருப்பவர்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பணம் தற்காலிக ஆறுதலைத் தரலாம், ஆனால் அது எப்போதும் அதிக ஆசையை உருவாக்குகிறது.

  • செல்வந்தர்கள் அந்த நிலையில் திருப்தியாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? செல்வத்தைத் தேடி ஆரம்பிக்கும் பயணம் மெதுவாகப் பேராசையாக மாறுகிறது. அது பணத்திலிருந்து அந்தஸ்து, அங்கீகாரம், அதிகாரம் எனத் திசைமாறி, ஒருபோதும் முடிவடையாமல் தொடர்கிறது.

  • உண்மையான தேவபக்திக்கும் பணம், செல்வம் அல்லது உலக ஆசீர்வாதங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  • தேவபக்தி என்பது எப்போதும் நம்மிடம் உள்ளதை வைத்துத் திருப்தியடையும் மனநிறைவைத் தருகிறது; அது உலக ஆதாயங்களின் மேல் நோக்கம் கொள்ளாமல், இரட்சகரின் சமூகத்தைப் பெற்றுக்கொள்ளவும், அவருடைய செயல்களைச் செய்யவும், அவருக்கும் அவருடைய விருப்பங்களுக்கும் பிரியமாய் இருக்கவும் ஏங்குகிறது.

  • உண்மையான திருப்தி கையில் இருக்கும் செல்வத்திலிருந்து வருவதில்லை, இருதயத்தில் இருக்கும் தேவபக்தியிலிருந்தே வருகிறது.

  • பவுல் பிலிப்பியர் 4:11 இல் நமக்கு நினைவுபடுத்துகிறார்: என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

 

2. செல்வம் நிலை இல்லாதது - உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 1 தீமோத்தேயு 6:7

  • இவ்வுலகில் நாம் அடையும் அனைத்தும் தற்காலிகமானவை. நாம் எதையும் கொண்டுவந்ததுமில்லை, எதையும் கொண்டுபோவதுமில்லை.

  • நாம் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்தாலும், அது இந்த வாழ்க்கைக்கு அப்பால் நம்மைப் பின்தொடராது. நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். யோபு 1:21

  • நாம் சேர்க்கும் செல்வம் எதுவாக இருந்தாலும் அது நம் வாரிசுகளுக்குச் செல்லும், இல்லையெனில் அரசாங்கத்திற்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது சபைக்கோ செல்லும். "அவர் எதை விட்டுச் சென்றார்?" என்ற கேள்விக்கு "அனைத்தையும்!" என்பதுதான் ஒரே பதில்.

  • செல்வத்தின் மீதான பேராசை, மேன்மேலும் அதைத் தேடி ஓடுவதற்கு நம் இருதயத்தைக் குருடாக்கிவிடுகிறது. அது பணம், புகழ் என எதுவாகவும் இருக்கலாம்.

  • அப்படியானால், செல்வத்தைத் தேடுவது பாவமா?

  • இது உங்கள் இருதயத்தின் நிலையைப் பொறுத்தது. தேவனைப் பின்பற்றுவதற்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தேடுவதற்கும் செல்வமே முக்கியக் காரணமாக இருந்தால், அது பாவமாகும். பணமும் உலக ஆதாயங்களும் தேவனின் இடத்தைப் பிடித்து உங்கள் கவனத்தை ஆட்கொள்ளும்போது, அவை விக்கிரகங்களாக மாறுகின்றன.

  • உங்கள் இருதயம் தேவன் மீது நிலைத்திருந்து, அவருடைய இறையாண்மையின்படி அவர் உங்களைச் செல்வத்தால் ஆசீர்வதித்தால், அது பாவமல்ல. ஆபிரகாம், யோபு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பிதாக்கள் பலர் செல்வந்தர்களாக இருந்தனர் — ஆனால் செல்வம் அவர்கள் தேவனைத் தேடுவதற்கான காரணமாக இருக்கவில்லை. அவர்கள் எப்போதும் தேவனுக்கே முதலிடம் கொடுத்தார்கள், மற்றவை அனைத்தும் அதற்குப் பின்னரே வந்தன. அவர்களின் உடைமைகள் இரண்டாம் நிலையிலேயே இருந்தன, அவை ஒருபோதும் அவர்களின் இலக்காக இருந்ததில்லை.

  • ஆரம்பகால சபையில், விசுவாசிகள் தங்கள் பணத்தை அப்போஸ்தலர்களுடைய பாதங்களில் வைத்தார்கள் (அப்போஸ்தலர் 4:34-35).இது அவமரியாதையான செயல் அல்ல, மாறாக செல்வத்தின் மீதான அவர்களின் மனப்பான்மையின் பிரதிபலிப்பாகும் - பணத்தை அவர்கள் பற்றிக்கொள்ளாமல், அதை ஒப்படைத்தார்கள் என்பதையும்; அது தேவனுக்கு மேலாக இல்லாமல், அவருடைய அதிகாரத்திற்குக்  கீழ்ப்பட்டிருந்தது என்பதையுமே இது காட்டியது.

