top of page
  • Kirupakaran

கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம் –கிறிஸ்தவ வாழ்க்கையில் போராட்டங்கள்


“கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம்" என்ற புதிய தொடரைத் தொடங்கி இருக்கின்றேன். இந்தத் தொடரில், இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்த ஒவ்வொரு தலைப்பையும் வேதாகமக் கண்ணோட்டத்தில் முழுமையாக ஆராயலாம்.


இந்தத் தொடரில் ஆறாவதும் இறுதியுமான தலைப்பு 'கிறிஸ்தவ வாழ்க்கையில் போராட்டங்கள்'. இதில் நாம் தேவனுடன் நெருக்கமாக இருக்கும்போது ஏன் போராட்டங்கள் ஏற்படுகின்றன?, இந்தப் போராட்டத்தின் ஆதாரம் எங்கே?, நமது ஆவிக்குரிய முதிர்ச்சிக்காக தேவன் ஏன் இந்தப் போராட்டங்களை அனுமதிக்கிறார்?, இந்தப் போராட்டங்களின் போது ஏன் நாம் தளர்ந்துவிடக் கூடாது என்பதை எல்லாம் ஆராய்வோம்.


பொதுவாக, மக்கள் எளிதான நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் காரியங்கள் கடினமாகும் பொழுது, வாழ்க்கை சுலபமாக இருப்பதில்லை. நாம் கிறிஸ்துவைப் பின்தொடரும் போது, உலகத்திலிருந்து நம்மைத் தூர விலக்கிக் கொள்கிறோம். நாம் வாழ்க்கையில் செல்லும்போது பல ஆவிக்குரிய சவால்களை சந்திக்கிறோம்.


இந்தப் போராட்டங்களை நாம் ஏன் அனுபவிக்கிறோம்?


உலகத்திலிருந்து தனித்திருத்தல் VS விசுவாசம்

கிறிஸ்துவில் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக, நாம் உலகத்தின்படி வாழ்ந்து கொண்டிருந்த போது, உலக இன்பங்களால் (நம்முடைய தாகங்கள் / இச்சைகள் போன்றவை) திருப்தி அடைந்து கொண்டோம். நம் சுய ஆசைகள் யாவும் பிசாசின் சோதனைகளால் வருகின்றன. நாம் உணர்வுப்பூர்வமாக அவைகளுக்கு இசைந்து கொடுக்கிறோம். நாம் அந்தப் பாவங்களைச் செய்யும்போது, சாத்தான் நம்மைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:3-5


நாம் ஞானஸ்நானம் பெற்று விசுவாசத்தோடு இருக்கும்போது, தேவனிடம் நெருங்கி வருகிறோம். இயேசுவின் மூலம், நாம் பாவத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறோம். மேலும், கிறிஸ்துவின் சரீரத்தை நம்மில் அணிந்திருப்பதால், நாம் அவரை உண்மையுடன் பின்பற்றலாம், இது தேவனின் ஆவிக்கு விரோதமான மாம்ச இச்சைகளுக்கு எதிராக நம்மை நடக்க வைக்கிறது.

  • ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3:27

  • மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியர் 5:17

கிறிஸ்தவப் போராட்டம் vs உலகப் போராட்டம்

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் நடக்கும்போது, தெரியாத நபர்களிடமிருந்தும், தெரியாத இடங்களிலிருந்தும் நமக்குப் போராட்டங்கள் இருக்கலாம். நமக்குத் தெரியாத, நெருங்கிய தொடர்பிலும் இல்லாத இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று நாம் ஆச்சரியப்படலாம். கடந்த காலத்தில் வந்தேயிராத சில நோய்களை நாம் அனுபவிக்கலாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நடக்கும் இந்தப் போராட்டங்கள் வானமண்டலங்களில் உள்ளவைகளுக்கும் (தேவ ஜனங்கள்) சாத்தானுக்கும் (உலக மக்கள்) எதிராக நடக்கும் போராட்டம். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அந்தகாரத்தின் அதிகாரங்களோடு (சாத்தான்) நடக்கும் போர்.

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12


உலகத்தையும் அதன் சோதனைகளையும் பயன்படுத்தி ஜனங்களை தேவனிடமிருந்து விலக்கி பாவ வாழ்க்கைக்கு வழிநடத்த சாத்தான் முயற்சிக்கிறான். இதுவே இந்த கிறிஸ்தவப் போராட்டத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.


