top of page
  • Kirupakaran

கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம் – ஜெபம்


“கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம்" என்ற புதிய தொடரைத் தொடங்கி இருக்கின்றேன். இந்தத் தொடரில், இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்த ஒவ்வொரு தலைப்பையும் வேதாகமக் கண்ணோட்டத்தில் முழுமையாக ஆராயலாம்.


கிறிஸ்தவத்தின் அடிப்படைகளில் இருந்து தொடங்கலாம். நான்காவது தலைப்பு ஜெபம்.


தேவனிடம் ஜெபிப்பது நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராயலாம். பல்வேறு வகையான ஜெபங்கள் குறித்தும் இதன் வல்லமையைக் குறித்தும் புரிந்துகொள்வோம்.


ஜெபம் என்றால் என்ன?

ஜெபம் என்பது தேவனிடம் நமக்கு என்ன வேண்டும் என்று கேட்பது என்ற எண்ணத்தில் அல்லது தவறான புரிதலில் இருக்கிறோம். இது 10% மட்டுமே உண்மை, அது 90% உண்மையான ஜெபம் அல்ல.


ஜெபம் என்பது முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் பரிசுத்த ஆவியானவரைத் தேடுவதும், அவரோடு பேசுவதும் ஆகும். ஜெபம் என்பது தேவனுடன் நெருக்கத்தை வளர்ப்பதாகும்.


உண்மையான ஜெபம், தேவனிடம் வெறுமனே காரியங்களைக் கேட்பதை விட மேலானது. இது நம் இருதயத்தையும் மனதையும் அவரிடம் திறப்பதற்கும், அவரை நம் வாழ்க்கைக்குள் அழைப்பதற்கும் ஒரு வழியாகும். இது அவருடைய ஞானம், வழிகாட்டுதல் மற்றும் வல்லமையைத் தேடுவதற்கான ஒரு வழியாகும்.

நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?

அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். மாற்கு 1:35.

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, எபிரேயர் 5:7

ஜெபிப்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர் அதிகாலையில், உருக்கமான அழுகையோடும் கண்ணீரோடும் பயபக்தியுடன் தமது விண்ணப்பங்களை பிதாவிடம் அவரது சித்தத்தின்படி செய்யும்படிக்கு ஒப்புவித்தார்.

  • நாம் ஜெபிக்கும்போது - நமது இருதயம் தேவனின் பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது,நாம் நம் உள்ளான மனதை அவரிடம் ஊற்றி, இதயத்தின் பாரங்களை இறக்கி வைத்து உள்ளத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம்.

  • நாம் ஜெபிக்கும்போது - நம் மனம் தேவனின் பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது, நாம் அவருடைய சித்தத்தையும், அவருடைய சித்தத்தின்படி செய்ய அனுமதியையும் தேடுகிறோம். அதனால் நாம் அவருடைய பரிபூரண சித்தத்திற்கு ஒத்துப்போகிறோம்.

  • நாம் ஜெபிக்கும்போது - நமது ஆத்துமா தேவனின் பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது, ​​நாம் செய்த பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்பி பாவ மன்னிப்பை நாடுகிறோம். அப்பொழுது அவரால் பரிசுத்தமாக்கப்படுகிறோம். இதனால் நாம் அவருடைய பார்வையில் நீதிமான்களாக மாறுகிறோம்.

நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்?

நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:6-8


நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.

  1. இயேசு அதிகாலையில் ஜெபித்தார் (மாற்கு 1:35). நாமும் அதைப் பின்பற்றி நம் வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

  2. வெளியரங்கமாய் ஜெபிக்காமல் அந்தரங்கத்தில் ஜெபிக்கும்படி இயேசு அறிவுறுத்தினார் - நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; மத்தேயு 6:6

  3. ஜெபத்தில் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தைகளை சொல்வதைத் தவிர்க்கவும். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் .மத்தேயு 6:7

  4. ஜெபம் என்பது உங்களுக்கு என்ன வேண்டும் என்று தேவனிடம் கேட்பது அல்ல. நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். ஜெபம் என்பது நம் வாழ்வில் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிவதாகும். உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8