 

3. நமது தேவைகள் எளிமையானவை - உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். 1 தீமோத்தேயு 6:8

  • உணவு, உடை மற்றும் உறைவிடம் என நமது அடிப்படைத் தேவைகள் எளிமையானவை என்பதை தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். இருப்பினும், இந்த உலகம் மேன்மேலும் விரும்புவதற்கு நம்மைத் தொடர்ச்சியாகத் தூண்டுகிறது.

  • அனைத்து பொருட்களின் விலையையும் அறிந்திருக்கும் நாம், எதன் மதிப்பையும் உணராத ஒரு காலத்தில் வாழ்கிறோம். வசதிகளாலும் ஆடம்பரங்களாலும் சூழப்பட்டிருக்கும் நாம், ஏற்கனவே நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடைய பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.

  • உண்மையான செல்வம் என்பது பொருட்களைக் குவிப்பதில் இல்லை, மாறாக எளிமையாக வாழவும், தேவனை சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வதிலுமே இருக்கிறது. அவர் மீது கவனம் செலுத்தும் இருதயம் முடிவில்லாத ஆசைகளால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

  • உங்கள் ஆடம்பரங்களை ஆராய்ந்து பார்த்து அவற்றை எடுத்துத் தமது நன்மைக்காகவும், ராஜ்யத்திற்காகவும் பயன்படுத்தும்படி தேவனிடம் கேளுங்கள்.

 

4. செல்வத்தின் மீதான ஆசை பாவத்திற்கு வழிவகுக்கிறது - ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:9-10

  • உண்மையான ஆபத்து செல்வத்தில் இல்லை, அதன் மீதான ஆசையில் தான் இருக்கிறது. ஒருவர் செல்வந்தராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்போது, அது ஒரு கண்ணியாக மாறுகிறது. அது ஒருவரை அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்கிறதே தவிர,கிறிஸ்துவுக்குள் இருக்கும் விடுதலையைத் தருவதில்லை.

  • செல்வம் திருப்தியைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அதிக ஆசைகளையே உருவாக்குகிறது. உதவி செய்வதற்குப் பதிலாக, அது மெதுவாக ஒருவரை அழித்துவிடும். இது அழிவுக்கும் கேடுக்கும் வழிவகுக்கும் பாதை என்று பவுல் விவரிக்கிறார்.

  • விசுவாசத்தை செல்வத்தை சேர்ப்பதற்கான வழியாகப் பயன்படுத்தும்போது இன்னும் ஆபத்தானதாக மாறுகிறது. ஒருவர் ஆவிக்குரியவராகத் தோன்றினாலும், அவர்களின் உண்மையான நோக்கம் தனிப்பட்ட ஆதாயமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர் உண்மையான மேய்ப்பன் அல்ல, அவர் அன்பினால் ஊழியம் செய்யாமல், வெகுமதிக்காகவே  ஊழியம் செய்கிறார்.

  • மற்றொரு எச்சரிக்கை: மதத்தை செல்வத்தைப் பெருக்குவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவது. தேவனுடைய ஊழியர்கள் தங்களுக்குரிய ஆதரவைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றாலும் (1 தீமோத்தேயு 5:17-18), அவர்களின் நோக்கம் ஒருபோதும் பணமாக இருக்கக்கூடாது.

  • பொருளாதார லாபத்திற்காகவே முதன்மையாக ஊழியம் செய்யும் எவரும் கூலிக்காரராக மாறுகிறார்கள். அவர்கள் அன்பினாலோ, அக்கறையாலோ அல்லது உண்மையான அழைப்பினாலோ அன்றி, ஊதியத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்.

  • 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்பது நமது கேள்வியாக இருக்கக்கூடாது, மாறாக 'நான் எதைக் கொடுக்க முடியும்?' என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்.  

 

இறுதி எச்சரிக்கை: தவறான போதனைகளிலிருந்தும் உலக ஆதாயங்களிலிருந்தும் விலகி ஓடுங்கள்

 

விசுவாசிகளுக்கு பவுல் கொடுக்கும் அறிவுரை என்ன? அவருடைய அறிவுறுத்தல் மிகவும் தெளிவாக உள்ளது:

நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. 1 தீமோத்தேயு 6:11

 

  • இத்தகைய போதனைகளை ஆதரிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவோ நாம் அழைக்கப்படவில்லை — அவற்றை விட்டு ஓடும்படியே அழைக்கப்பட்டுள்ளோம். ஆபத்தைக் கண்டு நாம் எப்படி ஓடுவோமோ, அதேபோல சத்தியத்தை விட்டு நம்மை விலகச் செய்யும் எதையும் விட்டு விலகி இருக்க வேண்டும்.

  • கடைசி நாட்களில், வஞ்சனை உண்மையானதாக இருக்கும் — ஆனால் சத்தியமும் அவ்வாறே இருக்கும். மெய்யான தேவபக்தியைப் பின்பற்றுவதும், கிறிஸ்துவுக்குள் உறுதியாக வேரூன்றி இருப்பதுமே நமது அழைப்பாகும்.

 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Apr 20
Rated 5 out of 5 stars.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

2 பேதுரு 3:9


கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.

2 பேதுரு 3:10


இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!

2 பேதுரு 3:11

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page