நாம் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு தாமே கூறி இருக்கிறார். சிலுவை, நாம் இயேசுவைப் பின்தொடரும் போது வருகிற உலகின் போராட்டங்களைக் குறிக்கிறது. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24


சிலர் வாழ்க்கையில் எந்தப் போராட்டமும் இருக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. போராட்டங்கள் நம்மை பலவீனப்படுத்துவதற்கு வராமல் ஆவிக்குரிய ரீதியில் வளரவும், தேவனின் திட்டங்களைப் புரிந்து கொள்ளவும், அவரை நெருங்கவும் உதவுகின்றன. இந்த சவால்கள் வந்து கொண்டே தான் இருக்கும், ஏனென்றால் பிசாசானவன் தனது நேரம் முடியப் போகிறது என்பதை அறிந்து, தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறான்.

ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 12:12


போராட்டங்களின் ஆதாரம் மற்றும் முறைகள்

நாம் ஏன் போராட்டத்தை அனுபவிக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டோம். அந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் மூலகாரணம் சாத்தான் தான். அவனுக்கு எதிராகப் போரிடுவதற்கு முன்பாக எதிரியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆவிக்குரிய போரில், எதிரியை நாம் அறியவில்லை என்றால், போராடுவது கடினம். மேலும், இந்தப் போராட்டங்களில் தோற்றுப்போய், நமது பாவ வழிகளுக்குத் திரும்ப நேரிடும்.எதிரியை விவரிப்பதன் நோக்கம் அவனை மகிமைப்படுத்துவதற்காக அல்ல, அவனையும் அவனது பலத்தையும் அறிந்து கொள்வதற்காக. இது போராடுவதற்கு நமக்கு உதவுகிறது.


சாத்தான் என்பவன் யார்?

  • சாத்தான் தேவ தூதர்களில் ஒருவன் (காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்) - அவன் பெருமையால் நிரம்பியிருந்தான். (உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்). அதன் விளைவாக அவன் தேவனுக்கு எதிராக பாவம் செய்தான். பாவத்தின் காரணமாக அவன் பரத்திலிருந்து தள்ளப்பட்டான். அவன் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து தள்ளி விடப்பட்டது வரையிலான விரிவான பார்வை எசேக்கியேல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (இந்தப் பகுதியானது தீருவின் பெருமைமிக்க ராஜாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது. எசேக்கியேல் தீர்க்கதரிசி அதை சாத்தானின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுகிறார்).

நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக் கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். எசேக்கியேல் 28:13-17

  • அவனுடைய தனிப்பட்ட பெயரான, "சாத்தான்" என்பது "எதிரி" என்று பொருள்படும். இந்தப் பெயர் அவனின் அடிப்படை இயல்பைக் குறிக்கிறது: அவன் தேவனுக்கும், அவர் செய்யும் அனைத்திற்கும், அவர் நேசிக்கும் யாவற்றிற்கும் எதிர்த்து நிற்கிறவனாய் இருக்கிறான்.அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோனிக்கேயர் 2:4

  • அவன் தன்னை தேவனைப் போல் காண்பிக்கிறவனாய் இருப்பதால் நாம் அவனை ஆராதிக்க வேண்டும் என்று விரும்புகிறான். உலகத்திலும் பரத்திலும் உள்ள அனைத்தும் தேவனைத் தொழுது கொள்வதால் நாம் அவனைத் தொழுது கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். பிரபஞ்சத்தின் அதிபதியாக இருக்கும் அவன், நாம் உலகப்பிரகாரமாகவும், உலக ஆசைகளுக்கு அடிபணிந்தும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

  • சாத்தானின் பெயர்கள் - சாத்தான் / பிசாசு / அவதூறு செய்பவன் / பெயல்செபூல் / பிரபஞ்சத்தின் அதிபதி / வானமண்டலத்தின் அதிபதி / இந்த யுகத்தின் தேவன் / லூசிபர் / வஞ்சிப்பவன் - அவன் இந்த எல்லாப் பெயர்களுக்கும் தகுதி உள்ளவன். எல்லாப் பெயரும் ஒன்றுதான்.

சாத்தானின் குணங்கள்

  • அவன் ஞானமும் பூரண அழகும் நிறைந்தவன் - மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். எசேக்கியேல் 28:12

  • விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் - அவன் காரியங்களை செய்வதில் வல்லவன். அவன் வஞ்சக ஆவியின் மூலம் நம்மை ஏமாற்றுவதற்கு இந்தக் குணநலனைப் பயன்படுத்துகிறான்.