  5. ஜெபிக்கும் போது, முழங்கால்படியிட்டு ஜெபியுங்கள். உங்கள் கைகள் பரலோகத்திற்கு மடிந்திருக்கட்டும். இதைச் செய்யும்போது நீங்கள் அவரிடம் உங்களைத் தாழ்த்தி, உங்களுக்கு செவி சாய்க்கும்படி கேட்கிறீர்கள். முழங்காலிட்டு, கண்களை மூடிக்கொண்டு (இது கவனச்சிதறலைத் தவிர்க்க செய்யப்படுகிறது) ஜெபிக்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். பிதாவிடம் ஜெபியுங்கள். தேவனை"அப்பா பிதாவே" என்று அழையுங்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15

  6. நீங்கள் ஜெபிக்கும்போது, மன்றாடும் இருதயத்துடன் பிதாவிடம் கேளுங்கள், அவர் முன் மன்றாடுங்கள், அவரிடம் அழுங்கள், அவர் முன் காத்திருங்கள், அவருக்கு அடிபணியுங்கள். ஒருபோதும் அவருக்குக் கட்டளையிடாதீர்கள்!

  7. நாம் தொழுதுகொள்ளும் தேவன் ராஜாதி ராஜா, நம் சிருஷ்டிகர் என்பதை நினைவில் வையுங்கள். அவர் நம் முன்னிலையில் வருவதற்கு நமது ஜெபங்களின் மூலம் நாம் தயாராக வேண்டும். அவரைத் துதித்து, ஆராதிப்பதன் மூலம் நாம் ஜெபத்தைத் தொடங்குகிறோம். அவருக்கு நாம் செய்யும் ஆராதனை தேவனை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும். பின்வரும் பட்டியலில் உள்ளவற்றை செய்யும்போது, அவர் நம் முன்னிலையில் வருவார்.

    1. தேவனின் மகிமையை தொழுதுகொள்ளுங்கள் - எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். சங்கீதம் 8:1

    2. தேவனின் வல்லமையை தொழுதுகொள்ளுங்கள் - அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:2

    3. தேவனின் தயவை தொழுதுகொள்ளுங்கள் - கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். சங்கீதம் 69:16

    4. தேவனின் அன்பை தொழுதுகொள்ளுங்கள் - கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. சங்கீதம் 36:5

    5. தேவனின் சத்தியத்தை தொழுதுகொள்ளுங்கள் - கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். சங்கீதம் 86:11

    6. தேவனின் மகத்துவத்தை தொழுதுகொள்ளுங்கள் - கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது: அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. சங்கீதம் 104:24-25

    7. தேவனின் பரிசுத்தத்தை தொழுதுகொள்ளுங்கள் - பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். சங்கீதம் 96:9

    8. தேவாதி தேவனை ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் தொழுது கொள்ளுங்கள் - ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 19:16

    9. நாம் தேவனைத் துதிக்கும்போது, சாத்தானால் நிற்க முடியாது. நாம் துதிக்கத் தொடங்கும் போது சாத்தானின் எந்த அடிமைத்தனமும் முறிந்து விடும்.

  8. நீங்கள் தேவனைத் தொழுது கொண்ட பிறகு, "தேவனே, என்னைக் காத்துக் கொண்டதற்கு நன்றி, என்னைக் குணமாக்கியதற்கு நன்றி" என்று அவர் உங்கள் வாழ்க்கையில் செய்தவைகளுக்காக நன்றி செலுத்துங்கள். அவர் செய்த யாவற்றிற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது அவர் தமது கிருபையையும் இரக்கத்தையும் பொழிவார்.

  9. நம்முடைய பாவங்களை பிதாவிடம் அறிக்கையிடும் போது, "நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்" என்று வசனம் கூறுகிறது. அவர் பிதாவிடம் பரிந்து பேசி, நம்முடைய பாவங்களை மன்னித்து, அவருடைய பார்வையில் நீதிமான்களாக மாற நம்மை சுத்திகரிக்கிறார்.

    1. என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 1 யோவான் 2:1

    2. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9

    3. நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 1 யோவான் 1:8

  10. நீங்கள் அறிக்கை பண்ணிய பிறகு, அவரிடம் கேட்க வேண்டிய காரியங்களை விண்ணப்பங்களாக, உங்களைத் தாழ்த்தி, அவருடைய விருப்பத்திற்கு ஒப்புக் கொடுங்கள். உங்கள் விண்ணப்பங்களுக்காக உருக்கமான அழுகையோடும் கண்ணீரோடும் மன்றாடுங்கள். ஒரு பிச்சைக்காரன் எஜமானிடம் எதையாவது பெற்றுக்கொள்ள இரக்கம் காட்டும்படி கேட்பதை நினைத்துப் பாருங்கள். நம் ஜெபமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இது உங்கள் ஜெபத்திற்கு பதிலளிக்க தேவனின் உள்ளத்தை உருக்க வேண்டும். அவர் நம் ஜெபத்திற்கு பதிலளிக்க வேண்டுமானால், நாம் கேட்பது அவருடைய சித்தத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.

  11. ஜெபித்து, உங்கள் கவலைகள் அனைத்தையும் அவரிடம் விட்டு விடுங்கள். உங்களுக்கு உதவும்படி அவரிடம் கேளுங்கள், தேவசமாதானம் உங்கள் சூழ்நிலையைப் பாதுகாக்கும். நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6-7

  12. உங்களுக்கு அந்நிய பாஷை வரம் இருந்தால், ஜெபிக்கும்போது, உங்கள் ஜெபம் தேவனோடு அந்நிய பாஷையில் இருக்கட்டும். நீங்கள் இதைச் செய்யும்போது, உங்களுக்கும் அவருக்கும் இடையில் அறியப்பட்ட விஷயங்களை அவரிடம் வைக்கிறீர்கள். தேவனோடு நாம் பேசுவதை சாத்தானால் கேட்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நீங்கள் பாடுவதற்கும் துதிப்பதற்கும் உயர்த்தப்பட்டால், அதைச் செய்யுங்கள். அது மற்றுமொரு தொழுது கொள்ளும் முறை.

  13. அவருடைய ராஜ்யத்துடன் தொடர்புடைய காரியங்களைத் தேட ஜெபியுங்கள் (தொலைந்து போன ஆத்துமாக்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், துணையற்றவர்கள், இழந்தவர்கள், ஏழைகள்). அவருடைய ராஜ்யத்தைத் தேடி, அதற்காக ஜெபிக்கும்போது, அவர் உங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார். நீதிமொழிகள் 30 இல் சாலொமோன் செய்த ஒரு ஜெபத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்

    1. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33

    2. இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். நீதிமொழிகள் 30:7-9

  14. உங்கள் சுய இச்சைகள் சிலுவையில் அறையப்பட்டு, தேவனின் சித்தம் நிறைவேற ஜெபியுங்கள். "உங்கள் சித்தம் நிறைவேறுவதாக" என்று தேவனிடம் சொல்லுங்கள்! இது அவிசுவாசம் அல்ல, எனக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார் என்ற விசுவாசத்தின் வெளிப்பாடு!

நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் ஜெபம் தேவனுக்கு காரியங்களை அறிவிப்பதாக இல்லாமல் தேவனுடனான நெருக்கத்தை வளர்ப்பதாக இருக்கட்டும்.


ஜெபிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய கூடுதல் காரியங்கள்

இப்போது எப்படி ஜெபிப்பது என்று அறிந்து கொண்டோம். நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன, அவற்றை சாத்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறான்.


  1. தேவன் நம் எல்லா ஜெபங்களுக்கும் பதிலளிக்கிறார், ஆனால், நாம் அவற்றை அடையாளம் காணத் தவறுகிறோம்.

    1. சில நேரங்களில் - ஆம்! (அது அவரது முழுமையான சித்தமாக இருக்கும் போது)

    2. பல நேரங்களில் - இல்லை!

    3. அடிக்கடி - காத்திருங்கள்! (அவரது நேரம் வரும் வரை காத்திருங்கள்)

    4. பெரும்பாலும் - அமைதி!

      1. அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்பதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க உங்கள் ஜெபத்தை மீண்டும் கவனித்துப் பாருங்கள்.