  • நிறைந்த ஞானம் - அவனது ஞானத்தின் காரணமாக மிகவும் தந்திரமானவனாக இருக்கிறான். நம் மனித மனத்தால் புரிந்து கொள்ள முடியாத அளவு சூழ்ச்சி செய்வதில் தேர்ந்தவனாயிருக்கிறான். மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. எசேக்கியேல் 28:2

  • தந்திரம் - அவன் மிகவும் புத்திசாலி, உங்களால் அவனை எளிதில் அடையாளம் காண முடியாது. அவன் தன்னைத் தேவன் என்று நம்மை நம்ப வைக்க தேவனின் குணாதிசயங்களைப் (ஒளி / நீதி) பின்பற்றுகிறான்.

  • அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். 2 கொரிந்தியர் 11: 14-15

  • வலிமையானவன் - அசுத்த ஆவிகளால் பிணைக்கப்பட்ட ஒருவன் எவ்வளவு வலிமையானவனாக மாறுகிறான் என்பதை மாற்கு கூறுகிறார் - அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. மாற்கு 5:2-4

  • சூனியம், மந்திர வித்தைகளால் அற்புதங்கள் செய்பவன் – அவனது அற்புதசக்தியைப் பற்றியும், தேவன் மோசே மற்றும் ஆரோன் மூலம் பார்வோனை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றியும் யாத்திராகமம் 7 மற்றும் 8 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது - கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப்போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான். யாத்திராகமம் 7:8-13

  • உலகமும் அவனது ராஜ்ஜியமும் பிரிக்கப்படாதவை - சாத்தானுக்கு சேனையும் / அதிபதிகளும் உண்டு - ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12

  • அவனது அனுபவம் - சாத்தானுடைய வஞ்சிக்கும் மற்றும் ஏமாற்றும் அனுபவத்தைக் குறித்து குறைத்து மதிப்பிடாதீர்கள். நமது முற்பிதாக்களாகிய ஆதாம் ஏவாள் தொடங்கி 6000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலை செய்து வருகிறான். எனவே அவனது அனுபவத்திற்கு நாம் நிகரானவர்கள் இல்லை.

  • அவனது அதீத செயல்பாடு - சாத்தான் மிகவும் சுறுசுறுப்பானவன். அவன் எல்லா இடங்களையும் சுற்றித் திரிகிறான். அவனால் ஒரு இடத்தில் மட்டுமே இருக்க முடியும். கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். யோபு 2:2

சாத்தானின் இந்தக் குணாதியசங்களைப் படிக்கும் போது, மிகவும் வலிமையான, சக்தி வாய்ந்த ஒரு எதிரியுடன் நாம் சண்டையிடுவதாக உணரலாம். முன்பே சொன்னது போல், அவனைப் புகழ்வது நோக்கம் அல்ல, அவனைப் பற்றி அறிந்து கொள்வதே நமது நோக்கம். திடன் கொள்ளுங்கள். நம் தேவன் சாத்தானை விட வல்லமையும் பலமும் வாய்ந்தவர். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் (மனிதர்கள் / உலகம் / சாத்தான் உட்பட உலகின் எல்லாவற்றையும்) படைத்தவர். படைத்தவருக்கு எதிராக சாத்தான் போரிடுகிறான். சாத்தான் ஒரு “சிருஷ்டிக்கப்பட்ட" உயிரினம் என்பதால், அவன் "சிருஷ்டித்த" தேவனை விடக் கீழானவன். தேவனைப் போலல்லாமல், அவனுக்கு வரம்புகள் உண்டு.

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4

நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. 2 கொரிந்தியர் 10:3-4


போராட்ட முறைகள்

  • வஞ்சனை - அவன் ஜனங்களை வஞ்சிக்கிறான், அது அவனுடைய முதலாவது முக்கியமான ஆயுதமாகும். இதை ஆதாம் / ஏவாளின் ஆரம்ப நாட்களிலிருந்து செய்து வருகிறான். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஆதியாகமம் 3:1

  • பயம் - சூழ்நிலையைப் பற்றி திகில் உண்டாக்கி அதினால், தேவனின் சித்தத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும்படி பயத்தைத் தூண்டுகிறான். என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். லூக்கா 12:4

  • பிரிவினை - யாரும் கிறிஸ்துவில் ஒன்றுபடுவதையோ அல்லது எந்த ஒரு குடும்பமும் ஒற்றுமையாயிருப்பதையோ அவன் விரும்பவில்லை. அவன் பிரிவினை உண்டாக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்திப் பிரிக்கிறான். அவன் செய்த இதே மாதிரியான காரியத்தை 1நாளாகமத்தில் வாசிக்கிறோம். சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. 1 நாளாகமம் 21:1

  • பொய்க்குப் பிதா - அவன் பொய்யனாக இருக்கிறான். உண்மைக்கு எதிரான பொய்களை சொல்லி நம்மை ஏமாற்றுகிறான். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்;அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44

  • நம் கண்களைக் குருடாக்குகிறான் - கண்களைக் குருடாக்குகிறான் என்பது ஆவிக்குரிய ரீதியில் இருந்து பார்க்கப்படுகிறது. நாம் ஒருவரை பாவத்தில் இருப்பதாகக் காணலாம், ஆனால் அவர்கள் செய்யும் பாவத்தை அவர்களால் அடையாளம் காண முடியாது.தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4:4

  • தேவனைப் போலவே தன்னைக் காண்பித்துக் கொள்கிறான் - கள்ள அப்போஸ்தலர்கள் மூலம் தேவனைப் போலவே தன்னைக் காண்பித்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 2 கொரிந்தியர் 11:13-14

  • இச்சை மற்றும் பெருமை – அவன் பூரண அழகுள்ளவன். அதனால் பாவம் செய்யும்படி, உலக இன்பங்களுக்கு நம்மைக் கவர்ந்திழுக்க காம எண்ணங்களையும் ஆசைகளையும் நம்மில் உண்டாக்குகிறான். அவன் பெருமையால் நிறைந்திருப்பதால், தேவனின் கிருபையிலிருந்து நம்மை விழ வைப்பதற்கு நம்மில் பெருமையைக் கொண்டுவருகிறான். ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2:16

  • சோதனைகள் - சோதனைகள் எப்போதும் சாத்தானிடமிருந்து தான் வருகின்றன. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. யாக்கோபு 1:13

போராட்டங்கள் மற்றும் ஆவிக்குரிய முதிர்ச்சி

சாத்தான் நம்மைத் தொடுவதற்கான சாவியை தேவன் வைத்திருக்கிறார். அவருடைய அனுமதியின்றி அவனால் நம்மைத் தொட முடியாது. தேவன் சாத்தானுக்கு அனுமதி கொடுத்ததை யோபு புத்தகத்தில் வாசிக்கிறோம். கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான். யோபு 1:8,12. நமக்கு இந்தப் போராட்டங்கள் வர தேவன் அனுமதிக்கிறார் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

  1. விசுவாசத்தைப் பலப்படுத்த - நம்மால் துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது. அதை நம் சொந்த பலத்தினால் அல்லாமல் கிறிஸ்துவில் உள்ள "விசுவாசத்தால்" சகித்துக்கொள்ள கற்றுக்கொள்கிறோம். இது வாழ்க்கையின் இந்தப் போராட்டங்களில் நமக்கு உதவுகிறது. பவுல் அதை 2 கொரிந்தியர் 4:8-10 இல் மிகவும் பொருத்தமாகக் கூறுகிறார். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். நம்முடைய விசுவாசம் சோதனைகளை சகித்துக் கொள்ளவும், தேவனை நெருங்கவும் உதவுகிறது. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 2 கொரிந்தியர் 5:6

  2. கிறிஸ்துவில் சகிப்புத்தன்மையைப் பலப்படுத்த - கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துள்ள விசுவாசிகள் யாவரையும் தொந்தரவு செய்ய சாத்தான் எல்லா வழிகளையும் கண்டுபிடிக்கிறான். "உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே", என்று வசனம் கூறுகிறது. இந்தப் பாடுகள் யாவும் சிறிது காலத்திற்கு தான். சிலர் நீண்ட காலத்திற்கும், சிலர் குறுகிய காலத்திற்கும் துன்பப்படுகிறார்கள், ஆனால் நம் பலத்தின் அடிப்படையில் நம்மால் எவ்வளவு தாங்க முடியும் என்பதை தேவன் தீர்மானிக்கிறார். விசுவாசத்தில் உறுதியாய் இருந்து, அவனை எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 1 பேதுரு 5:9-10