      2. ஒருவேளை உங்கள் ஜெபம் மிகவும் சுயநலமானதாக இருக்கலாம்.

      3. ஒருவேளை பாவம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கலாம். (எ.கா., கோபம், காம இச்சைகள், ஆசைகள், வதந்திகள்,புண்படுத்துதல், அவமானங்கள், வஞ்சனை, லஞ்சம் போன்றவை..). பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்கானப் பதில்களை உங்கள் வாழ்க்கையில் பாருங்கள்.

  2. ஜெபம் என்பது தேவனை மாற்றுவதற்காக அல்ல, மாறாக அவருடைய திட்டத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றுவதாகும்.

  3. நமது பாவங்களுக்கு நாமே பொறுப்பு, உங்கள் பாவங்களுக்காக சாத்தானைக் குற்றம் சாட்டாதீர்கள். சாத்தானால் நம்மைச் சோதிக்க மட்டுமே முடியும், அந்த சோதனையினால் நாம் தான் பாவம் செய்கிறோம். நாம் பாவம் செய்யாமல் தவிர்த்து, முடியாது என்று மறுக்க இயலும். ஆனால் நாம் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். எனவே நாம் பாவம் செய்யும் போது பாவத்தின் பொறுப்பு நமக்கு வருகிறது.

  4. ஜெபத்தில் நாம் தேவனோடு பேசுகிறோம், சாத்தானிடம் அல்ல. உங்கள் ஜெபத்தில் சாத்தானிடம் பேசாதீர்கள்.

    1. சாத்தானை விரட்டும் வல்லமை நம்மிடம் உள்ளது (மத்தேயு 10:1,8).

    2. சாத்தானைக் கடிந்துகொள்ளும் வல்லமை நமக்கு இருக்கிறது (மத்தேயு 17:18).

  5. சாத்தான் நம்மை ஏமாற்றுவதில் வல்லவன். நாம் தவறாமல் ஜெபிக்காதபடிக்கு அவன் ஒரு மந்தமான ஆவியைக் கொண்டுவருவான். நீங்கள் அப்படி உணர்ந்தால், அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அந்த முரண்களுக்கு எதிராகச் சென்று ஜெபித்து, தேவனைத் துதித்து, தொழுது கொள்ளுங்கள். அப்பொழுது அவன் ஓடிப்போவான். நாம் தேவனைத் துதிக்கும்போது அவனால் நம் அருகில் நிற்க முடியாது.

  6. நீங்கள் ஜெபித்து, தேவனிடம் நெருங்கிச் செல்லும்போது, தேவனைப் போலவே இருக்கின்ற ஆனால் தேவனிடமிருந்து வராத ஒரு பொய்யான ஆவி இருக்கிறது. இது சாத்தானிடமிருந்து வருகிற, தேவனைப் போலவே இருக்கிற ஒரு ஆவி. எனவே உங்களை நீங்களே சோதித்து பரிசோதிக்க ஆவியில் ஜெபியுங்கள், தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். 2 கொரிந்தியர் 13:5

  7. இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவுடன், நீங்கள் அவருடைய குமாரரும் குமாரத்தியுமாகிறீர்கள். ஆவியின் அனைத்து வல்லமைகளும் நமக்கு வழங்கப்படுகின்றன. நோய்களைக் குணமாக்கவும், பிசாசுகளை விரட்டவும் இன்னும் அநேக காரியங்களிலும் வல்லமை பெறுகின்றோம். உங்களுக்கு வழிகாட்ட தேவனைத் தேடுங்கள்.

  8. தேவனை நெருங்குவதற்கு உங்களுக்கு மத்தியஸ்தர் தேவையில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள், மரியாளை ஒரு மத்தியஸ்தராகப் பயன்படுத்துகிறார்கள் -இவர் இயேசுவை நம்மிடம் கொண்டு வந்தார். புராட்டஸ்டன்ட்டுகள் போதகர்களை மத்தியஸ்தர்களாகப் பயன்படுத்துகிறார்கள் - இவர்கள் நம்மை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இரண்டுமே தவறு. தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்கவில்லை என்றால், உங்களுக்காக யாரும் பரிந்துரைக்க முடியாது! கேளுங்கள் அப்பொழுது பெற்றுக் கொள்வீர்கள் என்று வசனம் தெளிவாகக் கூறுகிறது. கேட்பதற்கு ஒரு மத்தியஸ்தரைக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7-8

  9. நீங்கள் ஆவியில் பலவீனமாக இருக்கும்போது மட்டுமே ஒரு மூப்பர் அல்லது போதகரிடம் உதவியை நாடுங்கள்.

  10. விக்கிரகங்கள் (சிலை / புகைப்படம் அல்லது இது போன்று ஏதாவது) முன் ஜெபம் செய்வதையும், ஆசீர்வதிக்கப்பட்ட துணி அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட மாலையைக் கொண்டு ஜெபம் செய்வதையும் தவிர்க்கவும். ஆவியில் ஜெபம் செய்யுங்கள், நீங்கள் பிதாவிடம் பேசுகிறீர்கள் என்ற உறுதியுடன், வைராக்கியத்துடனும் பயபக்தியுடனும் ஜெபம் செய்யுங்கள்.

  11. பரிசுத்தமாக்குதலைப் பெற நம் பிதாவாகிய தேவனிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். தேவாலயத்தில் உங்கள் போதகரிடமோ அல்லது பாதரிடமோ அறிக்கை பண்ண வேண்டிய அவசியமில்லை. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான். அவர்களும் பாவத்தில் இருக்கும்போது அவர்களால் நம்மை எப்படி பரிசுத்தப்படுத்த முடியும்.

  12. உங்கள் ஜெபங்கள் சுயத்தை சுற்றியே இருக்க வேண்டாம், பிறருக்காகவும் ஜெபியுங்கள். நீங்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது, தேவனின் வல்லமை உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையை சரிப்படுத்த உதவும். உங்கள் சுய தேவைகளுக்கான ஜெபத்தை கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

  13. கற்பிக்கப்பட்ட வரிசையில் ஜெபிக்கும்போது, நீங்கள் பேசுவதை விட அதிகமாக தேவனிடமிருந்து கேட்கத் தொடங்குவீர்கள். உங்களுக்குச் சொல்லவும் வழிகாட்டவும் ஒரு குரல் கேட்கும். அந்த வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

  14. தேவன் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குத்தத்தங்களோடு ஜெபியுங்கள், அவர் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர். வேத வசனத்தைத் திறந்து, வாக்குத்தத்தங்களுடன் ஜெபியுங்கள்.

  15. நீங்கள் ஜெபிக்க ஆரம்பித்து, அவருடைய வல்லமையையும், ஜெபத்திற்கு பதில்களையும் பெறும்போது பெருமை கொள்வீர்கள் - எல்லாவற்றிற்கும் தேவனின் கிருபை தான் ஆதாரம் என்பதை உணராமல் உங்கள் ஜெபத்தின் காரணமாக அனைத்தையும் பெற்றுக் கொண்டீர்கள் என்று நினைக்கும் ஆவிக்குரிய பெருமையை கொள்வீர்கள். அந்தப் பெருமையை விட்டொழித்து, உங்களை வெறுமையாக்கி, தாழ்மையைத் தருமாறு தேவனிடம் கேளுங்கள்.


உபவாச ஜெபம்

சில காரியங்களுக்கு உபவாசம் இருந்து ஜெபிப்பது தேவைப்படுகிறது. உபவாசத்தைப் பற்றி வேதம் என்ன கற்பிக்கிறது?

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத்தேயு 6:16-18

உபவாசத்தால் என்ன பலன் கிடைக்கும்?

  • இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் உபவாசிப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்று வேதம் கற்பிக்கிறது. இதைக் கவனியுங்கள் : அவருடைய எல்லாப் போதனைகளிலும், "நீங்கள் உபவாசம் இருந்தால்" என்று இயேசு சொல்லவில்லை,"நீங்கள் உபவாசிக்கும் போது" என்று கூறினார்.