  3. நம்மைத் தூய்மையானவர்களாகவும் நீதிமான்களாகவும் ஆக்குவதற்கு நம்மைப் பலப்படுத்த - சில போராட்டங்கள் தேவனின் விருப்பத்திற்கு விரோதமாக நம்மிடம் காணப்படுகிற தீய பழக்கங்களை உடைப்பதற்காக வரலாம். சிலருக்கு மிகுந்த கோபம், சிலருக்கு உலக இன்பத்தின் மீதான மோகம், சிலருக்கு வாழ்க்கையில் உள்ள விக்கிரகங்கள் (பணம் / வேலை / சரீர காதல் / ஆசைகள் போன்றவை). நம்மைத் தூய்மையாக்குவதற்கு இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். 1 தெசலோனிக்கேயர் 4:7-8

  4. மற்றவர்களுக்கு சாட்சியாக இருப்பதற்காக - வாழ்க்கையின் சில போராட்டங்கள் உங்கள் சொந்த தேவைகளுக்காக மட்டுமாயில்லாமல், விசுவாசத்தில் குறைந்த ஜனங்கள் விசுவாசத்தில் வளரும்படிக்கும் தேவனிடம் வரும்படிக்கும் வருகிறது. அவர் மற்ற அவிசுவாசிகளை தம்மிடத்தில் திருப்பும்படிக்கு நம் சாட்சியைப் பயன்படுத்துவார். சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, 1 தெசலோனிக்கேயர் 5:9,11

  5. வளர்வதற்காக - நாம் கிறிஸ்துவில் குழந்தையாக இருப்பதை தேவன் விரும்பவில்லை, நாம் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்தப் போராட்டங்கள் குழந்தை நிலையிலிருந்து கிறிஸ்துவில் முதிர்ச்சியடைந்த நபராக வளர நம்மைப் பலப்படுத்துகின்றன. சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 1 பேதுரு 2:2

  6. போராட்டங்கள் முழங்கால்படியிடுவதற்காக / இரட்சிப்பின் தலைக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள் - நாம் போராட்டங்களைச் சந்திக்கும் போது, உதவிக்காக நம் பிதாவின் முன் முழங்கால்படியிடுகிறோம். நம்முடைய சுயசார்பு ஒழிந்து போய், சோதனைகளைக் கடக்க உதவுவதற்கு தேவ பலத்தை நாம் சார்ந்திருக்கிறோம்.

    1. பவுல் இவ்வாறு கூறுகிறார், இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, எபேசியர் 3:14

    2. தாவீது கூறுகிறார், நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6

    3. தேவனின் ஆயுத வர்க்கத்தை தரித்துக்கொள்ளுமாறு பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறார் - கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:10-11,13-17


ஆவிக்குரிய ரீதியில் முதிர்ச்சி அடைவதை விட்டுவிடாதீர்கள்

  • உங்கள் போராட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். தேவனை விசுவாசித்து, உங்கள் போராட்டத்தில் இருந்து விடுபட அவருடைய உதவியை நாடுங்கள். நீங்கள் தேவனின் பிள்ளைகள் என்பதையும் எதிரிகளை நசுக்க அவருடைய அனைத்து வல்லமையும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் வையுங்கள். இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் `சேதப்படுத்தமாட்டாது. அந்த வேளையில் இயேசு லூக்கா 10:19-21

  • கிறிஸ்துவில் உள்ள உங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள். பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். எபேசியர் 6:16

  • போராட்டங்களின் போது தேவனின் உதவிக்காக தொடர்ந்து ஜெபியுங்கள் - எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 6:18

  • வேதத்தைப் படியுங்கள், ஏனென்றால் சாத்தானின் பொய்களிலிருந்து விடுபட வசனம் மட்டுமே நமக்கு உதவும். தேவனின் வசனம் வெளிச்சமாயிருக்கிறது, இந்த வெளிச்சம் நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கும் சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; எபேசியர் 6:14

  • நாம் ஆராதிக்கும் தேவன் சாத்தானை விட வலிமையானவர் என்பதை நினைவில் வையுங்கள். அவர் எந்த சூழ்நிலையிலும் உங்களைக் கைவிடமாட்டார் - நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். உபாகமம் 31:6

bottom of page