  • உபவாசம் என்ன சாதிக்கிறது? பல காரணங்கள் உள்ளன, ஆனால் மாம்சத்தின் மீதான கட்டுப்பாடு தான் முதன்மையானது. வேதம் இவ்வாறு கூறுகிறது, பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியர் 5:16-17

  • தேவ ஆவியிடம் சரணடைவதற்கு நம் மாம்சத்தைக் கட்டுப்படுத்துகிறோம்.

  • உபவாசம் ஆவியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் நாம் ஆவியில் ஜெபிக்கும்போது நம் ஆத்துமா பிதாவின் உதவியைக் கோருவதற்குப் பரிந்து பேசுகிறது.


நாம் எப்படி உபவாசிக்க வேண்டும்?

  1. வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள்: உபவாசிக்கும் போது முகவாடலாய் இருந்து நீங்கள் உபவாசிப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாது. வேதம் இவ்வாறு கூறுகிறது, “மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்”.

  2. அந்தரங்கத்தில் இருக்க வேண்டும்: நீங்கள் இயல்பாக இருக்க வேண்டும், பசி உங்களைத் தூண்டும் போது எப்படி இயல்பாக இருக்க முடியும்? அதற்கு தேவன் உங்களுக்கு உதவுவார். “நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்".

  3. உபவாசம் ஜெபத்தோடு இருக்க வேண்டும்: நாம் ஜெபிக்க வேண்டியவற்றிற்காக பிதாவிடம் உதவி கோருவதற்கு ஆத்துமாவுடன் பரிந்து பேசுவதற்கு உபவாசம் ஆவியானவரைக் கட்டுப்படுத்துகிறது. உங்களால் ஜெபிக்க முடியாவிட்டால் உபவாசிக்காதீர்கள். வெறும் உபவாசத்தால் பயன் இல்லை.

  4. எத்தனை நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்?

  5. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் உபவாசம் இருப்பது என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை, அது தேவனால் உங்களுக்கு வழிநடத்தப்பட வேண்டும். இதில் யாரும் முடிவெடுக்கக்கூடாது. 1 நாளா அல்லது 3 நாட்களா அல்லது 21 நாட்களா அல்லது எவ்வளவு நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

தவறாமல் ஜெபிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

  • அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள். தேவனிடம் உங்களுக்கே முதலாவது இடத்தைத் தருகிறேன், இந்த நாளில் உங்கள் சித்தத்தின்படி செய்ய எனக்கு வழிகாட்டுங்கள். நாளை நீங்கள் எனக்காகத் திட்டமிட்டிருப்பதைச் செய்ய நான் இன்று முயற்சி செய்கிறேன் என்று சொல்லுங்கள்.

  • எந்தெந்த காரியங்களுக்காகவெல்லாம் ஜெபிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு வைத்திருக்கும் நோட்டுப்புத்தகத்துடன் ஜெபியுங்கள்.

  • நீங்கள் தேவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய பாவங்களின் பட்டியலுடன் ஜெபியுங்கள். நாம் கறையற்றவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், எனவே சிறிய பாவங்களை தள்ளுபடி செய்யாதீர்கள்.

  • மாதம் மற்றும் ஆண்டின் இறுதியில், நன்றி செலுத்த வேண்டிய அனைத்துக் காரியங்களின் பட்டியலுடன் ஜெபியுங்கள்.

  • எப்போதும் தியானித்து ஜெபியுங்கள். தியானிப்பதைத் தவிர்த்துவிட்டு, நான் இன்று ஜெபித்தேன், அதனால் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஜெபமும் தியானமும் தேவனுக்கு இரண்டு உதடுகள் போன்றவை, ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தேவனை அடைய முடியாது. உங்களுக்கு அவை இரண்டும் தேவை.

  • தேவனுடைய ராஜ்யத்திற்காக பாரத்துடன் ஜெபியுங்கள், வைராக்கியத்துடன் தொடர்ந்து ஜெபியுங்கள். அவிசுவாசிகளின் குடும்பத்திற்காக ஜெபியுங்கள், உங்கள் அண்டை வீட்டாருக்காக ஜெபியுங்கள், உங்கள் சுற்றுப்புறத்திற்காக ஜெபியுங்கள், சபைக்காக ஜெபியுங்கள், தேசத்திற்காக ஜெபியுங்கள்.






bottom of page